அகநானூறு
நித்திலக்கோவை
349
பாடியவர்: மாமூலனார்,
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது
அரம் போழ் அவ் வளை செறிந்த முன் கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய
எவன் ஆய்ந்தனர் கொல் தோழி ஞெமன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம் மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே 5
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக
அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு
ஏழில் குன்றத்துக் கவாஅன் கேழ் கொளத்
திருந்து அரை நிவந்த கருங்கால் வேங்கை 10
எரி மருள் கவளம் மாந்திக் களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக்கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
350
பாடியவர்: சேந்தங் கண்ணனார்,
திணை: நெய்தற் திணை
தோழி தலைவனிடம் சொன்னது
கழியே சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப
எறி திரை ஓதம் தரல்ஆனாதே
துறையே மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர் அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே 5
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெருநீர்ச் சேர்ப்ப
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி 10
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலி கெழு கொற்கை எதிர் கொள இழிதரும்
குவவு மணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே. 15
351
பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார்,
திணை: பாலைத் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி
பெறல் அருங்கேளிர் பின் வந்து விடுப்ப
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவின் இயக்கம்
அறிவுறூஉம் கொல்லோ தானே கதிர் தெற 5
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
செய் குறி ஆழி வைகல் தோறு எண்ணி 10
எழுது சுவர் நனைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங்குழைத் தெறிப்ப
திருந்து இழை முன் கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்துழிக் கிடக்கை
வருந்து தோள் பூசல் களையும் மருந்தென 15
உள்ளுதொறு படூஉம் பல்லி
புள்ளுத் தொழுது உறைவி செவி முதலானே?
352
பாடியவர்: அஞ்சியத்தை மகள் நாகையார்,
திணை: குறிஞ்சித் திணை
தலைவி தோழியிடம் சொன்னது
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆகக் கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை 5
முழவன் போல அகப்படத் தழீஇ
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் 10
நல்லை காண் இனிக் காதல் அம் தோழி
கடும் பரி புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரு பனுவல்
தொல்லிசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணின் உள்ளும் 15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.
353
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்,
திணை: பாலைத் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஆள் வினைப் பிரிதலும் உண்டோ பிரியினும்
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும்
கனவுக் கழிந்தனையவாகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் 5
இந் நிலை அறியாய் ஆயினும் செந்நிலை
அமை ஆடு அம் கழை தீண்டிக் கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரிவாய்க் கோடை
நெடுவெண் களரி நீறு முகந்து சுழலக்
கடுவெயில் திருகிய வேனில் வெங்காட்டு 10
உயங்கு நடை மடப் பிணை தழீஇய வயங்கு பொறி
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கித்
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து 15
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி 20
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனை இழை குணனே?
354
பாடியவர்: மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்,
திணை: முல்லைத் திணை
தலைவனிடம் அருகில் உள்ளவர்கள் சொன்னது
மத வலி யானை மறலிய பாசறை
இடி உமிழ் முரசம் பொருகளத்து இயம்ப
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவைப் பல்லினம் புறவு தொறு உகளக்
குழல்வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து 5
இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட
வலவன் வள்பு வலி உறுப்பப் புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய 10
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டு உறைவது கொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே?
355
பாடியவர்: தங்கால் பொற்கொல்லனார்,
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்
மூது இலை ஒழித்த போது அவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும் 5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்த்
தாது உகு தண் பொழில் அல்கிக் காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் 10
புலந்தனம் வருகம் சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருள் இலையாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே.
356
பாடியவர்: பரணர்,
திணை: மருதத் திணை
தோழி தலைவியிடம்சொன்னது
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகுவார் அருந்தப் பகுவாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டென் 5
பொன் தொடி முன் கை பற்றினனாக
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே
தொன் நசை காவாமை நன்னன் பறம்பில்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் நாவினேனாகி மற்றுது 10
செப்பலென் மன்னால் யாய்க்கே நல்தேர்க்
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளானாகவும் ஒல்லார்
கதவ முயறலும் முயல்ப அதாஅன்று 15
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன் துறை
நன்னன் ஆஅய் பறம்பு அன்ன
மின்னீர் ஓதி என்னை நின் குறிப்பே? 20
357
பாடியவர்: எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்,
திணை: பாலைத் திணை
தோழி தலைவியிடம் சொன்னது
கொடு முள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
தட மருப்பு யானை வலம்படத் தொலைச்சி
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து 5
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இருங்கானத்து வழங்கல் செல்லாது
பெருங்களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்
தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பல்
பெருங்காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் 10
திருந்து இழைப் பணைத்தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகு பெயல் நிலைஇய தீ நீர்ப் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்தன்ன நின் 15
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.
358
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்,
திணை: குறிஞ்சித் திணை
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி
கண் நேர் இதழ தண் நறும் குவளை 5
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தையாகிப் புலம்பு கொண்டு
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின் அன்னோ 10
என்னென உரைக்கோ யானே துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள்ளருவி
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்பத் தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே? 15
359
பாடியவர்: மாமூலனார்,
திணை: பாலைத் திணை
தோழி தலைவியிடம் சொன்னது
பனி வார் உண்கணும் பசந்த தோளும்
நனி பிறர் அறியச் சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்
நீடினர் மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை அவரே 5
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாணலம் தம்மொடு கொண்டனர் முனாஅது
அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயம் எழுந்தாங்கு
வீழ் பிடி கெடுத்த நெடுந்தாள் யானை 10
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்
பொய்யா நல் இசை மா வண் புல்லி
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
முதைச் சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉப் புகை
அருவித் துவலையொடு மயங்கும் 15
பெரு வரை அத்தம் இயங்கியோரே.
360
பாடியவர்: மதுரைக் கண்ணத்தனார்,
திணை: நெய்தற் திணை
தோழி தலைவனிடம் சொன்னது
பல் பூந்தண் பொழில் பகல் உடன் கழிப்பி
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
குடவயின் மா மலை மறையக் கொடுங்கழித்
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப 5
வெருவரு கடுந்திறல் இரு பெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் 10
பாணி பிழையா மாண் வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப 15
இனமீன் அருந்து நாரையொடு பனை மிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன்னென
நன்மலர் நறுவீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.