அகநானூறு

அகநானூறு

நித்திலக்கோவை


361
பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

தூ மலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண்
அணி வளை முன் கை ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்  5
கவவுப் புலந்து உறையும் கழி பெருங்காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்லென
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே
கரியாப் பூவின் பெரியோர் ஆர  10
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல் வேட்டாஅங்கு
உள்ளுதல் ஓம்புமதி இனி நீ முள் எயிற்றுச்
சின் மொழி அரிவை தோளே பன் மலை
வெவ்வறை மருங்கின் வியன் சுரம்  15
எவ்வம் கூர இறந்தனம் யாமே.

362
பாடியவர்: வெள்ளிவீதியார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழிதலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறை
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து
பைங்கண் வல்லியம் கல் அளைச் செறிய
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு  5
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென்வேல் ஏந்தி
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின்
இன்றிப் பொழுதும் யான் வாழலனே 10
எவன் கொல் வாழி தோழி நம் இடை முலைச்
சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிர்ப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்
நிழல் கொண்டனவால் திங்கள் அம் கதிரே.  15

363
பாடியவர்: மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ
அகல் இரு விசும்பிற் பகல் செலச் சென்று
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய
பொழுது கழி மலரின் புனை இழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப்  5
புல் இலை நெல்லிப் புகார் இல் பசுங்காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி அதர் பார்த்திருந்த
கொலை வெங்கொள்கைக் கொடுந்தொழின் மறவர் 10
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப் புண் கூர்ந்தோர் எய்திய
வளைவாய்ப் பருந்தின் வள் உகிர்ச் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும்
இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய  15
செய் வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி மை எழில்
துணை ஏர் எதிர்மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெருங்கவின் கொளவே.

364    
பாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென அவல் தோறு
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
நீடு இணர்க் கொன்றை கவின் பெறக் காடுடன்  5
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக் கல்ல
பகுவாய்ப் பைஞ்சுனை மா உண மலிரக்
கார் தொடங்கின்றே காலை காதலர்
வெஞ்சின வேந்தன் வியன் பெரும் பாசறை  10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாது செய்வாம் கொல் தோழி நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே.

365
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை
அத்தம் நடுகல் ஆள் என உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர்  5
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாயாகிப் பெயர்பு ஆங்கு  10
உள்ளினை வாழிய நெஞ்சே வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
தண் கமழ் புது மலர் நாறும்
அம் சில் ஓதி ஆய் மடத்தகையே.   15.

366 
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை: மருதத் திணை
தோழி தலைவனிடம் சொன்னது, அவன் பரத்தையிடமிருந்து பிரிந்து வந்தப் பின்

தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலியப் போர்ப்ப அழித்து
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி
கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்  5
இரு நீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர்
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின் சினைஇக்
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
இருஞ்சேற்று அள்ளல் எறிசெருக் கண்டு
நரை மூதாளர் கை பிணி விடுத்து  10
நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன
நலம் பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு
மணங்கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தற்பிழைத்தமை அறிந்து  15
கலுழ்ந்த கண்ணள்  எம் அணங்கு அன்னாளே.

367
பாடியவர்: பரணர், 
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது

இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய
முனையுழை இருந்த அம் குடிச் சீறூர்க்  5
கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறைக்
குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்  10
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்றம்ம
நல் அக வனமுலை அடையப் புல்லுதொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல்  15
செயிர் தீர் இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.

368
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: குறிஞ்சித் திணை
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

தொடுதோல் கானவன் சூடுறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்துக்
தோடு வளர் பைந்தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய  5
குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறி வாரா மரம் பயில் இறும்பிற்
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீ நீர்  10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடிப்
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து சில் நாள்
கழியாமையே வழி வழிப் பெருகி
அம் பணை விளைந்த தேன் கண் தேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்  15
எவன் கொல் வாழி தோழி கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே?

369
பாடியவர்: நக்கீரர், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

கண்டிசின் மகளே கெழீஇ இயைவு எனை
ஒண் தொடி செறித்த முன் கை ஊழ்கொள்பு
மங்கையர் பல பாராட்டச் செந்தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சேய் இழை மகளிர் ஆயமும் அயரா  5
தாழியும் மலர் பல அணியா கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பமை நோன் சுவர்
பாவையும் பலி எனப் பெறாஅ நோய் பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய்  10
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
எற் புலந்து அழிந்தனளாகித் தன் தகக்
கடல் அம் தானைக் கைவண் சோழர்
கெடல் அரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்நகர்ப் புதுவது புனைந்து  15
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக் காழ் நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த  20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத்தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனைச் சிலம்புடன் கழீஇ  25
மேயினள் கொல் என நோவல் யானே.

370
பாடியவர்: அம்மூவனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவே
காயல் வேய்ந்த தேயா நல் இல்  5
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அருங்கடிப் படுவலும் என்றி மற்று
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே
வாழலென் என்றி ஆயின் ஞாழல்
வண்டு படத் ததைந்த கண்ணி நெய்தல்  10
தண் அரும் பைந்தார் துயல்வர அந்திக்
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து
ஆடுமகள் போலப் பெயர்தல்  15
ஆற்றேன் தெய்ய அலர்க இவ்வூரே.

371
பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார், 
திணை: பாலைத் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செவ்வாய்ப் பகழிச் செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ் துணை உள்ளிக்
குறு நெடுந் துணைய மறி புடை ஆடப்
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை  5
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தலம் படுவில் சில் நீர் உண்ணாது
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து  10
என்ன ஆம் கொல் தாமே தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?

372
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை
அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண்
வேண் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து  5
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி
நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடுமுனை அலைத்த கொடு வில் ஆடவர்  10
ஆ கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்
பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர்
கோண் தணி எயிலிற் காப்புச் சிறந்து  15
ஈண்டு அருங்குரையள் நம் அணங்கியோளே.

373
பாடியவர்: பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர் எழுந்து
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்துப்
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சக்
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்
அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப்  5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர
மீளி உள்ளம் செலவு வலியுறுப்பத்
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன்னிலை உள்ளும் நம் நிலை உணராள்
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை  10
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா
ஆய் இதழ் மழைக் கண் மல்க நோய் கூர்ந்து
பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல்  15
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவுவாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போலத்
துயில் துறந்தனள் கொல் அளியள் தானே.