குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


351. நெய்தல் - தோழி கூற்று 

வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள் 
அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த 
ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென 
உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு 
உரிமை செப்பினர் நமரே விரியலர்ப் 
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி 
இன்னகை ஆயத் தாரோடு 
இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே. 
-அம்மூவனார்.

352. பாலை - தலைவி கூற்று 

நெடுநீ ராம்பல் அடைப்புறத் தன்ன 
கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை 
அகலிலைப் பலவின் சாரல் முன்னிப் 
பகலுறை முதுமரம் புலம்பப் போகும் 
சிறுபுன் மாலை உண்மை 
அறிவேன் தோழியவர்க் காணா ஊங்கே. 
-கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

353. குறிஞ்சி - தோழி கூற்று 

ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக் 
கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே 
பாடின் அருவி ஆடுதல் இனிதே 
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற் 
பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல்லிற் 
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ 
அன்னை முயங்கத் துயிலின் னாதே. 
-உறையூர் முதுகூற்றனார்.

354. மருதம் - தோழி கூற்று 

நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும் 
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் 
தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ 
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க் 
கடும்பாம்பு வழங்குந் தெருவில் 
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே. 
-கயத்தூர்கிழார்.

355. குறிஞ்சி - தோழி கூற்று 

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே 
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே 
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று 
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் 
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப 
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி 
யாங்கறிந் தனையோ நோகோ யானே. 
-கபிலர்.

356. பாலை - செவிலி கூற்று 

நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக் 
கழலோன் காப்பக் கடுகுபு போகி 
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த 
வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய 
யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய 
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த 
பாலும் பலவென உண்ணாள் 
கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே. 
-கயமனார்.

357. குறிஞ்சி - தோழி கூற்று 

முனிபடர் உழந்த பாடில் உண்கண் 
பனிகால் போழ்ந்து பணியெழில் ஞெகிழ்தோள் 
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு 
நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய 
ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன் 
ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை 
மின்படு சுடரொளி வெரூஉம் 
வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே. 
-கபிலர்.

358. முல்லை - தோழி கூற்று 

வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே 
எறிகண் பேதுற லாய்கோ டிட்டுச் 
சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க 
வருவேம் என்ற பருவம் உதுக்காண் 
தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப் 
பல்லான் கோவலர் கண்ணிச் 
சொல்லுப அன்ன முல்லைமென் முகையே. 
-கொற்றனார்.

359. மருதம் - தோழி கூற்று 

கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம 
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற் 
குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப் 
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற் 
புதல்வற் றழீஇயினன் விறலவன் 
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே. 
-பேயனார்.

360. குறிஞ்சி - தலைவி கூற்று 

வெறியென உணர்ந்த வேல னோய்மருந் 
தறியா னாகுதல் அன்னை காணிய 
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும் 
வாரற்க தில்ல தோழி சாரற் 
பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல் 
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே 
சிலம்பிற் சிலம்புஞ் சோலை 
இலங்குமலை நாடன் இரவி னானே. 
-மதுரை ஈழத்துப் பூதன்றேவனார்.

361. குறிஞ்சி - தலைவி கூற்று 

அம்ம வாழி தோழி அன்னைக் 
குயர்நிலை உலகமுஞ் சிறிதால் அவர்மலை 
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு 
காலை வந்த காந்தள் முழுமுதல் 
மெல்லிலை குழைய முயங்கலும் 
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே. 
-கபிலர்.

362. குறிஞ்சி - தோழி கூற்று 

முருகயர்ந் துவந்த முதுவாய் வேல 
சினவ லோம்புமதி வினவுவ துடையேன் 
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு 
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி 
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய 
விண்தோய் மாமலைச் சிலம்பன் 
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.
-வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்.

363. பாலை - தோழி கூற்று 

கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு 
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும் 
மடக்கண் மரையா நோக்கிவெய் துற்றுப் 
புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும் 
இன்னா அருஞ்சுரம் இறத்தல் 
இனிதோ பெரும இன்றுணைப் பிரிந்தே. 
-செல்லூர்க் கொற்றனார்.

