அகநானூறு

அகநானூறு

களிற்றியாணை நிரை


49
பாடியவர்: வண்ணப்புறக் கந்தரத்தனார், 
திணை:  பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன் நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என
கொடுந் தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி  5
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினேனாக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப
பல் கால் முயங்கினள் மன்னே அன்னோ
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி  10
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மடமான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன் கழிதல் அறியின் தந்தை
அல்கு பதம் மிகுத்த கடியுடை வியன் நகர்
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல  15
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடு வழி ஆடு வழி அகலேன் மன்னே.


50
பாடியவர்: கருவூர் பூதஞ்சாத்தனார், 
திணை:  நெய்தற் திணை 
தோழி பாணனிடம் சொன்னது

கடல் பாடு அவிந்து தோணி நீங்கி
நெடு நீர் இருங்கழிக் கடு மீன் கலிப்பினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்
மாண் இழை நெடுந்தேர் பாணி நிற்பப்
பகலும் நம் வயின் அகலான் ஆகிப்  5
பயின்று வரும் மன்னே பனி நீர்ச் சேர்ப்பன்
இனியே மணப்பு அருங்காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண எல்லி  10
மனை சேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் எனக்
கண் நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்ணுதல் அரிவை யான் என் செய்கோ எனவே.

51
பாடியவர்: பெருந்தேவனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற
நீள் எரி பரந்த நெடுந்தாள் யாத்து
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி  5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை
நீ உழந்து எய்தும் செய் வினைப் பொருட்பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள் வயிற்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது  10
ஏந்து முலை முற்றம் வீங்கப் பல் வீழ்
சேய் இழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
மனை முதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே.

52
பாடியவர்: நொச்சி நியமங்கிழார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்
ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்  5
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது எனத்தம்
மலை கெழு சீறூர் புலம்பக் கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம் கொல் அறியலெம் கொல் என  10
இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை
காம நோய் எனச் செப்பாதீமே.  15


53
பாடியவர்: சீத்தலை சாத்தனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

அறியாய் வாழி தோழி இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கான் முருங்கை வெண் பூத் தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை  5
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்  10
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்  15
அருளே காதலர் என்றி நீயே.

54
பாடியவர்: மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், 
திணை:  முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்
ஓவத்து அன்ன கோபச் செந்நிலம்
வள் வாய் ஆழி உள் உறுபு உருளக்  5
கடவுக காண்குவம் பாக மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்
கனையலம் குரல் கால் பரி பயிற்றிப்
படுமணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர்  10
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க
மனை மனைப் படரும் நனை நகு மாலைத்
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்  15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி
முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால் என
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித்  20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே.


55
பாடியவர்: மாமூலனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவியின் தாய் அருகில் வாழ்பவர்களிடம் சொன்னது

காய்ந்து செலல் கனலி கல் பகத் தெறுதலின்
நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
உளி முக வெம்பரல் அடி வருத்துறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம்
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்  5
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்  10
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகி யாங்குப் பிரிந்து இவண்  15
காதல் வேண்டி, என் துறந்து
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே.

56
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், 
திணை:  மருதத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

நகை ஆகின்றே தோழி நெருநல்
மணி கண்டன்ன துணி கயம் துளங்க
இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்பு விடு பன் மலர் மாந்திக் கரைய  5
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்  10
புனிற்று ஆப் பாய்ந்தெனக் கலங்கி யாழ் இட்டு
எம் மனைப் புகுதந்தோனே அது கண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர் சென்று
இம்மனை அன்று அஃது உம்மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி  15
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.

57
பாடியவர்: நக்கீரர், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

சிறு பைந்தூவிச் செங்கால் பேடை
நெடுநீர் வானத்து வாவுப் பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
பெறு நாள் யாணர் உள்ளிப் பையாந்து
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்  5
குறுங்கால் இற்றிப் புன்தலை நெடு வீழ்
இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப்
பெருங்கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை
யாமே எமியம் ஆகத் தாமே  10
பசுநிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇச் சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக்  15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து
பானாள் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே.

58
பாடியவர்: மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தலைவி தலைவனிடம் சொன்னது

இன்னிசை உருமொடு கனை துளி தலைஇ
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழைத்
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை  5
கூதிர் இல் செறியும் குன்ற நாட
வனைந்து வரல் இள முலை ஞெமுங்கப் பல் ஊழ்
விளங்கு தொடி முன் கை வளைந்து புறம் சுற்ற
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்  10
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி
மனை மரம் ஒசிய ஒற்றிப்
பலர் மடி கங்குல் நெடும்புற நிலையே.

59
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை:  பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்
வருந்தினை வாழியர் நீயே வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்  5
மரம் செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பிடி உணீஇயர் அம் குழை
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்  10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை
இன் தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண் நறுங்கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்  15
வீங்கு இறைப் பணைத்தோள் நெகிழச் சேய்ந் நாட்டு
அருஞ்செயல் பொருட்பிணி முன்னி நப்
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே.

60
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை:  நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

பெருங்கடல் பரப்பில் சேயிறா நடுங்கக்
கொடுந் தொழின் முகந்த செங்கோல் அவ் வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து  5
கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ  10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி எனக்
கொன்னும் சிவப்போள் காணின் வென்வேல்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினுஞ்செறிய
அருங்கடிப் படுக்குவள் அறன் இல் யாயே.  15