குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


கடவுள் வாழ்த்து

தாமரை புரையுங் காமர் சேவடிப் 
பவழத் தன்ன மேனித் திகழொளிக் 
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் 
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் 
சேவலங் கொடியோன் காப்ப 
ஏம வைகல் எய்தின்றால் உலகே. 
-பாரதம் பாடிய பெருந்தேவனார்.

1. குறிஞ்சி - தோழி கூற்று 

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த 
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் 
கழல்தொடிச் சேஎய் குன்றம் 
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 
-திப்புத் தோளார்.

2. குறிஞ்சி - தலைவன் கூற்று 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 
காமம் செப்பாது கண்டது மொழிமோ 
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் 
செறியெயிற் றரிவை கூந்தலின் 
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 
-இறையனார்.

3. குறிஞ்சி - தலைவி கூற்று 

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 
நீரினும் ஆரள வின்றே சாரல் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 
-தேவகுலத்தார்.

4. நெய்தல் - தலைமகள் கூற்று 

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே 
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி 
அமைதற் கமைந்தநங் காதலர் 
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. 
-காமஞ்சேர் குளத்தார்.

5. நெய்தல் - தலைவி கூற்று 

அதுகொல் தோழி காம நோயே 
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை 
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர் 
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் 
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. 
-நரிவெரூ உத்தலையார்.

6. நெய்தல் - தலைவி கூற்று 

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந் 
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று 
நனந்தலை உலகமும் துஞ்சும் 
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 
-பதுமனார்.

7. பாலை - கண்டோர் கூற்று 

வில்லோன் காலன கழலே தொடியோள் 
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் 
யார்கொல் அளியர் தாமே ஆரியர் 
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி 
வாகை வெண்ணெற் றொலிக்கும் 
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. 
-பெரும்பதுமனார்.

8. மருதம் - காதற் பரத்தை கூற்று 

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 
பழன வாளை கதூஉ மூரன் 
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் 
கையும் காலும் தூக்கத் தூக்கும் 
ஆடிப் பாவை போல 
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 
-ஆலங்குடி வங்கனார்.

9. மருதம் - தோழி கூற்று 

யாயா கியளே மாஅ யோளே 
மடைமாண் செப்பில் தமிய வைகிய 
பெய்யாப் பூவின் மெய்சா யினளே 
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் 
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் 
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் 
தண்ணந் துறைவன் கொடுமை 
நம்மு னாணிக் கரப்பா டும்மே. 
-கயமனார்.

10. பாலை - தோழி கூற்று 

யாயா கியளே விழவுமுத லாட்டி 
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் 
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் 
காஞ்சி யூரன் கொடுமை 
கரந்தன ளாகலின் நாணிய வருமே. 
-ஓரம்போகியார்.

11. பாலை - தலைவி கூற்று 

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும் 
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி 
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே 
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது 
குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
வல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 
மொழிபெயர் தேஎத்த ராயினும் 
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. 
-மாமூலனார்.

12. பாலை - தலைவி கூற்று 

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய 
உலைக்கல் அன்ன பாறை ஏறிக் 
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் 
கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே 
அதுமற் றவலங் கொள்ளாது 
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. 
-ஓதலாந்தையார்.

13. குறிஞ்சி - தலைவி கூற்று 

மாசறக் கழீஇய யானை போலப் 
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற் 
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன் 
நோய்தந் தனனே தோழி 
பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. 
-கபிலர்.

14. குறிஞ்சி - தலைவன் கூற்று 

அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த 
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப் 
பெறுகதில் அம்ம யானே பெற்றாங் 
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில் 
நல்லோள் கணவன் இவனெனப் 
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே. 
-தொல்கபிலர்.

15. பாலை - செவிலி கூற்று 

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு 
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய 
நாலூர்க் கோசர் நன்மொழி போல 
வாயா கின்றே தோழி ஆய்கழற் 
சேயிலை வெள்வேல் விடலையொடு 
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. 
-ஔவையார்.

16. பாலை - தோழி கூற்று 

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார் 
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச் 
செங்காற் பல்லி தன்றுணை பயிரும் 
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே. 
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.

17. குறிஞ்சி - தலைவன் கூற்று 

மாவென மடலும் ஊர்ப பூவெனக் 
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப 
மறுகி னார்க்கவும் படுப 
பிறிது மாகுப காமங்காழ் கொளினே. 
-பேரெயின் முறுவலார்.

18. குறிஞ்சி - தோழி கூற்று 

வேரல் வேலி வேர்க்கோட் பலவின் 
சாரல் நாட செவ்வியை ஆகுமதி 
யாரஃ தறிந்திசி னோரே சாரல் 
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் 
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. 
-கபிலர்.

19. மருதம் - தலைவன் கூற்று 

எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர் 
பூவில் வறுந்தலை போலப் புல்லென் 
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத் 
தெல்லுறு மௌவல் நாறும் 
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. 
-பரணர்.

20. பாலை - தலைவி கூற்று 

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து 
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் 
உரவோர் உரவோர் ஆக 
மடவம் ஆக மடந்தை நாமே. 
-கோப்பெருஞ்சோழன்.

21. முல்லை - தலைவி கூற்று 

வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு 
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் 
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை 
கானங் காரெனக் கூறினும் 
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. 
-ஓதலாந்தையார்.

22. பாலை - தோழி கூற்று 

நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய 
யாரோ பிரிகிற் பவரே சாரற் 
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து 
வேனில் அஞ்சினை கமழும் 
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே. 
-சேரமானெந்தை.

23. குறிஞ்சி - தோழி கூற்று 

அகவன் மகளே அகவன் மகளே 
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் 
அகவன் மகளே பாடுக பாட்டே 
இன்னும் பாடுக பாட்டேஅவர் 
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. 
-ஔவையார்.

24. முல்லை - தலைவி கூற்று 

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர் 
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ 
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத் 
தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக் 
குழையக் கொடியோர் நாவே 
காதலர் அகலக் கல்லென் றவ்வே. 
-பரணர்.

25. குறிஞ்சி - தலைவி கூற்று 

யாரும் இல்லைத் தானே கள்வன் 
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ 
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால 
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் 
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 
-கபிலர்.