அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


277
பாடியவர்: கருவூர் நன்மார்பன், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

தண் கதிர் மண்டிலம் அவிர் அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போலப் பையென
நுதல் ஒளி கரப்பவும் ஆள் வினை தருமார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆகக்
கடையல் அம் குரல வாள் வரி உழுவை  5
பேழ்வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது
இரும் பனஞ்செறும்பின் அன்ன பரூஉ மயிர்ச்
சிறு கண் பன்றி வருதிறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை
பொத்துடை மரத்த புகர்படு நீழல்  10
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்
ஈரம் இல் வெஞ்சுரம் இறந்தோர் நம் வயின்
வாரா அளவை ஆய் இழை கூர்வாய்
அழல் அகைந் தன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறனுடைச் சேவல்  15
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானே
வாரார் தோழி நம் காதலோரே.   20

278
பாடியவர்: கபிலர்,
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத் தனைய ஆகி வலன் ஏர்பு
கோல் நிமிர் கொடியின் வசிபட மின்னி
உரும் உரறு அதிர் குரல் தலைஇப் பானாள்  5
பெரு மலை மீமிசை முற்றின ஆயின்
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ வண் பரி உந்தி
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன் துறைப்  10
பனி பொரு மழைக் கண் சிவந்த பானாள்
முனி படர் அகல மூழ்குவம் கொல்லோ
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய
தணிவு அருந் துயரம் செய்தோன்
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே?  15

279
பாடியவர்: இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென்முலை முற்றம் கடவாதோர் என  5
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள் வினை மாரியின் அவியா நாளும்
கடறு உழந்து இவணம் ஆகப் படர் உழந்து
யாங்கு ஆகுவள் கொல் தானே தீந்தொடை  10
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரல் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம்முடை மதுகையள் ஆகி அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலிக்  15
கையறு நெஞ்சினள் அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே?

280
பாடியவர்: அம்மூவனார், 
திணை: நெய்தற் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்
நலஞ்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்  5
பெறல் அருங்குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்  10
தருகுவன் கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?

281
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல்வில் சுற்றி நோன் சிலை  5
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
கனை குரல் இசைக்கும் விரை செல் கடுங்கணை
முரண் மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங்குன்றத்து  10
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.

282
பாடியவர்: தொல்கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப  5
வைந் நுதி வால் மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறை மரம் ஆக நறை நார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி
யாயும் அவனே என்னும் யாமும்  15
வல்லே வருக வரைந்த நாள் என
நல் இறை மெல் விரல் கூப்பி
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே.

283
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

நன்னெடுங்கதுப்பொடு பெருந்தோள் நீவிய
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கிச்
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்  5
திரிவயின் தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமைக் கரி மரம்
கண் அகை இளங்குழை கால் முதல் கவினி  10
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப்
பசுங்கண் வானம் பாய் தளி பொழிந்தெனப்
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங்கானத்து
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப  15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.

284
பாடியவர்: இடைக்காடனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது, அல்லது தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன்துயில் எழுந்து துணையொடு போகி  5
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடித்
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்
விதைத்த வில்லர் வேட்டம் போகி
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்  10
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலை மயங்கிய
அம் மா அரிவை உறைவின் ஊரே.

285
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

ஒழியச் சென்மார் செல்ப என்று நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்
காடு தேர் மடப் பிணை அலறக் கலையின்  5
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி
இரும் புலி வேங்கைக் கருந்தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி 10
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம் பணைத்தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர்
வாராய் தோழி முயங்குகம் பலவே.  15.

286
பாடியவர்: ஓரம்போகியார், 
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

வெள்ளி விழுந்தொடி மென் கருப்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்வயின் நுடங்க
மீன் சினை அன்ன வெண்மணல் குவைஇக்
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி
ஊர்க்குறு மகளிர் குறுவழி விறந்த  5
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி  10
தற்தகவு உடைமை நோக்கி மற்றதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர்த் தெரியும் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன  15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய்யாண்டு உளதோ இவ்வுலகத்தானே?

287
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

தொடி அணி முன் கைத் தொகு விரல் குவைஇப்
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக
நோம் கொல் அளியள் தானே தூங்கு நிலை
மரை ஏறு சொறிந்த மாத்தட் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்  5
நாள் பலி மறந்த நரைக்கண் இட்டிகை
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலைக்
கணைக்கால் அம் பிணை ஏறு புறம் நக்க  10
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க
அரம்பு வந்து அலைக்கும் மாலை
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.

288
பாடியவர்: விற்றூற்று மூதெயினனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

சென்மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை
சாரல் வேங்கைப் படுசினைப் புதுப் பூ
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை
எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல்  5
எவ்வம் கூரிய வைகலும் வருவோய்
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடி இருங்குன்றத்து
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி  10
அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்கு பசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்  15
கொந்தோடு உதிர்த்த கதுப்பின்
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.