அகநானூறு

அகநானூறு

நித்திலக்கோவை


301
பாடியவர்: அதியன் விண்ணத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு  5
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
பாடு இன் தெண் கிணை கறங்கங் காண்வரக்  10
குவி இணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர் பூங்கோதை
வண்ண மார்பின் வன முலைத் துயல்வரச்  15
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
குறு நெடுந்தூம்பொடு முழவுப் புணர்ந்திசைப்பக்
கார் வான் முழக்கின் நீர் மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மானச் சீர் அமைத்து
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு  20
பல்லூர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத்
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்தலை மன்றங்காணின் வழி நாள்
அழுங்கன் மூதூர்க்கு இன்னாதாகும்  25
அதுவே மருவினம் மாலையதனால்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே?

302
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம் தோடு அசைவளி உறு தொறும்
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படுசுனைக் குற்றும்  5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி
இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பென கவினிய பெருங்குரல் ஏனல்  10
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே.  15

303 
பாடியவர்: ஔவையார், 
திணை: பாலைத் திணை
தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது

இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து
பேஎய் கண்ட கனவின் பன் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்
மறமிகு தானைப் பசும்பூண்பொறையன்
கார் புகன்றெடுத்த சூர் புகல் நனந்தலை  5
மா இருங்கொல்லி உச்சித் தாஅய்த்
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்  10
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பினவாகிப் பொழுதுபடப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு
வருவா என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்  15
ஐயந் தெளியரோ நீயே பலவுடன்
வறன் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து
அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு அவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே.  20

304
பாடியவர்: இடைக்காடனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
சூர்ப் பனிப்பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை  5
செய்து விட்டன்ன செந்நில மருங்கில்
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகிச்
சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதியச் 10
சுரும்பு இமிர்பு ஊதப் பிடவுத் தளை அவிழ
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணி மிடை பவளம் போல அணிமிகக்
காயாஞ்செம்மல் தாஅய்ப் பலவும்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்பப்  15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர் நம் அருளாதோர் என
நம் நோய் தன்வயின் அறியாள்  20
எம் நொந்து புலக்கும் கொல் மாஅயோளே?

305 
பாடியவர்: வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், 
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது

பகலினும் அகலாதாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழியத்
தளி மழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்
பல்படை நிவந்த வறுமை இல்சேக்கை  5
பருகுவன்ன காதலொடு திருகி
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
அருளிலாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து  10
யான் எவன் உளனே தோழி தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும் கூர்வாய்
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனை எரி பிறப்ப ஊதும் 15
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?

306
பாடியவர்: மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், 
திணை: மருதத் திணை
தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது

பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்  5
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட
மதி ஏர் ஒண்ணுதல் வயங்கு இழை ஒருத்தி  10
இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோயுற நோக்கித்
தண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்தெம்
மணன் மலி மறுகின் இறந்திசினோளே.  15

307
பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், 
திணை: பாலைத் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

சிறு நுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங்கங்குலும் மயங்கிப் பையெனப்
பெயல் உறு மலரின் கண் பனி வார
ஈங்கிவள் உழக்கும் என்னாது வினை நயந்து 5
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையலங் கடாஅஞ் செருக்கி மதஞ் சிறந்து
இயங்குநர்ச் செருக்கும் எய்படு நனந்தலைப்
பெருங்கை எண்கினம் குரும்பி தேரும்  10
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே?  15

308
பாடியவர்: பிசிராந்தையார், 
திணை: குறிஞ்சித் திணை
தோழி தலைவனிடம் சொன்னது, பகலில் வரும்படி

உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப் புண் கழாஅக் கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்
இலங்கு மலை புதைய வெண்மழை கவைஇக்  5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட
இரவின் வருதல் எவனோ பகல் வரின்
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கன் முகை இதணத்துச்
சிறு தினைப் படுகிளி எம்மொடு ஓப்பி  10
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளை
தேம்பாய் ஒண்பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சிப் பொழுதுபடக்
காவலர்க் கரந்து கடி புனம் துழைஇய
பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை  15
கருங்கோல் குறிஞ்சி நும் உறைவின் ஊர்க்கே.

309
பாடியவர்: கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார், 
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது

வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண்படுத்து வன் புலத்து உய்த்தெனத்
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்  5
புலவுப் புழுக்குண்ட வான் கண் அகல் அறைக்
களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார் கோடியர்
பெரும் படைக் குதிரை நற்போர் வானவன்  10
திருந்து கழல் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு
நாம் செலின் எவனோ தோழி காம்பின்
விளை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது
இரவுப் புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்  15
தண் பெரும் படாஅர் வெரூஉம்
குன்று விலங்கிய இயவின் அவர் சென்ற நாட்டே?

310
பாடியவர்: நக்கீரனார், 
திணை: நெய்தற் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழுதகு மெய்யை அழிவு முந்துறுத்துப்
பன்னாள் வந்து பணி மொழி பயிற்றலின்
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு  5
இவளும் பெரும் பேதுற்றனள் ஓரும்
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்டக்
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெருமடம் உடையரோ சிறிதே அதனால்
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப  10
இன்று இவண் விரும்பா தீமோ சென்றப்
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்கண்
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப்படு பேடை இரியக் குரைத்து எழுந்து  15
உருமிசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.

311
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று
அருங்கடிக் காப்பின் அகன் நகர் ஒரு சிறை
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரை நாள் காவலர் மடிந்தெனத்
திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர்  5
இம்மை உலகத்து இல்லெனப் பன்னாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப
வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி  10
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்
அருண்மொழி தேற்றி நம் அகன்றிசினோரே.

312
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: குறிஞ்சித் திணை
தோழி சொன்னது, அல்லது தலைவி சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

நெஞ்சு உடன்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரையக் கருதும் ஆயின் பெரிது வந்து
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது  5
அரிமதர் மழைக் கண் சிவப்ப நாளைப்
பெருமலை நாடன் மார்பு புணையாக
ஆடுகம் வம்மோ காதலம் தோழி
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து
இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார்  10
ஓடுபுறம் கண்ட தாள் தோய் தடக்கை
வெல்போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போலக்
கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே.