கலித்தொகை

கலித்தொகை

குறிஞ்சி


37    
கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன் 
வய மான் அடித் தேர்வான் போலத், தொடை மாண்ட 
கண்ணியன், வில்லன், வரும்; என்னை நோக்குபு, 
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற 
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்! 
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன் வயின், 
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக் 
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்; 
பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; 'இன்னதூஉம் 
காணான், கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் 
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர் 
நாண் இன்மை செய்தேன், நறு நுதால்! ஏனல் 
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல், 
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை, 
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத், 
'தையால்! நன்று' என்று அவன் ஊக்கக், கை நெகிழ்பு, 
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்; வாய்யாச் செத்து, 
ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான் மேல் 
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை 
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென, 
'ஒண் குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின் 
அங்கண் உடையன் அவன்! 

38    
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் 
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக, 
ஐ இரு தலையின் அரக்கர் கோமான் 
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை 
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல - 
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் 
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை, 
7 நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன் 
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்; 

ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், 
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை, 
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின் 
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக் காண்! 

இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால், 
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்; அவ் அணி 
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக் காண்; 

மறந்திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்தக்கால், 
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை, 
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தைக் காண்; 

என ஆங்கு, 
நின் உறு விழுமம் கூறக் கேட்டு 
வருமே, தோழி! நல் மலை நாடன் - 
வேங்கை விரிவு இடம் நோக்கி, 
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே. 

39    
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள், 
தாமரைக் கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் 
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால், 
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம், 
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி 
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே; 

அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் 
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத், 
'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும் 
கான் அகல் நாடன் மகன்; 

சிறுகுடியீரே! சிறுகுடியீரே! - 
வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா; 
கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர் 
அல்ல புரிந்து ஒழுகலான்; 

காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இரும் சிலம்பின் 
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் 
தாம் பிழையார்; கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும் 
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்; 

என ஆங்கு, 
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட 
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்; 

அவரும், தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக், கண் சேந்து 
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி, 
'இருவர் கண் குற்றமும் இல்லையால்' என்று, 
தெருமந்து சாய்த்தார் தலை; 

தெரி இழாய்! நீயும் நின் கேளும் புணர, 
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து 
குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள் 
கொண்டு நிலை பாடிக் காண்; 

நல்லாய் - 
நன்னாள் தலை வரும் எல்லை, நமர் மலைத் 
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்? 

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில் 
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ? 
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே, 
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ? 

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் 
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொல்லோ? 
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை 
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொல்லோ? 

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல், 
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ? 
என்னைமன், நின் கண்ணால் காண்பென்மன், யான்; 
நெய்தல் இதழ் உண் கண், நின் கண் ஆக, என் கண் மன; 

என ஆங்கு, 
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇத், 
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக, 
வேய் புரை மென் தோள் பசலையும், அம்பலும், 
மாய புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்கச், 
சேய் உயர் வெற்பனும் வந்தனன்; 
பூ எழில் உண் கணும் பொலிக மா இனியே! 

40    
அகவினம் பாடுவாம், தோழி! - அமர்க் கண் 
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல், 
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ, 
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின் 
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சிப், 
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி, 
அகவினம் பாடுவாம், நாம். 

ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள் 
தேன் நாறு கதுப்பினாய்! - யானும் ஒன்று ஏத்துகு - 
வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை; 

கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல், 
எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள் 
தொடுத்த தேன் சோரத், தயங்கும் - தன் உற்றார் 
இடுக்கண் தவிர்ப்பான் மலை; 

கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து, 
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே - 
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும் 
அல்லல் படுவான் மலை; 

புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத் 
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான் 
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்; 

விண் தோய் வரைப், பந்து எறிந்த அயா வீடத், 
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே - 
பெண்டிர் நலம் வௌவித் தண் சாரல் தாது உண்ணும் 
வண்டின் துறப்பான் மலை; 

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற 
கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத் 
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - 'உற்றாரின் 
நீங்கலம்' என்பான் மலை; 

என நாம், 
தன் மலை பாட, நயவந்து கேட்டு அருளி, 
மெய் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா 
மென் முலை ஆகம் கவின் பெறச் 
செம்மலை ஆகிய மலை கிழவோனே! 

41    
பாடுகம், வா - வாழி, தோழி! வயக் களிற்றுக் 
கோடு உலக்கை ஆக, நல் சேம்பின் இலை சுளகா 
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் 
பாடுகம், வா - வாழி, தோழ! நல் தோழி! - பாடுற்று; 

இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள், 
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்துப், 
பிடியொடு மேயும் புன்செய் யானை 
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன், 
நெடு வரை ஆசினிப் பணவை ஏறிக் 
கடு விசை கவணையில் கல் கை விடுதலின், 
இறு வரை வேங்கையின் ஒள் வீ சிதறி, 
ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத் , 
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி, 
நறு வடி மாவின் பை துணர் உழக்கிக், 
குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப், 
பலவின் பழத்துள் தங்கும், மலை கெழு வெற்பனைப் 
பாடுகம், வா - வாழி, தோழி! நல் தோழி! - பாடுற்று; 

இலங்கும் அருவித்து, இலங்கும் அருவித்தே; 
வானின் இலங்கும் அருவித்தே - தான் உற்ற 
சூள் பேணான் பொய்த்தான் மலை; 

பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ? 
'அஞ்சல் ஓம்பு' என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ? 
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் 
திங்களுள் தீத் தோன்றியற்று; 

இள மழை ஆடும்; இள மழை ஆடும்; 
இள மழை வைகலும் ஆடும் - என் முன்கை 
வளை நெகிழ வாராதோன் குன்று; 

வாராது அமைவானோ? வாராது அமைவானோ? 
வாராது அமைகுவான் அல்லன்; மலை நாடன், 
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழல் கயத்து 
நீருள் குவளை வெந்தற்று; 

மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்; 
மண்ணா மணி போலத் தோன்றும் - என் மேனியைத் 
துன்னான் துறந்தான் மலை; 

துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; 
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் - 
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில் 
சுடருள் இருள் தோன்றியற்று; 

என ஆங்கு, 
நன்று ஆகின்றால் -தோழி! நம் வள்ளையுள் 
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி, 
மென் தோள் கிழவனும் வந்தனன்; நுந்தையும் 
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து, 
மணம் நயந்தனன், அம் மலை கிழவோற்கே. 

42    
மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த 
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்திக் 
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் 
பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன் 
மறந்தான்; மறக்க; இனி, எல்லா! நமக்குச் 
சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம்; ஆயின், அவன் திறம் 
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம். 
வள்ளை அகவுவம் வா, இகுளை! நாம் 
வள்ளை அகவுவம், வா; 

காணிய வா - வாழி தோழி! - வரைத் தாழ்பு - 
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா 
நாண் இலி நாட்டு மலை; 

ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ - 
ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் 
அறம் புரி நெஞ்சத்தவன்? 
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் 
பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளாக் 
கொன்னாளன் நாட்டு மலை; 

கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? - தன் மலை 
நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத் 
தேர் ஈயும் வண் கையவன்; 

வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் 
மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழ 
எவ்வம் உறீஇயினான் குன்று; 

எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி - 
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என் 
நெஞ்சம் பிணிக்கொண்டவன்! 

என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்; 
தாழ் இரும் கூந்தல் என் தோழியைக் கை கவியாச், 
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர, 
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் 
ஆய் இழை மேனிப் பசப்பு. 

43    
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து 
ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும் 
சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால், 
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம், 
ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற 
மை படு சென்னிப் பய மலை நாடனைத் 
தையலாய்! பாடுவாம் நாம்; 

தகையவர் கைச் செறித்த தாள் போலக் காந்தள் 
முகையின் மேல் தும்பி இருக்கும் - பகை எனின், 
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் 
தோற்றலை நாணாதோன் குன்று; 

வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம், 
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும் 
வருடைமான் குழவிய வள மலை நாடனைத் 
தெருளத் தெரி இழாய்! - நீ ஒன்று பாடித்தை; 

நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக் 
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே - 
மாறு கொண்டு ஆற்றார் எனினும், பிறர் குற்றம் 
கூறுதல் தேற்றாதோன் குன்று; 

புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட 
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் 
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை - 
மணம் நாறு கதுப்பினாய்! - மறுத்து ஒன்று பாடித்தை; 

கடும் கண் உழுவை அடி போல வாழைக் 
கொடும் காய் குலை தொறூஉம் தூங்கும் - இடும்பையால் 
இன்மை உரைத்தார்க்கு, அது நிறைக்கல் ஆற்றாக்கால், 
தன் மெய் துறப்பான் மலை; 

என ஆங்கு, 
கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு 
வாடிய மென் தோளும் வீங்கின - 
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே! 

44    
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல் 
எதிர் எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து, 
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ, 
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரி வேங்கை, 
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப், 
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித் 
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப! 

தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை 
என்னையும் மறைத்தாள், என் தோழி - அது கேட்டு 
நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி; 

கூரும் நோய் சிறப்புவும், நீ செய்த அருள் இன்மை 
சேரியும் மறைத்தாள், என் தோழி -அது கேட்டாங்கு, 
'ஓரும் நீ நிலையலை' எனக் கூறல் தான் நாணி; 

நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை 
ஆயமும் மறைத்தாள், என் தோழி - அது கேட்டு 
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி; 

என ஆங்கு, 
இனையன தீமை நினைவனள் காத்தாங்கு, 
அனை அரு பண்பினான், நின் தீமை காத்தவள் 
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் 
மருந்து ஆகி செல்கம், பெரும! நாம் விரைந்தே! 

45    
விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறைக், 
கடி சுனைக் கவினிய காந்தள் அம் குலையினை, 
அரு மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்துப், 
பெரு மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைப் பெயல் 
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, 
நறு வீய நனம் சாரல் சிலம்பலின், கதுமெனச், 
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப! 

கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் 
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ - 
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி 
பல் இதழ் மலர் உண் கண் பசப்ப! நீ சிதைத்ததை? 

புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின் 
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ - 
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி 
தடையின திரண்ட தோள் தகை வாடச் சிதைத்ததை? 

சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த 
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ - 
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி 
காமரு நல் எழில் கவின் வாடச் சிதைத்ததை? 

என ஆங்கு, 
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி 
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான் 
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம் 
உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே. 

46    
வீ அகம் புலம்ப, வேட்டம் போகிய 
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி, 
வாய் இழி கடாத்த, வால் மருப்பு ஒருத்தலோடு 
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின், 
'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும் 
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும், 
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை 
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும் 
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட! 

ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன், 
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப - 
கூடுதல் வேட்கையான், குறி பார்த்துக் குரல் நொச்சிப் 
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக; 

அரும் செலவு ஆர் இடை அருளி வந்து, அளி பெறாஅன் 
வருந்தினென் என பல வாய்விடூஉம், தான் என்ப - 
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு தன் மாட்டுப் 
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக; 

கனை பெயல் நடுநாள் யான் கண் மாறக், குறி பெறாஅன், 
புனை இழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப - 
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன் 
அளி நசை ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக; 

என ஆங்கு, 
கலந்த நோய் கைம்மிகக் கண் படா என் வயின் 
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை - 
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச் 
சிலம்பு போல், கூறுவ கூறும் 
இலங்கு ஏர் எல் வளை, இவள் உடை நோயே. 

47    
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும், உலகம் 
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்; 
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல், 
நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன்; 
இல்லோர் புன்கண், ஈகையின் தணிக்க 
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்; 
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச் 
சொல்லும் சொல், கேட்டீ - சுடர் இழாய்! பல் மாணும்; 

'நின் இன்றி அமையலேன், யான்' என்னும் அவன் ஆயின், 
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின், 
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள கொல்லோ? - நறு நுதால்! 

'அறியாய் நீ, வருந்துவல் யான்' என்னும் அவன் ஆயின், 
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின், 
அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்? 

'வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின், 
ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின், 
சூழும்கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்; 
சூழும்கால், நறு நுதால்! நம் உளே சூழ்குவம். 

அவனை, 
நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது; 
'பேணினர்' எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன் 
'வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக் 
கூறுவென் போலக் காட்டி 
மற்று அவன் மேஎவழி மேவாய் நெஞ்சே! 

48    
ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போலத், 
தே மூசு, நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த 
வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகம் 
படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய 
கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும் 
பெரு களிற்று இனத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின் 
இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட! 

வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால், 
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ - 
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர், நின் சாரல் 
ஊழுறு கோடல் போல், எல் வளை உகுபவால்? 

இனை இருள் இது என ஏங்கி, நின் வரல் நசைஇ, 
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ - 
'இனையள்' என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர், நின் சுனைக் 
கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்? 

பல் நாளும் படர் அடப், பசலையால் உணப்பட்டாள் 
பொன் உரை மணி அன்ன, மாமைக் கண் பழி உண்டோ - 
இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள், நின் சோலை - 
மின் உகு தளிர் அன்ன, மெலிவு வந்து உரைப்பதால்? 

என ஆங்கு, 
பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு - என நீவிப் 
பூங் கண் படுதலும் அஞ்சுவல்; தாங்கிய 
அரும் துயர் அவலம் தூக்கின், 
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே! 

49    
கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு 
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை, 
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின், 
கனவில் கண்டு, கதுமென வெரீஇப் 
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை 
'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கிப் 
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம் 
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது, 
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட! 

போது எழில் மலர் உண் கண் இவள் மாட்டு நீ இன்ன 
காதலை என்பதோ இனிது - மற்று இன்னாதே, 
மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய், 
இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை; 

இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன 
அன்பினை என்பதோ இனிது - மற்று இன்னாதே, 
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து, 
அணங்கு உடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை; 

இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன 
அருளினை என்பதோ இனிது - மற்று இன்னாதே, 
ஒளிறு வேல் வலன் ஏந்தி, 'ஒருவன் யான்' என்னாது, 
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை; 

அதனால், 
இரவின் வாரல்; ஐய! விரவு வீ 
அகல் அறை வரிக்கும் சாரல், 
பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே. 

50    
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி, வரு வைகல், 
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி, 
தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர் 
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும் 
இருள் தூங்கு சோலை, இலங்கு நீர் வெற்ப! 

அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த 
உரவு வில் மேல் அசைத்த கையை, ஓராங்கு 
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கிப், 
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல் 
கடிதல் மறப்பித்தாய் ஆயின், இனி நீ 
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே 
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி 
அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி 
நல்கூர்ந்தார் செல்வ மகள். 

நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும் 
தளியின் சிறந்தனை - வந்த புலவர்க்கு 
அளியொடு கைதூவலை; 

அதனால், 
கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும் 
கொடுமை இலை ஆவது அறிந்தும், அடுப்பல் - 
வழை வளர் சாரல் வருடை நல் மான் 
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி, 
உழையின் பிரியின், பிரியும், 
இழை அணி அல்குல் என் தோழியது கவினே!