புறநானூறு

புறநானூறு

பாடல்கள்


51. ஈசலும் எதிர்ந்தோரும் ! 
பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம். 
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை: வாகை. 
துறை; அரச வாகை. 
குறிப்பு; 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது. 

நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,
கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல,
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!

52. ஊன் விரும்பிய புலி ! 
பாடியவர்: மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம். 
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. 
திணை: வாகை. 
துறை; அரச வாகை. 
குறிப்பு; நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி. 

அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,
ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்
தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,
வடபுல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடி
வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்,
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில், 
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே!

53. செந்நாவும் சேரன் புகழும்! 
பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார். 
பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. 
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 
குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி. 

முதிர்வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களங்கொள் யானைக், கடுமான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே; ‘தாழாது
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்
பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே.

54. எளிதும் கடிதும்! 
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார். 
பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை. 
திணை: வாகை. 
துறை : அரசவாகை. 

எங்கோன் இருந்த கம்பலை முதூர்,
உடையோர் போல இடையின்று குறுகிச்,
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி,
மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.

55. மூன்று அறங்கள்! 
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். 
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். 
துறை: செவியறிவுறூஉ. 

ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல,
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்;
கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும்,
நெஞ் சுடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட
அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
‘பிறர்’ எனக் குணங் கொல்லாது,,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

56. கடவுளரும் காவலனும்! 
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்). 
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். 
திணை: பாடாண். 
துறை : பூவை நிலை. 

ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை,
மாற்றருங் கணிச்சி, மணி மிடற் றோனும்,
கடல் வளர் புரிவளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக்கொடி யோனும்;
மண் ணுறு திருமணி புரையும் மேனி,
விண்ணுயர் புல்கொடி, விறல்வெய் யனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்,
பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்_என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல்இசை, நால்வர் உள்ளும்,
கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே, வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின், யாங்கும்
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா,
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து,
ஆங்கினிது ஒழுகுமதி! ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண்கதிர் மதியம் போல்வும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!

57. காவன்மரமும் கட்டுத்தறியும்! 
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். 
பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: வஞ்சி. 
துறை : துணை வஞ்சி. 

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு! நின்
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே.

58. புலியும் கயலும்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். 
பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும். 
குறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது. 
திணை: பாடாண். 
துறை : உடனிலை. 

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்,
அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென,
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்,
காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று
அடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.

59. பாவலரும் பகைவரும்! 
பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். 
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். 
துறை : பூவைநிலை. 

ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின்,
தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி!
வல்லை மன்ற, நீநயந் தளித்தல்!
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.

60. மதியும் குடையும்! 
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று . 
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன். 
திணை: பாடாண். 
துறை : குடை மங்கலம். 

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து,
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்,
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?