புறநானூறு

புறநானூறு

பாடல்கள்


81. யார்கொல் அளியர்?
பாடியவர்: சாத்தந்தையார் 
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி 
திணை:வாகை 
துறை: அரசவாகை 

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே?

82. ஊசி வேகமும் போர் வேகமும்! 
பாடியவர் :சாத்தந்தையார். 
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. 
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனொடு,
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

83. இருபாற்பட்ட ஊர்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார். 
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. 
திணை: கைக்கிளை. 
துறை: பழிச்சுதல். 

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

84. புற்கையும் பெருந்தோளும்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். 
பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. 
திணை: கைக்கிளை. 
துறை: பழிச்சுதல். 

என்ஜ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் ஜ் போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!

85. யான் கண்டனன்! 
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். 
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. 
திணை: கைக்கிளை 
துறை: பழிச்சுதல். 

என்னைக்கு ஊர் இ·து அன்மை யானும்,
என்னைக்கு நாடு இ·து அன்மை யானும்,
ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே;
ஆடன்று என்ப, ஒருசா ரோரே;
நல்ல,பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல், 
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.

86. கல்லளை போல வயிறு!
பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம். 
பாடப்பட்டோன் 
திணை: வாகை 
துறை: ஏறாண் முல்லை 

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் 
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!

87. எம்முளும் உளன்! 
பாடியவர்: ஔவையார். 
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி. 
திணை; தும்பை. 
துறை; தானை மறம். 

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.

88. எவருஞ் சொல்லாதீர்!
பாடியவர்: ஔவையார். 
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி. 
திணை; தும்பை. 
துறை; தானை மறம். 

யாவிர் அயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.

89. என்னையும் உளனே! 
பாடியவர்: ஔவையார். 
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. 
திணை : தும்பை. துறை: தானை மறம். 

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,
மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்னையும் உளனே!

90. புலியும் மானினமும்! 
பாடியவர்: ஔவையார். 
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. 
திணை : தும்பை. 
துறை: தானை மறம். 

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
விரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?