கலித்தொகை

கலித்தொகை

நெய்தல்கலி


118    
வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,    
நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அறத் தான் செய்த    
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் - 
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,    
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன்    
ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்பக்,    
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்    
இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை! 

மாலை நீ - தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த 
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்;    
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூ போல் தளை விட்ட    
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்.    

மாலை நீ - தை எனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு 
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்;    
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்,    
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்.    

மாலை நீ - தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்பப் 
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்;    
தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை    
முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய்.    

என ஆங்கு;    
மாலையும் அலரும் நோனாது, எம் வயின்    
நெந்ஜ்சமும் எஞ்சும்மன் தில்ல - எஞ்சி,    
உள்ளாது அமைந்தோர், உள்ளும்,    
உள் இல் உள்ளம் உள் உள் உவந்தே.    

119    
அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக 
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,    
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,    
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தரக்,    
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்பத் 
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,    
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்தச் 
சிறு வெதிர் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மெனப்,    
பறவை தம் பார்ப்பு உள்ளக், கறவை தம் பதி வயின் 
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,    
மா வதி சேர, மாலை வாள் கொள    
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து    
செந்தீச் செவ் அழல் தொடங்க - வந்ததை    
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்    
காலை ஆவது அறியார்,    
மாலை என்மனார் மயங்கியோரே!    

120    
அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான் 
வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய    
இருள் தூர்பு, புலம்பு ஊரக், கனை சுடர் கல் சேர -    
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை 
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று, புறம் மாறிக் 
கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம் இலை கூம்பத் -    
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக,    
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலைக்,    
கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!    

மாலை நீ - உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின் கண் 
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்,    
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ?    
மாலை நீ - ஈரம் இல் காதலர் இகந்து, அருளா இடன் நோக்கிப்    
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்,    
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ?    
மாலை நீ - கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின் கண் 
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல், 
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ?    
என ஆங்கு;    
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை    
துனி கொள் துயர் தீர காதலர் துனை தர    
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை    
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஓம்பும்    
நல் இறை தோன்றக், கெட்டாங்கு -    
இல்லாகின்றால் இருள் அகத்து ஒளித்தே.    

121    
ஒள் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது,    
தெள் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்,    
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தரப்,    
புள் இனம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று,    
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி    
பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!    

தாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறம் மாறத்    
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே -    
உறையொடு வைகிய போது போல், ஒய்யென,    
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு;    

வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு,    
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே -    
கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ    
இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு;    

இன் துணை நீ நீப்ப, இரவின் உள் துணை ஆகித்,    
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே - 
ஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்    
நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு;    
என ஆங்கு;    
எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை    
மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து,    
சாயினள் வருந்தியாள் இடும்பை    
பாய் பரிக் கடு திண் தேர் களையினோ இடனே.    

122    
'கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப்,    
போது எழில் உண் கண் புகழ் நலன் இழப்பக்,    
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு, ஏது இன்றிச்,    
சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை; 
பலவு நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை; 
அலவலை உடையை' என்றி - தோழீ !    
கேள் இனி;    
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்    
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும், 
பேணி அவன் சிறிது அளித்தக் கால், என்    
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்;    

இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் 
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,    
அருளி அவன் சிறிது அளித்தக் கால், என்    
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்;    

ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன்    
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும், 
புல்லி அவன் சிறிது அளித்தக் கால், என்    
அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்;    
அதனால்;    
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த    
காம நோயின் கழீஇய நெஞ்சம் -    
தான் அவர்பால் பட்டது ஆயின்,    
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே!    

123    
கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும்    
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இரும் தும்பி இயைபு ஊத,    
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின், பாடலோடு 
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல், 
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறு கானல் -    
காணாமை இருள் பரப்பிக் கையற்ற கங்குலான்,    
மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ    
காணவும் பெற்றாயோ? - காணாயோ? மட நெஞ்சே!    

கொல் ஏற்றுச் சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை, 
அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ    
புல்லவும் பெற்றாயோ? - புல்லாயோ மட நெஞ்சே!    

வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான்,    
செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ 
அறியவும் பெற்றாயோ? - அறியாயோ? மட நெஞ்சே!    
என ஆங்கு;    
எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ்    
அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ, 
இரும் கழி ஓதம் போல் தடுமாறி,    
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே!    

124    
ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்    
பால் அன்ன மேனியான் அணிபெறத் தைஇய    
நீல நீர் உடை போலத், தகைபெற்ற வெண் திரை 
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப!    

ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின், 
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் - 
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு, ஆங்கே 
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்; 

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,    
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் - 
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து, இனி, 
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்;    

இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,    
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -    
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி,    
நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெரும் கண் அல்லாக்கால்; 
அதனால்;    
பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக் கால், 
அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தரப், 
புரி உளைக் கலி மான் தேர் கடவுபு -    
விரி தண் தார் வியல் மார்ப! - விரைக நின் செலவே! 

125    
'கண்டவர் இல்', என உலகத்துள் உணராதார்,    
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள், 
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர் 
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்',    
வண் பரி நவின்ற வய மான் செல்வ!    
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால், 
'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்:    

மகிழ் செய் தே மொழித் தொய்யில் சூழ் இள முலை 
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண் கண் 
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்!    
இமிழ் திரை கொண்க! கொடியை காண் நீ;    

இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ,    
நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப்    
புலந்து அழப், புல்லாது விடுவாய்!    
இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியை காண் நீ;    

இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால்    
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்    
நுண் வரி, வாட, வாராது விடுவாய்!    
தண்ணம் துறைவ! தகாஅய் காண் நீ ;    

என ஆங்கு;    
அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று    
இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப்    
பிறை ஏர் சுடர் நுதல் பசலை    
மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே.    

126    
பொன் மலை சுடர் சேரப், புலம்பிய இடன் நோக்கித்,    
தன் மலைந்து உலகு ஏத்தத் தகை மதி ஏர்தரச்,    
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை    
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல், 
எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!    

அணிச் சிறை இனக் குருகு ஒலிக்கும்கால், நின் திண் தேர் 
மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்: மதித்தாங்கே, 
உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானல் 
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே; 

நீர் நீவிக் கஞன்ற பூக் கமழும்கால், நின் மார்பின்    
தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,    
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்கக், கழிப் பூத்த 
மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு இனையுமே; 

நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக் கால்,    
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்: மதித்தாங்கே, 
நனவு என புல்லும்கால், காணாளாய்க், கண்டது    
கனவு என உணர்ந்து, பின் கையற்றுக் கலங்குமே; 

என ஆங்கு;    
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்,    
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி    
மதி மருள் வாள் முகம் விளங்கப்,    
புது நலம் ஏர்தரப், பூண்க, நின் தேரே!    

127    
தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,    
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,    
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இரும் தும்பி இயைபு ஊதச் - 
செரு மிகு நேமியான் தார் போலப் பெரும் கடல்    
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப; 

கொடும் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர், 
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ -    
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,    
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை! 

குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு, 
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ - 
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிது ஆகச் 
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!    

காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,    
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ -    
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,    
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!    

அதனால்;    
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,    
'உரவுக் கதிர் தெறும்' என, ஓங்கு திரை விரைபு, தன்    
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு -    
உரவு நீர்ச் சேர்ப்ப! - அருளினை அளிமே!