அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


241
பாடியவர்: காவன்முல்லைப் பூதனார்,
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவர் என முனியாது
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர் மன் வாழி தோழி உயர் மிசை  5
மூங்கில் இள முளை திரங்கக் காம்பின்
கழை நரல் வியல் அகம் வெம்ப மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர்ப் பெயல் செத்து ஓடி
தாஅம் பட்ட தனி முதிர் பெருங்கலை  10
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள் காய்
வட்டக் கழங்கின் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும்  15
நல்மர மருங்கு இல் மலை இறந்தோரே.

242
பாடியவர்: பேரி சாத்தனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலைப்
பைந்தாள் செந்தினைக் கொடுங் குரல் வியன் புனம்  5
செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் எனப் பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை  10
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்
செலவரத் துணிந்த சேண் விளங்கு எல் வளை
நெகிழ்ந்த முன் கை நேர் இறைப் பணைத்தோள்
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய  15
முகிழ்த்துவரல் இள முலை மூழ்கப் பல் ஊழ்
முயங்கல் இயைவது மன்னோ தோழி
நறை கால் யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறு இலைச்
சாந்த மென்சினை தீண்டி மேலது  20
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே.

243
பாடியவர்: கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார், 
திணை: பாலைத் திணை
தோழி தலைவியிடம் சொன்னது

அவரை ஆய் மலர் உதிரத் துவரின்
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணியப்
பெயல் நீர் புதுவரல் தவிரச் சினை நேர்பு  5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇக் கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை
நெடிது வந்தனை என நில்லாது ஏகிப்
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை  10
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை
அறியுநம் ஆயின் நன்று மன் தில்ல
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று
அனைத்தால் தோழி நம் தொல் வினைப் பயனே.  15

244
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

பசைபடு பச்சை நெய் தோய்த்தன்ன
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
பகல் உறை முதுமரம் புலம்பப் போகி
முகை வாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடி மிசை  5
வண்டு இனம் தவிர்க்கும் தண் பதக்காலை
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு
இனிது கொல் வாழி தோழி எனத்தன்
பல் இதழ் மழைக் கண் நல் அகம் சிவப்ப
அருந்துயர் உடையள் அவள் என விரும்பிப்  10
பாணன் வந்தனன் தூதே நீயும்
புல்லார் புரவி வல் விரைந்து பூட்டி
நெடுந்தேர் ஊர்மதி வலவ
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே.

245
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி
மழை பெயன் மறந்த கழை திரங்கு இயவில்  5
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல்வில் இளையர் தலைவர் எல்லுற
வரிகிளர் பணைத் தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்
மகிழ்நொடை பெறாஅர் ஆகி நனை கவுள்  10
கானயானை வெண்கோடு சுட்டி
மன்று ஓடு புதல்வன் புன்தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி வைகுற
நிழல் படக் கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்தன்ன அலங்கு சினை ஒண் பூக்  15
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்
குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங்கவலைய கானம் நீந்தி
அம்மா அரிவை ஒழிய  20
சென்மோ நெஞ்சம் வாரலென் யானே.

246
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

பிணர் மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலி நீர் அகல் வாய் யாணர் ஊர
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு  5
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப நெருநை அலரே
காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்  10
இமிழிசை முரசம் பொரு களத்து ஒழியப்
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.

247
பாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
நன் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருளிலர் வாழி தோழி பொருள் புரிந்து
இருங்கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை
கருங்கோட்டு இருப்பை வெண் பூ முனையின்  5
பெருஞ்செம்புற்றின் இருந்தலை இடக்கும்
அரிய கானம் என்னார் பகை பட
முனை பாழ் பட்ட ஆங்கண் ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறுபடு கவலைய ஆறு பல நீந்திப்  10
படுமுடை நசைஇய பறை நெடுங்கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

248
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

நகை நீ கேளாய் தோழி அல்கல்
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ
இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு
நான் முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற  5
தறுகண் பன்றி நோக்கிக் கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என
எய்யாது பெயரும் குன்ற நாடன்  10
செறி அரில் துடக்கலின் பரீஇப் புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை
வல்லே என் முகம் நோக்கி  15
நல்லை மன் என நகூஉப் பெயர்ந்தோளே.

249
பாடியவர்: நக்கீரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவிதோழியிடம் சொன்னது

அம்ம வாழி தோழி பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ வள்வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள் தோறும்
பொன் கோட்டுச் செறித்துப் பொலந்தார் பூட்டிச்  5
சாந்தம் புதைத்த ஏந்து துவங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்துச் சால் பதம் குவைஇ
நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார்  10
பல் பூங்கானத்து அல்கு நிழல் அசைஇத்
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள்வாய்க் கோடை
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த  15
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து அலறி
உழைமான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.

250
பாடியவர்: செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

எவன் கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப
மணம் கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக்
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக்  5
கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித்
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற் கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெருந்தோள் சாஅய்  10
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறுகுடி
செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது கங்குலானே.

251
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

தூதும் சென்றன தோளும் செற்றும்
ஓதி ஒண்ணுதல் பசலையும் மாயும்
வீங்கு இழை நெகிழச் சாஅய்ச் செல்லலொடு
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்  5
தங்கலர் வாழி தோழி வெல்கொடித்
துனைகால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல்மூது ஆலத்து அரும் பணைப் பொதியில்
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்  10
பணியாமையின் பகை தலைவந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர்
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை  15
வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி
மா நிலம் நெளியக் குத்திப் புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீளிடைப் போகி
அரம் போழ் அம்வளை நிலை நெகிழ்த்தோரே.  20

252
பாடியவர்: நக்கண்ணையார்,
திணை: குறிஞ்சித் திணை
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

இடம் படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தித்  5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்
யாங்குச் செய்வாம் கொல் தோழி ஈங்கைத்
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்  10
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல்
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே.