அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


193
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

கான் உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப்
பொறித்த போலும் வால் நிற எருத்தின்  5
அணிந்த போலும் செஞ்செவி எருவை
குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட
விரைந்து வாய் வழுக்கிய கொழுங்கண் ஊன் தடி
கொல் பசி முது நரி வல்சி ஆகும்  10
சுரன் நமக்கு எளிய மன்னே நல் மனைப்
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி
முருந்து ஏர் முறுவல் இளையோள்
பெருந்தோள் இன் துயில் கைவிடுகலனே.

194
பாடியவர்: இடைக்காடனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை
ஏர் இடம்படுத்த இருமறுப் பூழிப்
புறமாறு பெற்ற பூவல் ஈரத்து
ஊன் கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதை பல நாறி  5
இரலை நல் மான் இனம் பரந்தவை போலக்
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்
கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி
களை கால் கழீஇய பெரும்புன வரகின்
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட  10
குடுமி நெற்றி நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி ஏமுறக்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்கு சினை இருந்து
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்  15
கார் மன் இதுவால் தோழி போர் மிகக்
கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட கடும் பரி
விரி உளை நல் மான் கடைஇ
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே.

195
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய தாய் வேலனிடம் சொன்னது

அருஞ்சுரம் இறந்த என் பெருத்தோள் குறுமகள்
திருந்து வேல் விடலையொடு வரும் எனத் தாயே
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப யானும்  5
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன்னகை முறுவல் ஏழையைப் பல் நாள்
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய
நலம் புனை உதவியோ உடையன் மன்னே  10
அஃது அறிகிற்பினோ நன்று மன் தில்ல
அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங்கோல்
ஆகுவது அறியும் முதுவாய் வேல
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம்  15
மாறா வருபனி கலுழும் கங்குலில்
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்
எம் மனை முந்துறத் தருமோ
தன் மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே.

196
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
தலைவி தலைவனிடம் சொன்னது

நெடுங்கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து
நாள் துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு  5
தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் ஊர
தொடுகலம் குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போகிய  10
கடுந்தேர்த் திதியன் அழுந்தை கொடுங் குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.

197
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழை வனர் ஆய்ந்த
தொன்னலம் இழந்த துயரமொடு என்னதூஉம்
இனையல் வாழி தோழி முனை எழ  5
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்
மறமிகு தானைக் கண்ணன் எழினி
தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழத்
தோள் தாழ்வு இருளிய குவை இருங்கூந்தல்  10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன்தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு
கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண் கோட்டு
இனஞ் சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப்
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி  15
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலி யுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே.

198
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

கூறுவம் கொல்லோ கூறலம் கொல் எனக்
கரந்த காமம் கைந் நிறுக்கல்லாது
நயந்து நாம் விட்ட நல்மொழி நம்பி
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து
கார் விரை கமழும் கூந்தல் தூவினை  5
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்
இளமழை சூழ்ந்த மட மயில் போல
வண்டு வழிப் படரத் தண் மலர் மேய்ந்து
வில் வகுப்பு உற்ற நல் வாங்கு குடைச்சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து  10
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்  15
நேர் மலர் நிறை சுனை உறையும்
சூர்மகள் மாதோ என்னும் என் நெஞ்சே.

199
பாடியவர்: கல்லாடனார், 
திணை: பாலைத் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

கரை பாய் வெண் திரை கடுப்பப் பல உடன்
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊர் மலர் பெயல் செத்து
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமரச்
சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல்  5
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇத்
திரங்கு மரல் கவ்விய கையறு தொகு நிலை
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன
திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய  10
கெடு மான் இன நிரை தரீஇய கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்படப் பிறர் போல்
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப  15
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல்
தடையின மன்னும் தண்ணிய திரண்ட
பெருந்தோள் அரிவை ஒழியக் குடாஅது
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய  20
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே.

200
பாடியவர்: உலோச்சனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்
புலால் அம் சேரிப் புல் வேய் குரம்பை ஊர் என
உணராச் சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள்  5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப
பொம்மல் படுதிரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற  10
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே.

201
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

அம்ம வாழி தோழி பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறல் போர்ப் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து  5
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு
அலரும் மன்று பட்டன்றே அன்னையும்  10
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை இகுளை சோழர்
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்
ஆண்டு அமைந்து உறைகுநர் அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்து கவாஅன்  15
பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத்
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.

202
பாடியவர்: ஆவூர் கிழார் மகனார் கண்ணனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்
கயந்தலை மடப் பிடி இனன் ஏமார்ப்பப்
புலிப் பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ  கொல்லன்  5
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி
சிறு பல் மின்மினி போலப் பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட
யாமே அன்றியும் உளர் கொல் பானாள்
உத்தி அரவின் பைத்தலை துமிய  10
உரஉரும் உட்குவரு நனந்தலைத்
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாகக்
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின் வயின்
ஆர் அஞர் அரும் படர் நீந்துவோரே?  15

203
பாடியவர்: கபிலர், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய தாய் அல்லது செவிலித்தாய் சொன்னது

உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்  5
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இவ் வறுமனை ஒழிய தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுறப்  10
பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நன் வாய்யாக
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்  15
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

204
பாடியவர்: மதுரைக் காமக்கனி நப்பாலத்தனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்
கடல் போல் தானைக் கலிமா வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்  5
கணங்கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப
உதுக்காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து
செல்க பாக நின் நல் வினை நெடுந்தேர்
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை 10
பன் மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.