புறநானூறு

புறநானூறு

பாடல்கள்


121. புலவரும் பொதுநோக்கமும்!
பாடியவர் : கபிலர். 
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. 
திணை: பொதுவியல். 
துறை: பொருண் மொழிக் காஞ்சி. 

ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;
அது நற்கு அறிந்தனை யாயின்,
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!

122. பெருமிதம் ஏனோ! 
பாடியவர் : கபிலர். 
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. 
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல்புனை திருந்துஅடிக் காரி! நின் நாடே;
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன், ‘துப்பா கியர்’ என,
ஏத்தினர் தரூஉங் கூழே, நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின், மடமொழி,
அரிவை தோள் அளவு அல்லதை,
நினது என இலைநீ பெருமிதத் தையே.

123. மயக்கமும் இயற்கையும்! 
பாடியவர் : கபிலர். 
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. 
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கிழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.

124. வறிது திரும்பார்!
பாடியவர் : கபிலர். 
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,
பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,
வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடி யோரே.

125. புகழால் ஒருவன்! 
பாடியவர் : வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார். 
பாடப்பட்டோன்: தேர்வண் மலையன். 
திணை: வாகை. 
துறை: அரச வாகை. 
குறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற் கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய மலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர். 

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை,
பரூஉக் கண் மண்டை யடு, ஊழ்மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே,
நள் ளாதார் மிடல் சாய்ந்த
வல்லாள ! நின் மகிழிருக் கையே
உழுத நோன் பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே;
குன்றத் தன்ன களிறு பெயரக்,
கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
‘வெலீஇயோன் இவன்’ எனக்
‘கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
விரைந்து வந்து, சமந் தாங்கிய,
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு’ எனத்,
தோற்றோன் தானும், நிற்கூ றும்மே,
‘தொலைஇயோன் அவன்’ என,
ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே.

126. கபிலனும் யாமும்!
பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார். 
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. 
திணை: பாடாண். 
துறை: பரிசில் 

ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
வல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும், வல்லே
நின்வயிற் கிளக்குவம் ஆயின், கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருநர்
தெறலரு மரபின் நின் கிளையடும் பொலிய,
நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன்,
இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப்,
பரந்து இசை நிறகப் பாடினன், அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்,
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ் வழிப்,
பிறகலம் செல்கலாது அனையேம் அத்தை,
இன்மை துரப்ப, அசை தர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே; முள்ளெயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப,
அண்ணல் யானையடு வேந்து களத்து ஒழிய,
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!

127. உரைசால் புகழ்!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். 
பாடப்பட்டோன்: வேள் ஆய் அரண்டின். 
திணை: பாடாண். 
துறை: கடைஇநிலை. 

‘களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தெனக்,
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்,
கான மஞ்ஞை கணனுடு சேப்ப,
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
முரைசு கெழு செல்வர் நகர்போ லாதே.

128. முழவு அடித்த மந்தி! 
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். 
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். 
திணை: பாடாண். 
துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம். 

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்;
ஆடு மகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

129. வேங்கை முன்றில்! 
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். 
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 
சிறப்பு : தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல். 

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீஞ்சுளைப் பலவின், மாமலைக் கிழவன்;
ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று,
வானம் மீன்பல பூப்பின், ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் ளென்னிற், பிழையாது மன்னே.

130. சூல் பத்து ஈனுமோ?
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். 
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். 
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு,
இன்முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!