அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


289
பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாள் பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்
வந்து வினை வலித்த நம்வயின் என்றும்  5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது
நெகிழா மென்பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும் உயவும் ஆய் மடத் தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண்சுவர் நோக்கி நினைந்து கண் பனி  10
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலைத் தெறிப்ப
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன்அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி 15
நல்ல கூறு என நடுங்கிப்
புல்லென் மாலையொடு பொரும் கொல் தானே.

290
பாடியவர்: நக்கீரர், 
திணை: நெய்தற் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை
இருஞ்சேற்று அள்ளல் நாள் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர்
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது  5
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்
கழி சேர் புன்னை அழி பூங்கானல்
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம்  10
மணவா முன்னும் எவனோ தோழி
வெண் கோட்டு யானை விறல் போர்க் குட்டுவன்
தென் திரைப் பரப்பின் தொண்டி முன் துறைச்
சுரும்பு உண மலர்ந்த பெருந்தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇப்  15
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே.

291
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

வானம் பெயல் வளம் கரப்பக் கானம்
உலறி இலை இல வாகப் பல உடன்
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்பக்
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரிப்  5
புலியொடு பொருது சினஞ்சிவந்து வலியோடு
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉப் பரல்
சிறு பல் மின்மினி கடுப்ப எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இருஞ்சிறை இரீஇய விரி இணர்த்  10
தாது உண் தும்பி முரல் இசை கடுப்பப்
பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர
உவலை சூடிய தலையர் கவலை
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும்
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதரச்  15
சிறி இலை நெல்லித் தீம்சுவைத் திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி
மறு மருப்பு இளங்கோடு அதிரக் கூஉம்  20
சுடர் தெற வருந்திய அருஞ்சுரம் இறந்து ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே போது எனப்
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்
நல் எழில் மழைக் கண் நம் காதலி
மெல் இறைப் பணைத் தோள் விளங்கும் மாண் கவினே.  25

292
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறிச்
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறிபுரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்  5
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்  10
கடுவிசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடுஉறு கணையின் போகிச் சாரல்
வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ
பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு நாடன் மணவாக் காலே.  15

293
பாடியவர்: காவன்முல்லைப் பூதனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது

இலை ஒழித்து உலறிய புன்தலை உலவை
வலை வலந்தனைய ஆகப் பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலங் கெடு வைப்பின்
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெங்களரி  5
குயில் கண் அன்ன குரூஉக் காய் முற்றி
மணிக் காசு அன்ன மால் நிற இருங்கனி
உகாஅ மென்சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி யாமே  10
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து
இன்னா மொழிதும் என்ப
என் மயங்கினர் கொல் நம் காதலோரே?

294
பாடியவர்: கழார்க்கீரன் எயிற்றியார், 
திணை: முல்லைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கித்
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை புகையுறப்
புள்ளி நுண் துவலைப் பூவகம் நிறையக்
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலரத்  5
துய்த்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரைப் பைம் பூப் பயில அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்சக்  10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்
காய்சின வேந்தன் பாசறை நீடி
நம் நோய் அறியா அறனிலாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல் என
ஆனாது எறி தரும் வாடையொடு  15
நோனேன் தோழி என் தனிமையானே.

295
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்பக்
குன்று கோடு அகையக் கடுங்கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை
நிலவு நிற மருப்பின் பெருங்கை சேர்த்தி
வேங்கை வென்ற வெருவரு பணைத்தோள்  5
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பிப்
பல் மர ஒருசிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்திக்
கடல் நீர் உப்பின் கணஞ்சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து  10
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசைவிட ஊறும்
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து
நடை அருங்கானம் விலங்கி நோன் சிலைத்
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்  15
பிழி ஆர் மகிழ்நர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்  20
மணங்கமழ் ஐம்பால் மடந்தை நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.

296
பாடியவர்: மதுரைப் பேராலவாயார், 
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

கோதை இணர குறுங்கால் காஞ்சிப்
போது அவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்
அரி மதர் மழைக் கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடிப்  5
புலரா மார்பினை வந்து நின்று எம் வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
பன் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசை கொற்கைப் பொருநன் வென் வேல்  10
கடும் பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்
மலை புரை நெடுநகர்க் கூடல் நீடிய
மலி தரு கம்பலை போல
அலர் ஆகின்று அது பலர் வாய்ப்பட்டே.

297
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும்
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி
நம் வயின் இனையும் இடும்பை கைம்மிக
என்னை ஆகுமோ நெஞ்சே நம் வயின்
இருங்கவின் இல்லாப் பெரும் புன் தாடிக்  5
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்  10
சூர் முதல் இருந்த ஓமையம் புறவின்
நீர்முள் வேலிப் புலவு நாறு முன்றில்
எழுதியன்ன கொடிபடு வெருகின்
பூளையன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம்  15
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும்
வெருவரு கானம் நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே.

298
பாடியவர்: மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவி தலைவனிடம் சொன்னது

பயங்கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி
மல்கு கடல் தோன்றியாங்கு மல்குடை
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலிகெழு பெருஞ்சினைத்  5
தண் துளி அசை வளி தைவரும் நாட
கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது
பெரும் பெயல் கடாஅஞ் செருக்கி வள மலை
இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின்  10
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி
தாம் பூங்கோதை ஊது வண்டு இரீஇ
மென்பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை  15
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சிப் பானாள்
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு
இனையல் வாழி தோழி நம் துறந்தவர்  20
நீடலர் ஆகி வருவர் வல்லென
கங்குல் உயவுத் துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே.

299
பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

எல்லையும் இரவும் வினை வயின் பிரிந்த
உள்ளம் முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் வழி தேக்கு இலை  5
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு
விசும்பு கண் புதையப் பாஅய்ப் பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்க்
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென  10
வைகு நிலை மதியம் போலப் பையெனப்
புலம்பு கொள் அவலமொடு புதுக் கவின் இழந்த
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
இகு தரு தெண் பனி ஆகத்து உறைப்பக்  15
கால் நிலை செல்லாது கழி படர்க் கலங்கி
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து உயிராப்
பருவரல் எவ்வமொடு அழிந்த  20
பெரு விதுப்பு உறுவி பேதுறு நிலையே.

300
பாடியவர்: உலோச்சனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை
எல்லை தண் பொழில் சென்றெனச் செலீஇயர்  5
தேர் பூட்டு அயர ஏஎய் வார்கோல்
செறி தொடி திருத்திப் பாறு மயிர் நீவிச்
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை எனச்
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து
தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது  10
நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால்
சேணின் வருநர் போலப் பேணாய்
இருங்கலி யாணர் எம் சிறுகுடித் தோன்றின்
வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத்  15
துறையும் மான்றன்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என
எமர் குறை கூறத் தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற நீயும்  20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே.