அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


229
பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழ் போழ்ந்தென
நீர் அற வறந்த நிரம்பா நீளிடைக்
கயந்தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பலவுடன்  5
பாழூர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக வல்லெனப்
பெருந் துனி மேவல் நல்கூர் குறுமகள்  10
நோய் மலிந்து உகுத்த நொசிவரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்பப்
பொன் ஏர் பசலை ஊர்தரப் பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி சினைய  15
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின
போது அவிழ் அலரி கொழுதித் தாது அருந்து
அம் தளிர் மா அத்து அலங்கல் மீ மிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன் இள வேனிலும் வாரார்  20
இன்னே வருதும் எனத் தெளித்தோரே.

230
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், 
திணை: நெய்தற் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று
மை ஈர் ஓதி வாணுதல் குறுமகள்  5
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ மாதராய் எனக்  10
கடும் பரி நல் மான் கொடிஞ்சி நெடுந்தேர்
கை வல் பாகன் பையென இயக்க
யாம் தற்குறுகினமாக ஏந்து எழில்
அரி வேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச்
சிறிய இறைஞ்சினள் தலையே  15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.

231
பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்,
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல்லிருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடு விற் கானவர் கணைஇடத் தொலைந்தோர்  5
படு களத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்
கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங்கடத்திடை
வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக
வருவர் வாழி தோழி பொருவர்  10
செல்சமம் கடந்த செல்லா நல்லிசை
விசும்பிவர் வெண்குடைப் பசும் பூண் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.  15

232
பாடியவர்: கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

காண் இனி வாழி தோழி பானாள்
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்
மாஅல் யானை புலி செத்து வெரீஇ
இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங்கல் நாடன் கேண்மை இனியே  5
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மண நாள் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்  10
ஆர்கலி விழவுக் களம் கடுப்ப நாளும்
விரவுப்பூம் பலியொடு விரைஇ அன்னை
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பருவமாகப் பயந்தன்றால் நமக்கே.  15

233
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

அலமரல் மழைக்கண் மல்கு பனி வார நின்
அலர் முலை நனைய அழாஅல் தோழி
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலப்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென
ஊன் இல் யானை உயங்கும் வேனில்  5
மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும் பல்
கூளிச் சுற்றம் குழீஇயிருந்தாங்கு  10
குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ
பொருள்வயின் நீடலோ இலர் நின்
இருள் ஐங்கூந்தல் இன்துயில் மறந்தே.  15

234
பாடியவர்: பேயனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமையப் பற்றி முள்கிய  5
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்பக்
கால் என மருள ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந்தேர்
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை  10
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத
எல்லை போகிய புல்லென் மாலைப்
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்  15
கழிபடர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.

235
பாடியவர்: கழார்க்கீரன் எயிற்றியார்,
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது   

அம்ம வாழி தோழி பொருள் புரிந்து
உள்ளார் கொல்லோ காதலர் உள்ளியும்
சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ
பயன் நிலம் குழைய வீசிப் பெயல் முனிந்து
விண்டு முன்னிய கொண்டல் மா மழை  5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழச்
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணியக்  10
களவன் மண் அளைச் செறிய அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க
நனி கடுஞ்சிவப்பொடு நாமம் தோற்றிப்
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை  15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய
நுதல் இறை கொண்ட அயல் அறி பசலையொடு
தொன்னலம் சிதையச் சாஅய்
என்னள் கொல் அளியள் என்னாதோரே.

236
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
தலைவி தோழியிடம்சொன்னது

மணி மருள் மலர முள்ளி அமன்ற
துணி நீர் இலஞ்சிக் கொண்ட பெருமீன்
அரி நிறக் கொழுங்குறை வௌவினர் மாந்தி
வெண்ணெல் அரிநர் பெயர் நிலைப் பின்றை
இடை நிலம் நெரிதரு நெடுங்கதிர்ப் பல் சூட்டுப்  5
பனி படு சாய்ப் புறம் பரிப்பக் கழனிக்
கருங்கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப்பூ
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன் நன்றும்
உய்ந்தனென் வாழி தோழி அல்கல்  10
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பக்
கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்
ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின்
தோட்டு இருஞ்சுரியன் மணந்த பித்தை  15
ஆட்டன் அத்தியை காணீரோ என
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக்
கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த
ஆதிமந்தி போல ஏதம் சொல்லிப் பேது பெரிது உறலே.  20

237
பாடியவர்: தாயங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

புன் கால் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து  5
இன்னா கழியும் கங்குல் என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப
இனைதல் ஆன்றிசின் ஆய் இழை கனை திறல்
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங்குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு  10
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீஞ்சேற்றொடு
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து  15
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.

238
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

மான்று அமை அறியா மரம் பயில் இறும்பின்
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென
மடமான் வல்சி தரீஇய நடுநாள்
இருள் முகைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
பனை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து  5
மடக் கண் ஆமான் மாதிரத்து அலறத்
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏ எறு
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி
இருங்கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெரு கல் நாட பிரிதி ஆயின்  10
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடுந்தேர் களிறொடு என்றும்
மழை சுரந்தன்ன ஈகை வண் மகிழ்க்
கழல் தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து  15
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே?

239
பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அளிதோ தானே எவன் ஆவது கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும்
புலி என உலம்பும் செங்கண் ஆடவர்
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்
எல் ஊர் எறிந்து பல் ஆத் தழீஇய  5
விளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும்
வேறு பல் தேஅத்து ஆறு பல நீந்திப்
புள்ளித் தொய்யில் பொறிபடு சுணங்கின்
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய  10
ஈட்டு அருங்குரைய பொருள் வயின் செலினே
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் எனக்
குறு நெடு புலவி கூறி நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே.  15

240
பாடியவர்: எழூஉப்பன்றி நாகன் குமரனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப
இனிப் புலம்பின்றே கானலும் நளி கடல்
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்  5
பன்மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே அந்தில்
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் நீயும்
தேம் பாய் ஓதி திருநுதல் நீவிக்  10
கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து
இன்துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்ப்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே.  15