குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


376. நெய்தல் - தலைவன் கூற்று 

மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியிற் 
சூருடை அடுக்கத் தாரங் கடுப்ப 
வேனி லானே தண்ணியள் பனியே 
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென 
அலங்குவெயிற் பொதிந்த தாமரை 
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே. 
-படுமாத்து மோசிகொற்றனார்.

377. குறிஞ்சி - தலைவி கூற்று 

மலரேர் உண்கண் மாணலந் தொலைய 
வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும் 
மாற்றா கின்றே தோழியாற் றலையே 
அறிதற் கமையா நாடனொடு 
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. 
-மோசி கொற்றனார்.

378. பாலை - செவிலி கூற்று 

ஞாயிறு காயாது மரநிழற் பட்டு 
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த் 
தண்மழை தலையின் றாக நந்நீத்துச் 
சுடர்வாய் நெடுவேற் காளையொடு 
மடமா அரிவை போகிய சுரனே. 
-கயமனார்.

379. குறிஞ்சி - தோழி கூற்று 

இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் 
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு 
கண்ணகன் தூமணி பெறூஉம் நாடன் 
அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி 
எம்மில் வருகுவை நீயெனப் 
பொம்மல் ஓதி நீவி யோனே. 

380. பாலை - தோழி கூற்று 

விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர் 
வென்றெறி முரசின் நன்பல முழங்கிப் 
பெயலா னாதே வானம் காதலர் 
நனிசேய் நாட்டர் நம்முன் னலரே 
யாங்குச்செய் வாங்கொல் தோழி யீங்கைய 
வண்ணத் துய்ம்மலர் உதிர 
முன்னர்த் தோன்றும் பனிக்கடு நாளே. 
-கருவூர்க் கதப்பிள்ளை.

381. நெய்தல் - தோழி கூற்று 

தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய் 
அல்லல் நெஞ்சமோ டல்கலும் துஞ்சாது 
பசலை யாகி விளிவது கொல்லோ 
வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற் 
பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி 
விலங்குதிரை உடைதருந் துறைவனொ 
டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே. 

382. முல்லை - தோழி கூற்று 

தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை 
முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை 
பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல 
வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று 
காரிது பருவம் ஆயின் 
வாரா ரோநம் காத லோரே. 
-குறுங்கீரனார்.

383. பாலை - தோழி கூற்று 

நீயுடம் படுதலின் யான்தர வந்து 
குறிநின் றனனே குன்ற நாடன் 
இன்றை யளவை சென்றைக் கென்றி 
கையுங் காலும் ஓய்வன அழுங்கத் 
தீயுறு தளிரின் நடுங்கி 
யாவதும் இலையான் செயற்குரி யதுவே. 
-படுமரத்து மோசிகீரனார்.

384. மருதம் - தோழி கூற்று 

உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள் 
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர் 
நலனுண்டு துறத்தி யாயின் 
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே. 
-ஓரம்போகியார்.

385. குறிஞ்சி - தலைவி கூற்று 

பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை 
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் 
செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல் 
இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் 
பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் 
அன்றை யன்ன நட்பினன் 
புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. 
-கபிலர்.

386. நெய்தல் - தலைவி கூற்று 

வெண்மணல் விரிந்த வீததை கானல் 
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே 
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும் 
மாலையோ அறிவேன் மன்னே மாலை 
நிலம்பரந் தன்ன புன்கணொடு 
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே. 
-வெள்ளிவீதியார்.

387. முல்லை - தலைவி கூற்று 

எல்லை கழிய முல்லை மலரக் 
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும் 
இரவரம் பாக நீந்தின மாயின் 
எவன்கொல் வாழி தோழி 
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. 
-கங்குல் வெள்ளத்தார்.

388. பாலை - தோழி கூற்று 

நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை 
கோடை ஒற்றினும் வாடா தாகும் 
கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ 
உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன 
முளிசினை பிளக்கு முன்பின் மையின் 
யானை கைமடித் துயவும் 
கானமும் இனியவாம் நும்மொடு வரினே. 
-ஔவையார்.

