புறநானூறு

புறநானூறு

பாடல்கள்


311. சால்பு உடையோனே!
பாடியவர்: ஔவையார் 
திணை: தும்பை 
துறை : பாண் பாட்டு 

களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்;
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.

312. காளைக்குக் கடனே! 
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

313. வேண்டினும் கடவன்! 
பாடியவர்: மாங்குடி மருதனார் 
திணை: வாகை 
துறை : வல்லான் முல்லை 

அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ;
உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.

314. மனைக்கு விளக்கு! 
பாடியவர்: ஐயூர் முடவனார் 
திணை: வாகை 
துறை : வல்லான் முல்லை 

மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை,
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.

315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்! 
பாடியவர்: ஔவையார். 
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. 
திணை: வாகை. 
துறை : வல்லான் முல்லை. 

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே.

316. சீறியாழ் பனையம்!
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது, நீயும்;
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்,
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்,
சென்று வாய் சிவந்துமேல் வருக_
சிறுகண் யானை வேந்து விழுமுறவே.

317. யாதுண்டாயினும் கொடுமின்! 
பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார் 
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 

வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,
யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. .. 
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.

318. பெடையடு வதியும்! 
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார் 
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 

கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅ யோளடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_
மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்,
பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான்
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்,
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன்புறப் பெடையடு வதியும்
யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே.

319. முயல் சுட்டவாயினும் தருவோம்! 
பாடியவர்: ஆலங்குடி வங்கனார் 
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 

பூவற் படுவிற் கூவல் தோண்டிய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி,
யாம் க·டு உண்டென, வறிது மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை யணிய,
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.

320. கண்ட மனையோள்!
பாடியவர்: வீரை வெளியனார் 
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 

முன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,
மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியடு இதல்கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாறத்
தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.