கலித்தொகை

கலித்தொகை

பாலைக்கலி


2
தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக, 
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், 
மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக் 
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும் 
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின் 
சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில் 
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர் 
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை - 
மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய, 
இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐய! 

தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என 
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - 
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள், 
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை; 

இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக் 
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - 
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள் 
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை; 

இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக் 
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - 
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் 
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை; 

என இவள், 
புன்கண் கொண்டு இனையவும், பொருள் வயின் அகறல் 
அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்றுக் 
காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல் 
யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின் 
தொல்கவின் தொலைதல் அஞ்சி, என் 
சொல்வரைத் தங்கினர், காதலோரே. 

3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், 
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் - 
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்கப், 
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் 
விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள் இனி; 

'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல 
இடை கொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய், ஆயினை; 
கடைஇய ஆற்று இடை, நீர் நீத்த வறும் சுனை, 
அடையொடு வாடிய அணி மலர் - தகைப்பன. 

'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, 
ஒல்லாங்கு யாம் இரப்பவும், உணர்ந்து ஈயாய் ஆயினை; 
செல்லு நீள் ஆற்று இடைச், சேர்ந்து எழுந்த மரம் வாடப், 
புல்லு விட்டு இறைஞ்சிய பூங் கொடி - தகைப்பன. 

'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப் 
பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய் ஆயினை; 
துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை, அம்மரத்து 
அணி செல, வாடிய அம் தளிர் - தகைப்பன. 

என ஆங்கு, 
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை; 
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி, 
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும் 
கானம் - தகைப்ப செலவு. 

4
வலி முன்பின், வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் - 
சுற்றுஅமை வில்லர், சுரி வளர் பித்தையர், 
அற்றம் பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர் தாம் 
கொள்ளும் பொருள் இலர் ஆயினும், வம்பலர், 
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், 
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை, 
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின், 
உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி; 

'காழ் விரி கவை ஆரம் மீவரும் இளமுலை 
போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் 
தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர் 
சூழ்வதை எவன் கொல்? அறியேன்!' என்னும்; 

'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் 
கள்ளினும் மகிழ் செயும் என உரைத்தும் அமையார், என் 
ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் 
உள்ளுவது எவன் கொல்? அறியேன்!' என்னும்; 

'நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் 
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார், என் 
ஒண் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர் 
எண்ணுவது எவன் கொல்? அறியேன்!' என்னும்; 

என ஆங்கு, 
'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து!' என, என் தோழி 
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒருநாள், நீர், 
பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ? 
ஒழிக இனிப் பெரும! நின் பொருள் பிணிச் செலவே. 

5
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை 
மாஅல் யானையொடு மறவர் மயங்கித் 
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம், 
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச் 
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின், 
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் 
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக், 
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்? 
நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே; 

கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்,
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ? 
ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல், 
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு, அமைவாளோ? 
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள் 
நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? 

என ஆங்கு, 
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு, 
எந்நாளோ, நெடுந்தகாய்! நீ செல்வது, 
அந்நாள் கொண்டு இறக்கும், இவள் அரும்பெறல் உயிரே. 

6
மரையா மரல் கவர, மாரி வறப்ப - 
வரை ஓங்கு அரும் சுரத்து ஆர் இடைச் செல்வோர், 
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம் 
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத் - 
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அரும் துயரம் 
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால், 
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்? 
நின் நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும், 
அன்பு அறச் சூழாதே, ஆற்று இடை நும்மொடு 
துன்பம் துணை ஆக நாடின், அது அல்லது 
இன்பமும் உண்டோ, எமக்கு? 

7
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு 
வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் 
கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று 
உசாவுகோ - ஐய! சிறிது; 

நீயே, செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து, யாழ நின் 
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே; 
இவட்கே, செய்வுறு மண்டிலம் மையாப்பது போல், 
மை இல் வாள் முகம் பசப்பு ஊருமே; 

நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டிப் 
புனை மாண் மரீஇய அம்பு தெரிதீயே; 
இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல், 
இனை நோக்கு உண் கண் நீர் நில்லாவே; 

நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின் செலீஇய 
வலம் படு திகிரி வாய் நீவுதியே; 
இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் 
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே; 

என நின், 
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின், 
தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள் 
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ - 
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே? 

8
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக், 
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு 
கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினம் தெறுதலின், 
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய, எழில் வேழம் 
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்ற, நிலம் சேர, 
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம், 
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு, ஒரு பொருள் 
சொல்லுவது உடையேன், கேள்மின், மற்று ஐஇய! 

வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் 
ஏழும், தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் 
யாழினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? 

மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது, 
பிரியும்கால் பிறர் எள்ளப், பீடு இன்றி புறம் மாறும் 
திருவினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? 

புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை 
வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும் 
அரைசினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? 

என ஆங்கு, 
நச்சல் கூடாது பெரும இச்செலவு 
ஒழிதல் வேண்டுவல், சூழின் பழி இன்று; 
மன்னவன் புறந்தர, வரு விருந்து ஓம்பித், 
தன் நகர் விழையக் கூடின், 
இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே. 

9
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், 
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், 
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக் 
குறிப்பு ஏவல் செயல் மாலைக், கொளை நடை அந்தணீர்!- 
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை 
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், 
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்; 
அன்னார் இருவரை காணிரோ?- பெரும! 

காணேம் அல்லேம், கண்டனம், கடத்து இடை; 
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய 
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்; 

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, 
மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்? 
நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்? 
தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, 
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்? 
சூழும்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 

என ஆங்கு, 
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; 
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; 
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே. 