389. குறிஞ்சி - தோழி கூற்று 

நெய்கனி குறும்பூழ் காய மாக 
ஆர்பதம் பெறுக தோழி அத்தை 
பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர் 
நன்றோ மகனே யென்றனென் 
நன்றே போலும் என்றுரைத் தோனே. 
-வேட்டகண்ணனார்.

390. பாலை - கண்டோர் கூற்று 

எல்லும் எல்லின்று பாடுங் கேளாய் 
செல்லா தீமோ சிறுபிடி துணையே 
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென 
வளையணி நெடுவேல் ஏந்தி 
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே. 
-உறையூர் முதுகொற்றனார்.

391. முல்லை - தலைவி கூற்று 

உவரி யொருத்தல் உழாது மடியப் 
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற் 
கடிதிடி உருமிற் பாம்புபை அவிய 
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே 
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர் 
கையற வந்த பையுள் மாலைப் 
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை 
தாஅம் நீர் நனந்தலை புலம்பக் 
கூஉந் தோழி பெரும்பே தையவே. 
-பொன்மணியார்.

392. குறிஞ்சி - தோழி கூற்று 

அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி 
நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட் 
டண்ணல் நெடுவரைச் சேறி யாயிற் 
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத் 
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை 
தமரின் தீராள் என்மோ அரசர் 
நிரைசெல னுண்டோல் போலப் 
பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே. 
-தும்பிசேர் கீரனார்.

393. மருதம் - தோழி கூற்று 

மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன் 
முயங்கிய நாடவச் சிலவே அலரே 
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் 
பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன் 
களிறொடு பட்ட ஞான்றை 
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. 
-பரணர்.

394. குறிஞ்சி - தோழி கூற்று 

முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி 
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற 
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி 
முன்னாள் இனிய தாகிப் பின்னாள் 
அவர்தினைப் புனம் மேய்ந் தாங்குப் 
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே. 
-குறியிரையார்.

395. பாலை - தலைவி கூற்று 

நெஞ்சே நிறையொல் லாதே யவரே 
அன்பின் மையின் அருள்பொருள் என்னார் 
வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே 
அரவுநுங்கு மதியினுக் கிவணோர் போலக் 
களையார் ஆயினுங் கண்ணினிது படீஇயர் 
அஞ்ச லென்மரும் இல்லை அந்தில் 
அளிதோ தானே நாணே 
ஆங்கவர் வதிவயின் நீங்கப் படினே. 

396. பாால - செவிலி கூற்று 

பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் 
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே 
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை 
ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல் 
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் 
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும் 
கழைதிரங் காரிடை அவனொடு செலவே. 
-கமயனார்.

397. நெய்தல் - தோழி கூற்று 

நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீ 
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல 
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப 
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட் 
டன்னா வென்னுங் குழவி போல 
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் 
நின்வரைப் பினளென் தோழி 
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே. 
-அம்மூவனார்.


398. பாலை - தலைவி கூற்று 

தேற்றா மன்றே தோழி தண்ணெனத் 
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக் 
கயலே ருண்கட் கனங்குழை மகளிர் 
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய 
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை 
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு 
மெய்ம்மலி யுவகையி னெழுதரு 
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.

399. மருதம் - தலைவி கூற்று 

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க 
பாசி யற்றே பசலை காதலர் 
தொடுவுழித் தொடுவுழி நீங்கி 
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 
-பரணர்.

400. முல்லை - தலைவன் கூற்று 

சேயாறு செல்வா மாயின் இடரின்று 
களைகலம் காமம் பெருந்தோட் கென்று 
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி 
முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப் 
புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய் 
இன்று தந்தனை தேரோ 
நோயுழந் துறைவியை நல்க லானே. 
-பேயனார்.

401. நெய்தல் - தலைவி கூற்று 

அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல் 
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல் 
ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு 
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள் 
நக்குவிளை யாடலுங் கடிந்தன் 
றைதே கம்ம மெய்தோய் நட்பே. 
-அம்மூவனார்.