ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

மருதத்திணை


81.
குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும்
மலரணி வாயில் பொய்கை ஊரநீ
என்னை நயந்தனென் என்றநின் 
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே.

82.
வெகுண்டனள் என்ப பாணநின் தலைமகள்
மகிழ்நன் மார்பின் அவிழினர் நறுந்தார்த்
தாதுன் பறவை வந்துஎம்
போதார் கூந்தல் இருந்தன எனவே.

83.
மணந்தனை அருளாய் ஆயினும் பையத்
தணந்தனை யாகி உய்ம்மோ நும்மூர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை யூரன் பண்டெனப் படற்கே.

84.
செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்
கண்ணிற் காணின் எனா குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே.

85.
வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறுவில் யானர்மலிகேழ் ஊரநீ
சிறுவரின் இனைய செய்தி 
நகாரோ பெருமநின் கண்டிசி ணோரே.

86.
வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல்
நீள்வயல் நண்ணி இமிழும் ஊர
எம் இவன் நல்குதல் அரிது
நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே.

87.
பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும்
யாணர் ஊரைநின் மனையோள்
யாரையும் புலக்கும் எம்மைமற் றெவனோ.

88.
வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை யூரனை எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்ப
தொல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே.

89.
அம்மவாழி பாண எவ்வைக்கு 
எவன் பெரி தளிக்கும் என்ப பழனத்து
வண்டு தாதூதும் ஊரன்
பெண்டென விரும்பின்று அவள்தன் பண்பே.

90.
மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்
அன்ன தாகலும் அறியாள்
எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே.