கலித்தொகை

கலித்தொகை

மருதக்கலி


66    
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட    
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,    
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்    
ஆங்கு அவை விருந்து ஆற்றப், பகல் அல்கிக், கங்குலான், 
வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்    
தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லைப் 
பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய    
பூம் பொய்கை மறந்து உள்ளாப் புனல் அணி நல் ஊர! 

அணை மென் தோள் யாம் வாட, அமர் துணை புணர்ந்து நீ,    
'மண மனையாய்!' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ -    
பொதுக் கொண்ட கவ்வையுள் பூ அணிப் பொலிந்த நின்    
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை;    

கனலும் நோய்த் தலையும், 'நீ கனம் குழை அவரொடு 
புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ - 
தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்    
ஈர் அணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை;    

தணந்ததன் தலையும், 'நீ தளர் இயல் அவரொடு    
துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ - 
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின் 
களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை;    

என ஆங்கு,    
அளி பெற்றேம், எம்மை நீ அருளினை; விளியாது    
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்    
'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடும் திண் தேர்,    
பூட்டு விடாஅ நிறுத்து.    

67    
கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,    
சீர் முற்றிப், புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம் 
தார் முற்றியது போலத், தகை பூத்த வையை தன் 
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார் 
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் -    

நலம் தகை, எழில் உண் கண் நல்லார் தம் கோதையால்    
அலைத்த, புண், வடுக் காட்டி, அன்பு இன்றி வரின் - எல்லா! - 
புலப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன் காணின், 
கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;    

கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கப் 
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் - எல்லா! - 
ஊடுவேன் என்பேன்மன்? அந்நிலையே அவன் காணின் 
கூடுவேன் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;    

இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின், 
நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின்- எல்லா! -    
துனிப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன் காணின், 
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;    

என ஆங்கு,    
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம் 
துறைபோதல் ஒல்லுமோ - தூ ஆகாது ஆங்கே    
அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?    

68    
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு    
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்    
செது மொழி சீத்த செவி செறு ஆக,    
முது மொழி நீராப், புலன் நா உழவர்    
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர!    

'ஊரன்மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன் வாளாது,    
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகிக்,    
களையா நின் குறி வந்து, எம் கதவம் சேர்ந்து அசைத்த கை 
வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ -    
'கேள் அலன், நமக்கு அவன், குறுகன்மின்' என, மற்று எம்    
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?    

'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர் வயின்    
மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ - 
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,    
வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?    

சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,    
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ -    
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்    
'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்?    

என ஆங்கு;    
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் -    
மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட, 
'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்குக் 
கனவினான் எய்திய செல்வத்து அனையதே -    
ஐய! எமக்கு நின் மார்பு.    

69    
போது அவிழ் பனிப் பொய்கைப், புதுவது தளைவிட்ட 
தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு -    
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய 
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக,    
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு - 
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!    

தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத், தெருவின் கண் தாக்கி, நின்    
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்; 
துணிந்தது பிறிது ஆகத், 'துணிவு இலள் இவள்' எனப்,    
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப், பயன் இல மொழிவாயோ?    

பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்    
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்; 
நெஞ்சத்த பிற ஆக, 'நிறை இலள் இவள்' என,    
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்து ஈவாயோ?    

இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள் 
புணர்வினில் புகன்று, ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய்; 
தருக்கிய பிற ஆகத், 'தன் இலள் இவள்' எனச்    
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்து ஈவாயோ?    

என ஆங்கு,    
தருக்கேம் பெரும! நின் நல்கல் விருப்புற்றுத்    
தாழ்ந்தாய் போல் வந்து, தகவு இல செய்யாது,    
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் - 
வீழ்ந்தார் விருப்பு அற்றக் கால்.    

70    
மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்    
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தெனக்    
கதுமெனக், காணாது, கலங்கி, அம் மடப் பெடை 
மதி நிழல் நீர் உள் கண்டு, அது என உவந்து ஓடித், 
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணிப்,    
பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊ! கேள்;    

நலம் நீப்பத் துறந்து, எம்மை நல்காய் நீ விடுதலின்,    
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;    
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,    
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே! 

அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண் கண், எம் 
புதல்வனை மெய் தீண்டப், பொருந்துதல் இயைபவால்; 
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின் 
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே! 

வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே 
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்; 
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்    
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே!    

