அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


169
பாடியவர்: தொண்டி ஆமூர்ச் சாத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலைப்
புலி தொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை
ஞெலி கோல் சிறு தீ மாட்டி ஒலி திரைக்  5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீ நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து நனி
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை  10
மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கிக்
கயல் உமிழ் நீரின் கண் பனி வாரப்
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால் அளியள் திருந்திழை தானே.

170
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார், 
திணை: நெய்தற் திணை 
தலைவி நண்டிடம் சொன்னது

கானலும் கழறாது கழியும் கூறாது
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇத்  5
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடல் சிறு காக்கை காமர் பெடையொடு  10
கோட்டு மீன் வழங்கும் வேட்ட மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து
நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ எனவோ.

171
பாடியவர்: கல்லாடனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

நுதலும் நுண் பசப்பு இவரும் தோளும்
அகன் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும் நாளும்
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது
இனையல் வாழி தோழி புணர்வர்  5
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழப் பொருள் புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
மால் வரைச் சீறூர் மருள் பன் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்
திருத்திக் கொண்ட அம்பினர் நோன் சிலை  10
எருத்தத்து இரீஇ இடம்தொறும் படர்தலின்
கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினைப்
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய
கருங்கோட்டு இருப்பை ஊரும்
பெருங்கை எண்கின் சுரன் இறந்தோரே.  15

172
பாடியவர்: மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன்னிசை இமிழ் இயம் கடுப்ப இம்மெனக்
கல் முகை விடர்அகம் சிலம்ப வீழும்
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்  5
இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்திக் கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி  10
முன்றில் நீடிய முழவு உறழ் பலவின்
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட நீ அன்பிலை ஆகுதல்
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின்  15
அணி இழை உண்கண் ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண் நலம் சிதையப்
பொன் நேர் பசலை பாவின்று மன்னே.

173
பாடியவர்: முள்ளியூர்ப் பூதியார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் எனச்
செய் வினை புரிந்த நெஞ்சினர் நறு நுதல்
மை ஈர் ஓதி அரும் படர் உழத்தல்  5
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின்
நல் மாண் எல் வளை திருத்தினர் ஆயின்
வருவர் வாழி தோழி பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ  10
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓடக்
காடு கவின் அழிய உரைஇக் கோடை
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல பழங்குழித் தாஅம்  15
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலை இறந்தோரே.

174
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து
ஒரு படை கொண்டு வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் எனப்
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள் முல்லை  5
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து
காலை வானத்துக் கடுங்குரல் கொண்மூ
முழங்குதொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்கு ஆகுவள் கொல் தானே வேங்கை  10
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்
நன் மணல் வியல் இடை நடந்த
சின் மெல் ஒதுக்கின் மாஅயோளே?

175
பாடியவர்: ஆலம்பேறி சாத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடு தொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும்  5
வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து
வருதும் என்றனர் அன்றே தோழி
கால் இயல் நெடுந் தேர்க் கைவண் செழியன்  10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்  15
திரு வில் தேஎத்துக் குலைஇ உருகெழு
மண் பயம் பூப்பப் பாஅய்த்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே.

176
பாடியவர்: மருதம் பாடிய இளங்கடுங்கோ, 
திணை: மருதத் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை  5
முறுவல் முகத்தின் பன் மலர் தயங்கப்
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து
வேப்பு நனை அன்ன நெடுங்கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண் குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல்  10
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து  15
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல்
புல் உளைக் குடுமிப் புதல்வன் பயந்து
நெல் உடை நெடு நகர் நின்னின்று உறைய  20
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி
வடித்து என உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு
கூர் நுனை மழுகிய எயிற்றள்  25
ஊர் முழுது நுவலும் நின் காணிய சென்மே.

177
பாடியவர்: செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

தொன்னலம் சிதையச் சாஅய் அல்கலும்
இன்னும் வாரார் இனி எவன் செய்கு எனப்
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறுகண்
இரும் பிடித் தடக்கை மான நெய் அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற வெறி கொள் ஐம்பால் 5
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார் காண்பின்
கழை அமல் சிலம்பின் வழைதலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏகல் நெறியிடைப்
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக்
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை 10
அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்
காடுஇறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் வென்வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த  15
கழற்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற்கயம் தழீஇய நெடுங்கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.  20

178
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி  5
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டித் தாது உக  10
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வரக்
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள்
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து என்றும்  15
தவல் இல் உலகத்து உறை இயரோ தோழி
எல்லையும் இரவும் என்னாது கல்லெனக்
கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத்
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது எனக்
கனவினும் பிரிவு அறியலனே அதன் தலை  20
முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே.

179
பாடியவர்: கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்
வெண்தேர் ஓடும் கடங் காய் மருங்கில்
துனை எரி பரந்த துன்னரும் வியன் காட்டுச்
சிறு கண் யானை நெடுங்கை நீட்டி
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது  5
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய்ச் செங்கணைக் கொடு வில் ஆடவர்
நல் நிலை பொறித்த கல் நிலை அதர
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை  10
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்
குவளை நாள் மலர் புரையும் உண்கண் இம்
மதி ஏர் வாணுதல் புலம்ப
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே?

180
பாடியவர்: கருவூர்க் கண்ணம்பாளனார், 
திணை: நெய்தற் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

நகை நனி உடைத்தால் தோழி தகை மிக
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி
வீ ததை கானல் வண்டல் அயர
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து
தண் கயத்து அமன்ற ஒண் பூங்குவளை 5
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி
நல்வரல் இளமுலை நோக்கி நெடிது நினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே
புலவு நாறு இருங்கழி துழைஇப் பல உடன்  10
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப்
படப்பை நின்ற முடத்தாள் புன்னைப்
பொன் நேர் நுண் தாது நோக்கி
என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே.  15