10
வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்ச், 
சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி, 
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல், 
வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின் 
அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெ·கிக், 
கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல் 
உலகு போல், உலறிய உயர் மர வெஞ்சுரம் - 

இடை கொண்டு பொருள் வயின் இறத்தி நீ எனக் கேட்பின், 
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள் மன்னோ! 
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ 
புடை பெயர்வாய் ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்? 

முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின், 
பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள் மன்னோ! 
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆகத் 
துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்? 

பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின், 
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள் மன்னோ! 
இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின் 
அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்? 

என ஆங்கு, 
'வினை வெ·கி நீ செலின், விடும் இவள் உயிர்' எனப் 
புனை இழாய்! நின் நிலை யான் கூறப், பையென, 
நிலவு வேல் நெடுந்தகை, நீள் இடைச் 
செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே! 

11
'அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், 
பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும், 
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' எனப் 
பிரிவு எண்ணிப் பொருள் வயின் சென்ற நம் காதலர் 
வருவர்கொல், வயங்கு இழாஅய்! வலிப்பல், யான்; கேஎள் இனி: 

'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால், 
கடியவே, கனம் குழாஅய்! காடு' -என்றார்; அக்காட்டுள், 
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின் நீரைப் 
பிடி ஊட்டிப், பின் உண்ணும் களிறு, எனவும், உரைத்தனரே; 

'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால், 
துன்புறூஉம் தகையவே காடு' -என்றார்; அக்காட்டுள், 
அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை 
மென் சிறகரால் ஆற்றும் புறவு, எனவும், உரைத்தனரே; 

'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான், 
துன்னரூஉம் தகையவே காடு' - என்றார்; அக்காட்டுள், 
இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத் 
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை, எனவும், உரைத்தனரே. 

என ஆங்கு, 
இனை நலம் உடைய கானம் சென்றோர் 
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனை வயின் 
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; 
நல்எழில் உண் கண்ணும் ஆடுமால், இடனே. 

12
இடு முள் நெடு வேலி போலக், கொலைவர் 
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த 
கடு நவை ஆர் ஆற்று, அறு சுனை முற்றி, 
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை 
கடும் தாம் பதிபு, ஆங்கு கை தெறப்பட்டு, 
வெறி நிரை வேறு ஆகச் சார்ச் சாரல் ஓடி, 
நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் - 
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் 
நறு நுதல் நீத்துப் பொருள் வயின் செல்வோய்! 

உரன் உடை உள்ளத்தை, செய் பொருள் முற்றிய 
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்! 
இளமையும் காமமும் நின் பாணி நில்லா - 
இடை முலைக் கோதை குழைய முயங்கும் 
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை - 

கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை; 
போற்றாய் - பெரும! நீ; காமம் புகர்பட 
வேற்றுமைக் கொண்டு, பொருள் வயின் போகுவாய், 
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு 
மாற்றுமைக் கொண்ட வழி. 

13
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல, 
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகுவ காணாவாய்ப், 
பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான், 
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட, 
மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, 
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை, 
ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது, 
சேறு சுவைத்துத், தம் செல் உயிர் தாங்கும் 
புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ்சுரம் - 

எல் வளை! எம்மொடு நீ வரின், யாழ நின் 
மெல் இயல் மேவந்த சீறடித், தாமரை, 
அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போலக் 
கல் உறின், அவ்வடி கறுக்குந அல்லவோ? 

நலம்பெறு சுடர் நுதால்! எம்மொடு நீ வரின், 
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள், 
துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை 
விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ? 

கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின், 
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி கவின் வாட, 
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த 
வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ? 

என ஆங்கு, 
அனையவை காதலர் கூறலின், 'வினை வயின் 
பிரிகுவர்' எனப் பெரிது அழியாது, திரிபு உறீஇக், 
கடுங்குரை அருமைய காடு எனின், அல்லது, 
கொடுங் குழாய்! துறக்குநர் அல்லர் - 
நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே. 

14
அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள், 
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண், 
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், 
மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இரும் கூந்தல், 
அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல், 
சில நிரை வால் வளைச் செய்யாயோ! எனப், 
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி, 
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது 
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே; 

'பொருள் அல்லால் பொருளும் உண்டோ?' என, யாழ நின் 
மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ? 

'காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு?' என, 
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ? 

செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள் 
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ? 

அதனால், 
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை; நம்முள் நாம் 
கவவுக் கைவிடப் பெறும் பொருள் திறத்து 
அவவுக் கைவிடுதல்; அது மனும் பொருளே. 

15
அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில் 
புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் - 
இணைப் படைத் தானை அரசோடு உறினும் - 
கணைத் தொடை நாணும், கடும் துடி ஆர்ப்பின், 
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை 
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி, 
உருத்த கடும் சினத்து, ஓடா மறவர், 
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு 
அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் - 

புரிபு நீ புறம் மாறிப், போக்கு எண்ணிப், புதிது ஈண்டிப் 
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ - 
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம் 
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்? 

பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ 
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ - 
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம், 
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்? 

பின்னிய தொடர் நீவிப், பிறர் நாட்டுப் படர்ந்து, நீ 
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ - 
புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத், 
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்? 

என ஆங்கு, 
அனையவை போற்ற, நினைஇயன நாடிக் காண்; 
வளமையோ வைகலும் செயல் ஆகும்; மற்று இவள் 
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த 
இளமையும் தருவதோ, இறந்த பின்னே?