என ஆங்கு,    
மெல்லியான் செவி முதல், மேல்வந்தான் காலை போல்,    
எல்லாம் துயிலோ எடுப்புக; நின் பெண்டிர்,    
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்ப்    
பாணன் புகுதராக் கால்!    

71    
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்    
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, 
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் - 
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, 
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு, 
நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போலப் -    
பனி ஒரு திறம் வாரப், பாசடைத் தாமரைத்    
தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!    

'ஒரு நீ, பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்துத்,    
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான் கொல் -    
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் 
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?    

'மடுத்து அவன் புகு வழி மறையேன்' என்று, யாழொடும்    
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல் -    
அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின் கண் 
எடுத்துக் கொள்வது போலும் தொடி வடு காணிய?    

'தணந்தனை' எனக் கேட்டுத், தவறு ஓராது, எமக்கு நின்    
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான் கொல் - 
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி, 
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய? 

என்று நின்,    
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்    
யார்? - நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! - 
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு 
ஆராத் துவலை அளித்தது போலும், நீ    
ஓர் யாட்டு ஒரு கால் வரவு.    

72    
'இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,    
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇச், 
சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,    
ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போலப் , 
புது நீர புதல் ஒற்றப், புணர் திரைப் பிதிர் மல்க,    
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணிக்,    
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்    
வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!    

கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழப்,    
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ - 
'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,    
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை?    

நாடி நின் தூது ஆடித், துறைச் செல்லாள், ஊரவர்    
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ - 
கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில்,    
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை?    

வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் 
அறிவு உடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ - 
களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின் மேல் 
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை?    

என ஆங்கு,    
செறிவுற்றேம்; எம்மை நீ செறிய, அறிவுற்று,    
அழிந்து உகு நெஞ்சத்தேம், அல்லல் உழப்பக்    
கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே,    
அழிந்து நின் பேணிக் கொளலின் இழிந்ததோ -    
இந் நோய் உழத்தல் எமக்கு?    

73    
அகல் துறை அணிபெறப், புதலொடு தாழ்ந்த    
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,    
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்    
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல,    
வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!    

'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல் வழித்,    
'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் -    
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,    
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?    

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,    
'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் -    
அலமரல் உண் கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் 
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?    

என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல் வழி,    
முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் - 
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ளக், 
கரை இடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்? 

என ஆங்கு,    
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்    
தண்டாப் பரத்தை தலைக் கொள்ள, நாளும்    
புலத் தகைப் பெண்டிரைத் தேற்ற; மற்று யாம் எனின், 
தோலாமோ நின் பொய் மருண்டு?    

74    
பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த 
நெய்தல் தாது அமர்ந்து ஆடிப், பாசடைச் சேப்பினுள் 
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,    
மை தபு, கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம், 
கொய்குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! 

'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி, 
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்;    
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை    
கண்டுநின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்.    

முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்துப்,    
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;    

என ஆங்கு;    
'கிண்கிணி மணித் தாரொடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப் 
பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என, 
ஊரவர் உடன் நகத் திரிதரும்    
தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே!    

75    
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய    
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,    
சீர் ஆர் சே இழை ஒலிப்ப, ஓடும்    
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,    
ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி    
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,    
அமர்க்கண் மகளிர் அலப்பிய அந் நோய் ,    
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும், 
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்    
புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்,    
வதுவை நாளால் வைகலும், அ·து யான்    
நோவேன், தோழி! நோவாய் நீ, என    
என் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென; 

'எல்லினை வருதி, எவன் குறித்தனை?' எனச்    
சொல்லாதிருப்பேன் ஆயின், ஒல்லென,    
விரி உளைக் கலி மான் தேரொடு வந்த    
விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்;    

'வாடிய பூவொடு வாரல், எம்மனை' என    
ஊடி இருப்பேன் ஆயின், நீடாது,    
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்    
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;    

'பகல் ஆண்டு அல்கினை, பரத்த' என்று யான்    
இகலியிருப்பேன் ஆயின், தான் தன்    
முதல்வன் பெரும் பெயர் முறை உளிப் பெற்ற    
புதல்வன் புல்லிப் பொய் துயில் துஞ்சும்;    

ஆங்க , 
விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், 
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,    
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,    
அவ் அவ் இடத்தான் அவை அவை காணப் -    
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்    
மாய மகிழ்நன் பரத்தைமை    
நோவென், தோழி! கடன் நமக்கு எனவே.