364. மருதம் - இற்பரத்தை கூற்று 

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் 
வாளை நாளிரை பெறூஉம் ஊரன் 
பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி 
எற்புறங் கூறும் என்ப தெற்றென 
வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் 
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக் 
கண்பொர மற்றதன் கண்ணவர் 
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே. 
-ஔவையார்.

365. குறிஞ்சி - தோழி கூற்று 

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும் 
பாடில கலிழ்ந்து பனியா னாவே 
துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி 
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும் 
மருங்கிற் கொண்ட பலவிற் 
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே. 
-மதுரை நல்வெள்ளியார்.

366. குறிஞ்சி - தோழி கூற்று 

பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற் 
சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ 
வெறியாள் கூறவும் அமையாள் அதன்தலைப் 
பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த 
வள்ளிதழ் நீலம் நோக்கி உள்ளகை 
பழுத கண்ண ளாகிப் 
பழூதன் றம்மவிவ் வாயிழை துணிவே. 
-பேரிசாத்தனார்.

367. மருதம் - தோழி கூற்று 

கொடியோர் நல்கா ராயினும் யாழநின் 
தொடிவிளங் கிறைய தோள்கவின் பெறீஇயர் 
உவக்காண் தோழி அவ்வந் திசினே 
தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப் 
பூச லாயம் புகன்றிழி அருவியின் 
மண்ணுறு மணியின் தோன்றும் 
தண்ணறுந் துறுகல் ஓங்கிய மலையே. 
-மதுரை மருதனிள நாகனார்.

368. மருதம் - தலைவி கூற்று 

மெல்லிய லோயே மெல்லிய லோயே 
நன்னாண் நீத்த பழிதீர் மாமை 
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற் 
சொல்ல கிற்றா மெல்லிய லோயே 
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே 
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத் 
திண்கரைப் பெருமரம் போலத் 
தீதில் நிலைமை முயங்குகம் பலவே. 
-நக்கீரனார்.

369. பாலை - தோழி கூற்று 

அத்த வாகை அமலை வானெற் 
றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக் 
கோடை தூக்குங் கானம் 
செல்வாந் தோழி நல்கினர் நமரே. 
-குடவாயிற் கீரத்தனார்.

370. மருதம் - பரத்தை கூற்று 

பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை 
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு 
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின் 
வில்லக விரலிற் பொருந்தியவன் 
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே. 
-வில்லகவிரலினார்.

371. குறிஞ்சி - தலைவி கூற்று 

கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும் 
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி 
அருவியின் விளைக்கும் நாடனொடு 
மருவேன் தோழியது காமமோ பெரிதே.
-உறையூர் முதுகூற்றனார்.

372. நெய்தல் - தோழி கூற்று 

பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் 
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் 
கணங்கொள் சிமைய வணங்குங் கானல் 
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக் 
கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை 
புலர்பதங் கொள்ளா வளவை 
அலரெழுந் தன்றிவ் வழங்க லூரே. 
-விற்றூற்று மூதெயினனார்.

373. குறிஞ்சி - தோழி கூற்று 

நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும் 
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும் 
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் 
கேடெவன் உடைத்தோ தோழி நீடுமயிர்க் 
கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை 
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி 
காந்தளஞ் சிறுகுடிக் கமழும் 
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே. 
-மதுரைக் கொல்லம் புல்லனார்.

374. குறிஞ்சி - தோழி கூற்று 

எந்தையும் யாயும் உணரக் காட்டி 
ஒளித்த செய்தி வௌிப்படக் கிளந்தபின் 
மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப 
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே 
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ 
நீடிரும் பெண்ணைத் தொடுத்த 
கூடினும் மயங்கிய மைய லூரே. 
-உறையூர்ப் பல்காயனார்.

375. குறிஞ்சி - தோழி கூற்று 

அம்ம வாழி தோழி இன்றவர் 
வாரா ராயினோ நன்றே சாரற் 
சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத் 
திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை 
பானாள் யாமத்துங் கறங்கும் 
யாமங் காவலர் அவியா மாறே.