ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

பாலைத்திணை


391.
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி 
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம்சின விறல்வேல் காளையொடு
அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே.

392.
வேய்வனப்பு இழந்த தோளும் வெயில்தெற
வாய்கவின் தொநந்த நுதலும் நோக்கிப்
பரியல் வாழி தோழி பரியின்
எல்லைஇல் இடும்பை தரூஉம்
நல்வரை நாடனொடு வந்த மாறே.

393.
துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய்
அறம்புலந்து பழிக்கும் அண்க ணாட்டி
எவ்வ நெஞ்சிற்கு ஏம மாக
வந்தன ளோநின் மகளே
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.

394.
மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த
அன்பில் அறானும் அருளிற்று மன்ற
வெஞ்சுரம் இறந்த அம்சில் ஓதிப்
பெருமட மான்பிணை அலைத்த
சிறுநுதல் குறுமகள் காட்டிய வம்மே.

395.
முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்விடு நெடுங்கொடி விடர்குகை முழங்கும்
இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம் மென்மெல 
ஏகுமதி வாழியோ குறுமகள் போதுகலந்து
கறங்கிசை அருவி வீழும்
பிறங்கிரும் சோலைநம் மலைகெழு நாட்டே.

396.
புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநிண்
கதுப்பயல் அணியும் அளவை பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை
கல்கெழு சிறப்பின் நம்மூர் 
எவ்விருந் தாகிப் புகுக நாமே.

397.
கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரன்அணி வாரா நின்றனள் என்பது
முன்னுற விரந்தநீர் உரைமின்
இன்நகை முறுவல்என் ஆயத்தோர்க்கே.

398.
புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி
மடமான் அறியாத் தடநீர் நிலைஇச் 
சுரநனி இனிய வாகுக என்று
நினைத்தொறும் கலிழும் என்னினும்
மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் ஊரே.

399.
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப் 
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே.

400.
மள்ளர் அன்ன மரவந் தழீஇ
மகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும்
அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில்
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய்கழல்
வெஞ்சின விரல்வேல் காலையொடு
இன்றுபுகு தருமென வந்தன்று வந்தன்று தூதே.