தொல்காப்பியம்

தொல்காப்பியம்

பொருளதிகாரம்


மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ 
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ 
மரபே தூக்கே தொடை வகை எனாஅ 
நோக்கே பாவே அளவு இயல் எனாஅ 
திணையே கைகோள் கூற்று வகை எனாஅ 
கேட்போர் களனே கால வகை எனாஅ 
பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ 
முன்னம் பொருளே துறை வகை எனாஅ 
மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின் 
ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும் 
அம்மை அழகு தொன்மை தோலே 
விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப் 
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ 
நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என 
வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே.    1 
அவற்றுள், 
மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும் 
மேல் கிளந்தனவே என்மனார் புலவர்.    2 
குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில் 
ஒற்றொடு வருதலொடு மெய்ப் பட நாடி 
நேரும் நிரையும் என்றிசின் பெயரே.    3 
இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே 
நேர்பும் நிரைபும் ஆகும் என்ப 
குறில் இணை உகரம் அல் வழியான.    4 
இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை.    5 
தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது.6 
ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம்.    7 
முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ 
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும்.    8 
குற்றியலுகரமும் முற்றியலுகரமும் 
ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே.    9 
அசையும் சீரும் இசையொடு சேர்த்தி 
வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே.    10 
ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும் 
சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே.    11 
இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை 
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்.    12 
முன் நிரை உறினும் அன்ன ஆகும்.    13 
நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால.    14 
இயலசை ஈற்று முன் உரியசை வரினே 
நிரையசை இயல ஆகும் என்ப.    15 
அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.    16 
ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப.    17 
இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின் 
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப.    18 
வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே 
வெண் சீர் அல்லா மூ அசை என்ப.    19 
தன் பா அல் வழி தான் அடைவு இன்றே.    20 
வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய.    21 
வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் 
இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே.    22 
கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ.    23 
கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர் 
நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே.    24 
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா.    25 
இசைநிலை நிறைய நிற்குவது ஆயின் 
அசைநிலை வரையார் சீர் நிலை பெறவே.    26 
இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே 
தளை வகை சிதையாத் தன்மையான.    27 
வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே.    28 
இன் சீர் இயைய வருகுவது ஆயின் 
வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே.    29 
அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் 
ஒன்றுதல் உடைய ஓர் ஒரு வழியே.    30 
நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே.    31 
அடி உள்ளனவே தளையொடு தொடையே.    32 
அடி இறந்து வருதல் இல் என மொழிப.    33 
அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே.    34 
நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து 
ஏறிய நிலத்தே குறளடி என்ப.    35 
ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே 
ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான.    36 
பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே 
ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே.    37 
மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே 
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப.    38 
மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே 
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப.    39 
சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது 
நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும்.    40 
எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலைதானே 
குன்றலும் மிகுதலுsம் இல் என மொழிப.    41 
உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ 
உயிர்த் திறம் இயக்கம் இன்மையான.    42 
வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும்.    43 
தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே.    44 
முச் சீரானும் வரும் இடன் உடைத்தே.    45 
அசை கூன் ஆகும் அவ்வயினான.    46 
சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே.    47 
ஐ வகை அடியும் விரிக்கும் காலை 
மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும் 
எழுபது வகையின் வழு இல ஆகி 
அறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே.    48 
ஆங்கனம் விரிப்பின் அளவு இறந்தனவே 
பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை.    49 
ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய.    50 
விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே.    51 
தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும் 
இன் சீர் வகையின் ஐந்து அடிக்கும் உரிய 
தன் சீர் உள்வழித் தளை வகை வேண்டா.    52 
சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின் 
ஆசிரியத் தளை என்று அறியல் வேண்டும்.    53 
குறளடி முதலா அளவடி காறும் 
உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப.    54 
அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய 
தளை வகை ஒன்றாத் தன்மையான.    55 
அளவடி மிகுதி உளப்படத் தோன்றி 
இரு நெடிலடியும் கலியிற்கு உரிய.    56 
நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும் 
வரை நிலை இன்றே அவ் அடிக்கு என்ப.    57 
விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே.    58 
இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் 
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே.    59 
வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும் 
ஐஞ் சீர் அடியும் உள என மொழிப.    60 
அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு 
நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே.    61 
எழு சீர் அடியே முடுகியல் நடக்கும்.    62 
முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும்.    63 
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் 
மூ வகை அடியும் முன்னுதல் இலவே.    64 
ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின் 
தோற்றம் முச் சீர்த்து ஆகும் என்ப.    65 
இடையும் வரையார் தொடை உணர்வோரே.    66 
முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும்.    67 
வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே.    68 
வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும் 
அசை சீர்த்து ஆகும் அவ் வழியான.    69 
நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் 
சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப.    70 
நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும் 
வரைவு இன்று என்ப வாய் மொழிப் புலவர்.    71 
எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே.    72 
வெண்பா இயலினும் பண்புற முடியும்.    73 
எழுத்து முதலா ஈண்டிய அடியின் 
குறித்த பொருளை முடிய நாட்டல் 
யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர்.    74 
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே 
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும் 
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின் 
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் 
யாப்பின் வழியது என்மனார் புலவர்.    75 
மரபேதானும், 
நாற் சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று.    76 
அகவல் என்பது ஆசிரியம்மே.    77 
அதாஅன்று என்ப வெண்பா யாப்பே.    78 
துள்ளல் ஓசை கலி என மொழிப.    79 
தூங்கல் ஓசை வஞ்சி ஆகும்.    80 
மருட்பா ஏனை இரு சார் அல்லது 
தான் இது என்னும் தனிநிலை இன்றே.    81 
அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார்.    82 
தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப.    83 
மோனை எதுகை முரணே இயைபு என 
நால் நெறி மரபின தொடை வகை என்ப.    84 
அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும்.    85 
பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் 
அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே.    86 
நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும் 
மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப.    87 
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை.    88 
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்.    89 
ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய.    90 
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.    91 
இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே.    92 
அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே.    93 
ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின் 
பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே.    94 
இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப.    95 
சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின் 
சொல் இயற் புலவர் அது செந்தொடை என்ப.    96 
மெய் பெறு மரபின் தொடை வகைதாமே 
ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ற்றொடு 
தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று 
ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே.    97 
தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும்.    98 
தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப.    99 
மாத்திரை முதலா அடிநிலை காறும் 
நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே.    100 
ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என 
நால் இயற்று என்ப பா வகை விரியே.    101 
அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய 
மும் முதல் பொருட்கும் உரிய என்ப.    102 
பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் 
ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்கு 
ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப.    103 
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை 
வெண்பா நடைத்தே கலி என மொழிப.    104 
வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே.    105 
வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப 
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து 
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே 
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ.    106 
வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே 
செவியறிவுறூஉ என அவையும் அன்ன.    107 
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் 
வேம்பும் கடுவும் போல வெஞ் சொல் 
தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று 
ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே.    108 
அவையடக்கியலே அரில் தபத் தெரியின் 
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று 
எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே.    109 
செவியுறைதானே, 
பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண் 
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே.    110 
ஒத்தாழிசையும் மண்டில யாப்பும் 
குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப.    111 
குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும்.    112 
மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும் 
செந்தூக்கு இயல என்மனார் புலவர்.    113 
நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே 
கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு 
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின.    114 
கைக்கிளைதானே வெண்பா ஆகி 
ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே.    115 
பரிபாடல்லே தொகை நிலை வகையின் 
இது பா என்னும் இயல் நெறி இன்றி 
பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப.    116 
கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு 
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக 
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும்.    117 
சொற்சீர் அடியும் முடுகியல் அடியும் 
அப் பா நிலைமைக்கு உரிய ஆகும்.    118 
கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும் 
முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும் 
மொழி அசை ஆகியும் வழி அசை புணர்ந்தும் 
சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே.    119 
அங்கதம்தானே அரில் தபத் தெரியின் 
செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே.    120 
செம்பொருள் ஆயின வசை எனப்படுமே.    121 
மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும்.    122 
செய்யுள்தாமே இரண்டு என மொழிப.    123 
துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின் 
செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர்.    124 
வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின் 
அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்.    125 
ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே 
கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே.    126 
அவற்றுள், 
ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும்.    127 
இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என 
நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப.    128 
தரவேதானும் நால் அடி இழிபு ஆய் 
ஆறு இரண்டு உயர்வும் பிறவும் பெறுமே.    129 
இடைநிலைப்பாட்டே, 
தரவு அகப்பட்ட மரபினது என்ப.    130 
அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர் 
நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி.    131 
போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே 
தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே 
புரை தீர் இறுதி நிலை உரைத்தன்றே.    132 
ஏனை ஒன்றே, 
தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே.    133 
அதுவே, 
வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே.    134 
வண்ணகம்தானே, 
தரவே தாழிசை எண்ணே வாரம் என்று 
அந் நால் வகையின் தோன்றும் என்ப.    135 
தரவேதானும், 
நான்கும் ஆறும் எட்டும் என்ற 
நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும்.    136 
ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே 
தரவின் சுருங்கித் தோன்றும் என்ப.    137 
அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும்.    138 
முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே.    139 
எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே 
சின்னம் அல்லாக் காலையான.    140 
ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும்.    141 
கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று 
ஒப்ப நாடி உணர்தல் வேண்டும்.    142 
தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும் 
தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும் 
எண் இடை இட்டுச் சின்னம் குன்றியும் 
அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும் 
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது 
கொச்சக ஒருபோகு ஆகும் என்ப.    143 
ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே.    144 
அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே 
செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை.    145 
எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் 
அடக்கியல் வாரமொடு அந் நிலைக்கு உரித்தே.    146 
ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான் 
திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே.    147 
தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும் 
ஐஞ் சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும் 
வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் 
பாநிலை வகையே கொச்சகக் கலி என 
நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே.    148 
கூற்றும் மாற்றமும் இடை இடை மிடைந்தும் 
போக்கு இன்றாகல் உறழ்கலிக்கு இயல்பே.    149 
ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை 
ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே.    150 
நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே 
குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே.    151 
அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும்.    152 
கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள் 
செவியறி வாயுறை புறநிலை என்று இவை 
தொகு நிலை மரபின் அடி இல என்ப.    153 
புறநிலை வாயுறை செவியறிவுறூஉ எனத் 
திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின் 
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் 
பண்புற முடியும் பாவின என்ப.    154 
பரிபாடல்லே, 
நால் ஈர் ஐம்பது உயர்பு அடி ஆக 
ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை.    155 
அளவியல் வகையே அனை வகைப்படுமே.    156 
எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின் 
அடி வரை இல்லன ஆறு என மொழிப.    157 
அவைதாம், 
நூலினான உரையினான 
நொடியொடு புணர்ந்த பிசியினான 
ஏது நுதலிய முதுமொழியான 
மறை மொழி கிளந்த மந்திரத்தான 
கூற்று இடை வைத்த குறிப்பினான.    158 
அவற்றுள், 
நூல் எனப்படுவது நுவலும் காலை 
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி 
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி 
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து 
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே.    159 
அதுவேதானும் ஒரு நால் வகைத்தே.    160 
ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும் 
இன மொழி கிளந்த ஓத்தினானும் 
பொது மொழி கிளந்த படலத்தானும் 
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று 
ஆங்கு அனை மரபின் இயலும் என்ப.    161 
அவற்றுள், 
சூத்திரம்தானே 
ஆடி நிழலின் அறியத் தோன்றி 
நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க 
யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே.    162 
நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு 
ஓர் இனப் பொருளை ஒரு வழி வைப்பது 
ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர்.    163 
ஒரு நெறி இன்றி விரவிய பொருளான் 
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்.    164 
மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின் 
தோன்று மொழிப் புலவர் அது பிண்டம் என்ப.    165 
பாட்டு இடை வைத்த குறிப்பினானும் 
பா இன்று எழுந்த கிளவியானும் 
பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியானும் 
பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று 
உரை வகை நடையே நான்கு என மொழிப.    166 
அதுவேதானும் இரு வகைத்து ஆகும்.    167 
ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே 
ஒன்றே யார்க்கும் வரை நிலை இன்றே.    168 
ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் 
தோன்றுவது கிளந்த துணிவினானும் 
என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே.    169 
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் 
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி 
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் 
ஏது நுதலிய முதுமொழி என்ப.    170 
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும் 
மறைமொழிதானே மந்திரம் என்ப.    171 
எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகி 
பொருட்புறத்ததுவே குறிப்பு மொழியே.    172 
பாட்டிடைக் கலந்த பொருள ஆகி 
பாட்டின் இயல பண்ணத்திய்யே.    173 
அதுவேதானும் பிசியொடு மானும்.    174 
அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும் 
அடி இகந்து வரினும் கடி வரை இன்றே.    175 
கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின் 
அளவியல் வகையே அனை வகைப்படுமே.    176 
கைக்கிளை முதலா ஏழ் பெருந் திணையும் 
முன் கிளந்தனவே முறையினான.    177 
காமப் புணர்ச்சியும் இடம் தலைப்படலும் 
பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று 
ஆங்க நால் வகையினும் அடைந்த சார்பொடு 
மறை என மொழிதல் மறையோர் ஆறே.    178 
மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும் 
இவை முதலாகிய இயல் நெறி திரியாது 
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் 
பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே.    179 
மெய் பெறும் அவையே கைகோள் வகையே.    180 
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி 
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு 
அளவு இயல் மரபின் அறு வகையோரும் 
களவின் கிளவிக்கு உரியர் என்ப.    181 
பாணன் கூத்தன் விறலி பரத்தை 
ஆணம் சான்ற அறிவர் கண்டோ ர் 
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா 
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇ 
தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர்.    182 
ஊரும் அயலும் சேரியோரும் 
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும் 
கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது 
கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும்.    183 
கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும் 
நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது.    184 
ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு 
கண்டோ ர் மொழிதல் கண்டது என்ப.    185 
இடைச் சுரமருங்கின் கிழவன் கிழத்தியொடு 
வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன்.    186 
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு 
மொழிந்தாங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே.    187 
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் 
நினையும் காலை கேட்குநர் அவரே.    188 
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி 
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.    189 
பரத்தை வாயில் என இரு வீற்றும் 
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயன் இலவே.    190 
வாயில் உசாவே தம்முள் உரிய.    191 
ஞாயிறு திங்கள் அறிவே நாணே 
கடலே கானல் விலங்கே மரனே 
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே 
அவை அல பிறவும் நுதலிய நெறியான் 
சொல்லுந போலவும் கேட்குந போலவும் 
சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்.    192 
ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும் 
கரும நிகழ்ச்சி இடம் என மொழிப.    193 
இறப்பே நிகழ்வே எதிரது என்னும் 
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர 
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்.    194 
இது நனி பயக்கும் இதன் மாறு என்னும் 
தொகு நிலைக் கிளவி பயன் எனப்படுமே.    195 
உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின் 
மெய்ப் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும்.    196 
எண் வகை இயல் நெறி பிழையாதாகி 
முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே.    197 
சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை 
புல்லிய கிளவி எச்சம் ஆகும்.    198 
இவ் இடத்து இம் மொழி இவர் இவர்க்கு உரிய என்று 
அவ் இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம்.    199 
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் 
ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி 
இது ஆகு இத் திணைக்கு உரிப் பொருள் என்னாது 
பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப.    200 
அவ் அம் மக்களும் விலங்கும் அன்றிப் 
பிற அவண் வரினும் திறவதின் நாடி 
தம்தம் இயலின் மரபொடு முடியின் 
அத் திறம்தானே துறை எனப்படுமே.    201 
அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் 
இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல் 
மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின்.    202 
மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி 
உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே.    203 
வண்ணம்தாமே நால் ஐந்து என்ப.    204 
அவைதாம், 
பாஅ வண்ணம் தாஅ வண்ணம் 
வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் 
இயைபு வண்ணம் அளபெடை வண்ணம் 
நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் 
சித்திர வண்ணம் நலிபு வண்ணம் 
அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் 
ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம் 
எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம் 
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம் 
உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று 
ஆங்கு என மொழிப அறிந்திசினோரே.    205 
அவற்றுள், 
பாஅ வண்ணம் 
சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும்.    206 
தாஅ வண்ணம் 
இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும்.    207 
வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே.    208 
மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே.    209 
இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே.    210 
அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்.    211 
நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்.    212 
குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்.    213 
சித்திர வண்ணம் 
நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே.    214 
நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்.    215 
அகப்பாட்டு வண்ணம் 
முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே.    216 
புறப்பாட்டு வண்ணம் 
முடிந்தது போன்று முடியாதாகும்.    217 
ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்.    218 
ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்.    219 
எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்.    220 
அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும்.    221 
தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்.    222 
ஏந்தல் வண்ணம் 
சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும்.    223 
உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்.    224 
முடுகு வண்ணம் 
அடி இறந்து ஓடி அதன் ஓரற்றே.    225 
வண்ணம்தாமே இவை என மொழிப.    226 
வனப்பு இயல்தானே வகுக்கும் காலை 
சில் மென் மொழியான் தாய பனுவலின் 
அம்மைதானே அடி நிமிர்வு இன்றே.    227 
செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின் 
அவ் வகைதானே அழகு எனப்படுமே.    228 
தொன்மைதானே 
உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே.    229 
இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் 
பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும் 
தோல் என மொழிப தொல் மொழிப் புலவர்.    230 
விருந்தேதானும் 
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.    231 
ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப் 
புள்ளி இறுதி இயைபு எனப்படுமே.    232 
சேரி மொழியான் செவ்விதின் கிளந்து 
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் 
புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே.    233 
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது 
குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து 
ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின் 
இழைபின் இலக்கணம் இயைந்ததாகும்.    234 
செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி 
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல 
வருவ உள எனினும் வந்தவற்று இயலான் 
திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.    235