அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


181
பாடியவர்: பரணர், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

துன் அருங்கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந்தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ  5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூர ஆடி மொசிந்து உடன் 10
பூவிரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேர்யாற்று அயிர் கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளங் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலங் கெழு நல்லிசை  15
நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசைச் 20
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென்தோள்
அணங்கு சால் அரிவை இருந்த  25
மணம் கமழ் மறுகின் மணல் பெருங்குன்றே.

182
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

பூங்கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட  5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண் புதல் குருதியொடு துயல்வர
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாடே
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல்  10
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும்
பனியொடு கலுழும் இவள் கண்ணே அதனால்
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ
உயர் சிமை நெடுங்கோட்டு உகள உக்க  15
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே.

183
பாடியவர்: கருவூர்க் கலிங்கத்தார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

குவளை உண்கண் கலுழவும் திருந்திழைத்
திதலை அல்குல் அவ்வரி வாடவும்
அத்தம் ஆர் அழுவம் நத்துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும்
நீடலர் என்றி தோழி பாடுஆன்று  5
பனித் துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகி
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு
வயவுப் பிடி இனத்தின் வயின் வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே மாலைக்  10
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற்சிரத்து ஊதை தூற்ற
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே?  15

184
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: முல்லைத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும்
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள்
அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு  5
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட
வெண்பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை
ஆர் கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித்  10
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழில் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்
கோடுடைக் கையர் துளர் எறி வினைஞர்
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்கச்
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்  15
செக்கர் வானம் சென்ற பொழுதில்
கல் பால் அருவியின் ஒலிக்கும் நற்தேர்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே.


185
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

எல் வளை ஞெகிழச் சாஅய் ஆய் இழை
நல் எழில் பணைத் தோள் இருங்கவின் அழிய
பெருங் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து
இரும்பின் இன் உயிர் உடையோர் போல
வலித்து வல்லினர் காதலர் வாடல்  5
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில்  10
பெரு விழா விளக்கம் போலப் பலவுடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

186
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
பரத்தை சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படி

வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர் மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை
இருங்கயம் துளங்கக் கால் உறு தொறும்  5
பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே
கொழுங்கோல் வேழத்துப் புணை துணையாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே
ஒண்தொடி மகளிர் பண்டை யாழ் பாட  10
ஈர்ந்தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து
இன்னும் பிறள் வயினானே மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல்
மாரி அம்பின் மழைத்தோல் பழையன்  15
காவிரி வைப்பின் போஒர் அன்ன என்
செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே.  20

187
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

தோள் புலம்பு அகலத் துஞ்சி நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச் சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்  5
தெம்முனை சிதைத்த கடும் பரிப் புரவி
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலை நாள் அன்ன
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ தோழி சேண் ஓங்கு  10
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து
எல் விருந்து அயர ஏமத்து அல்கி
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து  15
வேனில் வெற்பின் கானம் காய
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை
பனை வெளிறு அருந்து பைங்கண் யானை
ஒண் சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை  20
வாள்வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மைபடு மா மலை விலங்கிய சுரனே?

188
பாடியவர்: வீரை வெளியன் தித்தனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி எழிலியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇப்
போர்ப்புறு முரசின் இரங்கி முறை புரிந்து
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்  5
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி நாளும்
கொன்னே செய்தியோ அரவம் பொன்னென
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப்
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்  10
தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்
அழல் ஏர் செயலை அம் தழை அசை இயும்
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய மழையே.

189
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

பசும் பழப் பலவின் கானம் வெம்பி
விசும்பு கண் அழிய வேனில் நீடிக்
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மடப்பிடி தழீஇ வேறு நாட்டு
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரிக்  5
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெவ் வரை அத்தம் சுட்டிப் பையென
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை என்றும்  10
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே.  15

190
பாடியவர்: உலோச்சனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி செவிலித்தாயிடம் சொன்னது

திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எல் பட
வருதிமில் எண்ணும் துறைவனொடு ஊரே
ஒருதன் கொடுமையின் அலர் பாடும்மே
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்  5
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமைப்
பொதும்பில் புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய ஒரு நாள்
பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்
உழைக்கடல் வழங்கலும் உரியன் அதன் தலை  10
இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்தென வலவன் அழிப்ப
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரை மணிப் புரவி விரை நடை தவிர
இழுமென் கானல் விழு மணல் அசைஇ  15
ஆய்ந்த பரியன் வந்து இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே.

191
பாடியவர்: ஓரோடகத்துக் கந்தரத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அத்தப் பாதிரித் துய்த்தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ
வெண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி
தோல் புதை சிரற்று அடிக் கோல் உடை உமணர்
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி  5
அருஞ்சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர்
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி
ஓமை அம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை  10
அரும் பொருள் நசைஇப் பிரிந்து உறை வல்லி
சென்று வினை எண்ணுதி ஆயின் நன்று
உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி
அறல் என விரிந்த உறல் இன் சாயல்  15
ஒலி இருங்கூந்தல் தேறும் என
வலிய கூறவும் வல்லையோ மற்றே?

192
பாடியவர்: பொதும்பில் கிழான் வெண்கண்ணனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ
யாங்கு ஆகுவள் கொல் தானே விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைந்தார்ச்
செவ்வாய்ச் சிறு கிளி சிதைய வாங்கி  5
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங்குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள்
வந்து அளிக்குவை எனினே மால் வரை
மைபடு விடரகம் துழைஇ ஒய்யென  10
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் உரவுப் பெயல்
உருமிறை கொண்ட உயர் சிமைப்
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே.  15