அகநானூறு

அகநானூறு

களிற்றியாணை நிரை


97
பாடியவர்: மாமூலனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து
புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை
இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்  5
கொலை வில் ஆடவர் போலப் பலவுடன்
பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்
இருங்கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு  10
அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி
நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் புலம்பப் பல நினைந்து
ஆழேல் என்றி தோழி யாழ என்  15
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரைத்
துறை அணி மருது தொகல் கொள ஓங்கிக்
கலிழ் தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து  20
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்ப்
புகை புரை அம் மஞ்சு ஊர
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?

98
பாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தலைவி சொன்னது

பனி வரை நிவந்த பயங் கெழு கவாஅன்
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்  5
அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து  10
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க என் மகட்கு எனப் பரைஇ
கூடு கொள் இன் இயம் கறங்கக் களன் இழைத்து
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்  15
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்
ஐது அமை பாணி இரீஇக் கை பெயராச்
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்  20
என் ஆம் கொல்லோ தோழி மயங்கிய
மையல் பெண்டிற்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின் இம்மறை
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று 25
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி
வெறி கமழ் நெடுவேள் நல்குவனே எனின்
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது எனக்
கான் கெழு நாடன் கேட்பின்
யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிதே.  30

99
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தலைவியிடம் சொன்னது

வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதர் ஆர் செம்மல் தா அய் மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை  5
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயவரும் அம்ம  10
கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்
பிடி மிடை களிற்றின் தோன்றும்
குறு நெடுந்துணைய குன்றமும் உடைத்தே.

100
பாடியவர்: உலோச்சனார்,
திணை:  நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்
புரையப் பூண்ட கோதை மார்பினை
நல் அகம் வடுக் கொள முயங்கி நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே
பெருந்திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த  5
கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்  10
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்
பரியுடை நல் தேர்ப் பெரியன் விரி இணர்ப்
புன்னை அம் கானல் புறந்தை முன் துறை
வம்ப நாரை இனன் ஒலித்தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் 15
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே.

101
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது

அம்ம வாழி தோழி இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்று படு பழமொழி இன்று பொய்த்தன்று கொல்
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல் மாய் பித்தைச் செங்கண் மழவர்  5
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகிக்
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்  10
இனம் தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர்  15
தண் கார் ஆலியின் தாவன உதிரும்
பனி படு பன் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே.

102
பாடியவர்: மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

உளைமான் துப்பின் ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசை வளி ஆற்றக் கை பெயரா
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி  5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடு பெற்று ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்
ஆர மார்பின் வரி ஞிமிறு ஆர்ப்பத்  10
தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன்
காவலர் அறிதல் ஓம்பிப் பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து
உயங்கு படர் அகலம் முயங்கித் தோள் மணந்து
இன் சொல் அளைஇப் பெயர்ந்தனன் தோழி  15
இன்று எவன் கொல்லோ கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்ணுதல் பசப்பே.

103
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

நிழல் அறு நனந்தலை எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செந்நாவின்
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறிக்
காமர் சேவல் ஏமம் சேப்ப
முளி அரில் புலம்பப் போகி முனாஅது  5
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன் நகர்
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அருஞ்சுரம் நீந்தித் தம் வயின்  10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர் மன் என
நள்ளென் யாமத்து உயவுத் துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார் கொல்லோ நாம் நயந்திசினோரோ?  15

104
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: முல்லைத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

வேந்து வினை முடித்த காலைத் தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா  5
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடுந்தேர்
வாங்கு சினை பொலிய ஏறிப் புதல
பூங்கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி
மாழ்கியன்ன தாழ் பெருஞ்செவிய  10
புன்தலை சிறாரோடு உகளி மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை
இனிது செய்தனையால் எந்தை வாழிய
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்  15
ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய் தந்தோயே.

105
பாடியவர்: தாயங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவியின் தாய் சொன்னது

அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட
யாங்கு வல்லுநள் கொல் தானே தேம் பெய்து
மணி செய் மண்டைத் தீம்பால் ஏந்தி  5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்
நிழல் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள் பொய்ம் மருண்டு
பந்து புடைப்பு அன்ன பாணிப் பல்லடிச்
சில் பரிக் குதிரை பல் வேல் எழினி  10
கெடல் அருந் துப்பின் விடு தொழில் முடிமார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம் பிழி நறுங்கள் மகிழின் முனை கடந்து
வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம்  15
முகை தலை திறந்த வேனில்
பகைதலை மணந்த பல் அதர்ச் செலவே?

106
பாடியவர்: ஆலங்குடி வங்கனார், 
திணை: மருதத் திணை 
பரத்தை தன் தோழியிடம் சொன்னது

எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்துப்
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை  5
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம் ஆயினும் உய்யாமையின்
செறி தொடி தெளிர்ப்ப வீசிச் சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்  10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு தொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே.

107
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்து காரிக் கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

நீ செலவு அயரக் கேட்டொறும் பல நினைந்து
அன்பின் நெஞ்சத்து அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார் நின்னொடு
கருங்கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்  5
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்  10
கல்லா நீள் மொழிக் கதநாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு  15
அம் குழை இருப்பை அறைவாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி
மரை கடிந்து ஊட்டும் வரையகச் சீறூர்
மாலை இன் துணை ஆகிக் காலைப்
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப 20
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.

108
பாடியவர்: தங்கால் பொற்கொல்லனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று மன்னால் எவன் கொல் முத்தம்
வரை முதல் சிதறியவை போல் யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்பக்  5
கார் கதம் பட்ட கண் அகன் விசும்பின்
விடு பொறி ஞெகிழியிற் கொடி பட மின்னி
படுமழை பொழிந்த பானாள் கங்குல்
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்  10
அருளான் வாழி தோழி அல்கல்
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்குடை அருந்தலை பை விரிப்பவை போல்
காயா மென் சினை தோய நீடிப்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்  15
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலை கிழவோனே.