அகநானூறு

அகநானூறு

நித்திலக்கோவை


388
பாடியவர்: ஊட்டியார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

அம்ம வாழி தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்
நறு விரை ஆரம் அறவெறிந்து உழுத
உளைக் குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல்
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி  5
ஓங்கு இருஞ்சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கையம் கவட்டு இடை நிவந்த இதணத்துப்
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி
இன்னிசை ஓரா இருந்தனமாக
மையீர் ஓதி மட நல்லீரே  10
நொவ்வு இயல் பகழி பாய்ந்தெனப் புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்து உழிப் போகல் உறுமோ மற்று என
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப்புடை ஆடச்
சொல்லிக் கழிந்த வல் வில் காளை  15
சாந்தார் அகலமும் தகையும் மிக நயந்து
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய்  20
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே கனல் சின
மையல் வேழம் மெய்யுளம் போக
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி வழி ஒற்றி  25
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே.

389
பாடியவர்: நக்கீரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

அறியாய் வாழி தோழி நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரிப் போது அணிந்து
தேங்கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்
பல் இதழ் எதிர்மலர் கிள்ளி வேறு பட
நல் இள வனமுலை அல்லியொடு அப்பியும்  5
பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு
அம் செம் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
எம்  புறந்தந்து நின் பாராட்டிப்
பல் பூஞ்சேக்கையின் பகலும் நீங்கார்
மனை வயின் இருப்பவர் மன்னே துனை தந்து  10
இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ் பட
நல்லிசை தம் வயின் நிறுமார் வல்வேல்  15
வானவரம்பன் நல்நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெங்கடற்று அடை முதல்
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலறக்
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெருங்களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை  20
செம்புல மருங்கில் தன் கால் வாங்கி
வலம்படு வென்றியொடு சிலம்பகம் சிலம்பப்
படுமழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே.

390
பாடியவர்: அம்மூவனார், 
திணை: நெய்தற் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, அல்லது தலைவன் தன் நண்பனிடம் சொன்னது

உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகும் நெடு நெறிக்
கண நிரை வாழ்க்கை தான் நன்று கொல்லோ
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள  5
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்கு வயின் ஒல்கி
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ எனச் சேரி தொறும் நுவலும்
அவ் வாங்கு உந்தி அமைத் தோளாய் நின்  10
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் எனச்
சிறிய விலங்கினமாகப் பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற  15
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது என் நெஞ்சே.

391
பாடியவர்: காவன்முல்லைப் பூதனார், 
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது

பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண்கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர் கொள்வு  இடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி  5
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்தொறும் பண்டைப்
பழ அணி உள்ளப்படுமால் தோழி
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி
படாஅ வாகுமெம் கண்ணே கடாஅ  10
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக்கை
குன்று புகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே.

392
பாடியவர்: மோசி கீரனார்,
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

தாழ் பெருந் தடக்கை தலைஇய கானத்து
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇப்
பின்னிலை முனியான் ஆகி நன்றும்  5
தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல்லியல் மட நல்லோள் வயின்
தீது இன்றாக நீ புணை புகுக என
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன்
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே  10
ஒல் இனி வாழி தோழி கல்லெனக்
கண மழை பொழிந்த கான் மடி இரவில்
தினை மேய் யானை இனன் இரிந்து ஓடக்
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல்வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென  15
மறப் புலி உரற வாரணம் கதற
நனவுறு கட்சியின் நன் மயில் ஆல
மலையுடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலே அரிதே அதாஅன்று
உரிதல் பண்பின் பிரியுநன் ஆயின்  20
வினை தவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்பத்
தன் வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலித்
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற  25
விழைதக ஓங்கிய கழை துஞ்சு மருங்கிற்
கான் அமர் நன்னன் போல
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே.

393
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய
முதைச் சுவல் கலித்த ஈர் இலை நெடுந்தோட்டுக்
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி  5
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ
வரி அணி பணைத்தோள் வார் செவித்தன்னையர்
பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச்
சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண்காழ்  10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்
களிபடு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்  15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்
நிரை பல குழீஇய நெடு மொழிப் புல்லி
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்  20
நீடலர் வாழி தோழி தோடு கொள்
உருகெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்பத்
தகரம் மண்ணிய தண் நறு முச்சிப்
புகரில் குவளைப் போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின்  25
ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே.

394
பாடியவர்: நன்பலூர் சிறுமேதாவியார், 
திணை: முல்லைத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

களவும் புளித்தன விளவும் பழுநின
சிறுதலைத் துருவின் பழுப்புறு விளை தயிர்
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு
கார் வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ்சோறு  5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக
இளையர் அருந்தப் பின்றை நீயும்
இடு முள் வேலி முடக்கால் பந்தர்ப்
புதுக்கலத்து அன்ன செவ்வாய்ச் சிற்றில்
புனை இருங்கதுப்பின் நின் மனையோள் அயரப்  10
பாலுடை அடிசில் தொடீஇய ஒரு நாள்
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇக் குறு முயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும்  15
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.

395
பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார், 
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது

தண் கயம் பயந்த வண் கால் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக்கண்
பனி வார் எவ்வம் தீர இனிவரின்
நன்று மன் வாழி தோழி தெறு கதிர்  5
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழன் மாய் இயவின்
வறன் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை
அறல் அவிர்ந் தன்ன தேர் நசைஇ ஓடிப்
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு  10
மேய் பிணைப் பயிரும் மெலிந்தழி படர் குரல்
அருஞ்சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்
திருந்து அரை ஞெமைய பெரும் புனக் குன்றத்து
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே.  15

396
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை
பரத்தைதலைவனிடம் சொன்னது

தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென
யாழிசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்  5
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே  10
இனியான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறையக்
கருந்திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒழித்தாங்கு நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ  15
ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத்
தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே.

397
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

என் மகள் பெரு மடம் யான் பாராட்டத்
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்
மணன் இடையாகக் கொள்ளான் கல் பகக்
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்  5
எளியவாக ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு எனத்
தணிந்த பருவம் செல்லான் படர்தரத்
துணிந்தோன் மன்ற துனை வெங்காளை
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப்  10
போழ் புண்படுத்த பொரி அரை ஓமைப்
பெரும் பொளிச் சேயரை நோக்கி ஊன் செத்துச்
கருங்கால் யாத்துப் பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வானுயர் நெடுங்கோட்டுக்
கோடை வெவ் வளிக்கு உலமரும்  15
புல் இலை வெதிர நெல் விளை காடே.

398
பாடியவர்: இம்மென் கீரனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவி ஆற்றிடம் சொன்னது

இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ
மென்தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து  5
இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழ நின்
குன்று கெழு நாடற்கு என்னெனப் படுமோ  10
கரை பொரு நீத்தம் உரை எனக் கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைப்
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி
நயன் அறத் துறத்தல் வல்லியோரே  15
நொதுமலாளர் அது கண்ணோடாது
அழற் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புறந்தர நந்தி ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல் பூங்கானத்து அல்கி இன்றிவண்  20
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ
குயவரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும் அவர்
ஓங்கு மலை நாட்டின் வருஉவோயே.  25

399
பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது 

சிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமையக் கானம் நாறும் கூந்தல்
நன் நுதல் அரிவை இன்னுறல் ஆகம்
பருகுவன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார்  5
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக் கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயங்கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கெனக் கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇப்  10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந் தீங்குழல் புலம்பு கொள் தெள் விளி
மையில் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்  15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய்படு மருங்கின் மலை இறந்தோரே.

400
உலோச்சனார், 
திணை: நெய்தற் திணை
தோழி தலைவியிடம் சொன்னது

நகை நன்று அம்ம தானே அவனொடு
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து
கானல் அல்கிய நம் களவு அகல
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை
நூல் அமை பிறப்பின் நீல உத்திக்  5
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி
நெய்ம் மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினைக்
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை நந் நான்கு
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇப்  10
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடைய வலவன் ஏவலின் இகு துறைப்
புனல் பாய்ந்தன்ன வாமான் திண் தேர்க்
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரிப்
பால் கண்டன்ன ஊதை வெண்மணல்  15
கால் கண்டன்ன வழி படப் போகி
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள் நீர் இட்டுச்சுரம் நீந்தித் துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
பூ மலி இருங்கழித் துயல்வரும் அடையொடு  20
நேமி தந்த நெடு நீர் நெய்தல்
விளையா இளம் கள் நாறப் பலவுடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்
பாடு எழுந்து இரங்கு முந்நீர் 25
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே.