ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

முல்லைத்திணை


461.
வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக்
கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே
இனையல் வாழி தோழி எனையதூஉம்
நின்துறந்து அமைகுவர் அல்லர் 
வெற்றி வேந்தன் பாசறை யோரே.

462.
எதில பெய்ம்மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி
எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின் 
தகையெழில் வாட்டுநர் அல்லர்
முகையவிழ் புறவுஇன் நாடிறந் தோரே.

463.
புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின் 
நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய
வாராது அமையலோ இலரே நேரார்
நாடுபடு நன்கலம் தரீஇயர் 
நீடினர் தோழிநம் காத லோரே.

464.
கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென
இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர்நின்
நல்தோள் மருவரற்கு உலமரு வோரே.

465.
நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர்
கார்செய் கானம் பிற்படக் கநடைஇ
மயங்கு மலர் அகலம் நீஇனிது முயங்க
வருவர் வாழி தோழி
செருவெம் குருசில் தணிந்தனன் பகையே.

466.
வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு
அண்ணல் யானை அரசுவிடுத்து இனியே
எண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல்
காமர் சுடர்நுதல் விளங்கும்
தேமொழி அரிவை தெளிந்திசின் யானே.

467.
புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து 
இனையல் வாழியோ இகுளை வினைவயின்
சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது
நம்மினும் விரையும் என்ப
வெம்முரண் யானை விறல்போர் வேந்தே.

468.
வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக்
கார்தொடங் கின்றே காலை இனிநின்
நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக 
வருவர் இன்றுநம் காத லோரே.

469.
பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு 
அம்கண் இருவிசும்பு அதிர ஏறொடு
பெயல்தொடங் கின்றே வானம்
காண்குவம் வம்மோ பூங்க ணோயே.

470
இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்
அரும்பனி அளை இய அற்சிரக் காலை
உள்ளார் காதல ராயின் ஒள்ளிழை 
சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோநின் மாமைக் கவினே.