குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


126. நெய்தல் - தலைவி கூற்று 

இலங்குவளை நெகிழச் சாஅ யானே 
உளெனே வாழி தோழி சாரல் 
தழையணி அல்குல் மகளி ருள்ளும் 
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற் 
பறைவலந் தப்பிய பைதல் நாரை 
திரைதோய் வாங்குசினை யிருக்கும் 
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே. 
-அம்மூவனார்.

127. மருதம் - தோழி கூற்று 

குருகுகொளக் குளித்த கெண்டை அயலது 
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம் 
கழனியம் படப்பைக் காஞ்சி யூர 
ஒருநின் பாணன் பொய்ய னாக 
உள்ள பாணர் எல்லாம் 
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே. 
-ஓரம் போகியார்.

128. நெய்தல் - தலைவன் கூற்று 

குணகடல் திரையது பறைதபு நாரை 
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை 
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச் 
சேயல் அரியோட் படர்தி 
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. 
-பரணர்.

129. குறிஞ்சி - தலைவன் கூற்று 

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப 
புலவர் தோழ கேளா யத்தை 
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் 
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் 
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் 
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே. 
-கோப்பெருஞ்சோழன்.

130. பாலை - தோழி கூற்று 

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் 
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் 
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் 
குடிமுறை குடிமுறை தேரிற் 
கெடுநரும் உளரோநம் காதலோரே. 
-வெள்ளி வீதியார்.

126. முல்லை - தலைவி கூற்று 

இளமை பாரார் வளநசைஇச் சென்றோர் 
இவணும் வாரார் எவண ரோவெனப் 
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத் 
தொகுமுகை இலங்கெயி றாக 
நகுமே தோழி நறுந்தண் காரே. 
-ஒக்கூர் மாசாத்தியார்.

131. பாலை - தலைவன் கூற்று 

ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள் 
பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே 
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே 
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து 
ஓரேர் உழவன் போலப் 
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே. 
-ஒரேருழவனார்.

132. குறிஞ்சி - தலைவன் கூற்று 

கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள் 
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே 
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க் 
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி 
தாய்காண் விருப்பி னன்ன 
சாஅய்நோக் கினளே மாஅ யோளே. 
-சிறைக்குடியாந்தையார்.

133. குறிஞ்சி - தலைவி கூற்று 

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை 
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி 
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென் 
உரஞ் செத்தும் உளெனே தோழியென் 
நலம்புதி துண்ட புலம்பி னானே. 
-உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

134. குறிஞ்சி - தலைவி கூற்று 

அம்ம வாழி தோழி நம்மொடு 
பிரிவின் றாயின் நன்றுமற் றில்ல 
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் 
பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக் 
கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி 
நிலங்கொள் பாம்பின் இழிதரும் 
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.
-கோவேங்கைப் பெருங்கதவனார்.

135. பாலை - தோழி கூற்று 

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் 
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென 
நமக்குரைத் தோருந் தாமே 
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.
-பாலைபாடிய பெருங் கடுங்கோ.

136. குறிஞ்சி - தலைவன் கூற்று 

காமங் காமம் என்ப காமம் 
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் 
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை 
குளகுமென் றாள்மதம் போலப் 
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே. 
-மிளைப்பெருங் கந்தனார்.

137. பாலை - தலைவன் கூற்று 

மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்ப 
நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந் 
திரவலர் வாரா வைகல் 
பலவா குகயான் செலவுறு தகவே. 
-பாலை பாடிய பெருங் கடுங்கோ.

138. மருதம் - தோழி கூற்று 

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே 
எம்மி லயல தேழி லும்பர் 
மயிலடி யிலைய மாக்குர னொச்சி 
அணிமிகு மென்கொம் பூழ்த்த 
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே. 
-கொல்லன் அழிசி.

139. மருதம் - தோழி கூற்று 

மனையுறை கோழிக் குறுங்காற் பேடை 
வேலி வெருகின மாலை யுற்றெனப் 
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய 
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் 
கின்னா திசைக்கும் அம்பலொடு 
வாரல் வாழிய ரையவெந் தெருவே. 
-ஒக்கூர் மாசாத்தியார்.

140. பாலை - தலைவி கூற்று 

வேதின வெரிநின் ஓதிமுது போத்து 
ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும் 
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து 
ஈங்கியான் தாங்கிய எவ்வம் 
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

141. குறிஞ்சி - தலைவி கூற்று 

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் 
செல்கென் றோளே அன்னை எனநீ 
சொல்லின் எவனோ தோழி கொல்லை 
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த 
குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை 
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் 
ஆரிரு ணடுநாள் வருதி 
சாரல் நாட வாரலோ எனவே.
-மதுரைப் பெருங்கொல்லனார்.

142. குறிஞ்சி - தலைவன் கூற்று 

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் 
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை 
தானறிந் தனளோ இலளோ பானாட் 
பள்ளி யானையி னுயிர்த்தென் 
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே. 
-கபிலர்.

143. குறிஞ்சி - தோழி கூற்று 

அழிய லாயிழை அன்பு பெரிதுடையன் 
பழியும் அஞ்சும் பயமலை நாடன் 
நில்லா மையே நிலையிற் றாகலின் 
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் 
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் 
தங்குதற் குரிய தன்றுநின் 
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே. 
-மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

144. பாலை - செவிலித்தாய் கூற்று 

கழிய காவி குற்றும் கடல 
வெண்டலைப் புணரி யாடியும் நன்றே 
பிரிவி லாய முரியதொன் றயர 
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப் 
பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ 
சென்மழை தவழும் சென்னி 
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.
-மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்.

145. நெய்தல் - தலைவி கூற்று 

உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி 
கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி 
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் 
துஞ்சா துறைநரொ டுசாவாத் 
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. 
-கொல்லனழிசியார்.

146. குறிஞ்சி - தோழி கூற்று 

அம்ம வாழி தோழி நம்மூர்ப் 
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ 
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் 
நன்றுநன் றென்னு மாக்களோ 
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. 
-வெள்ளி வீதியார்.

147. பாலை - தலைவன் கூற்று 

வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன 
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை 
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல 
இன்றுயில் எடுப்புதி கனவே 
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.
-கோப்பெருஞ் சோழன்.

148. முல்லை - தலைவி கூற்று 

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த 
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக் 
காசி னன்ன போதீன் கொன்றை 
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும் 
காரன் றென்றி யாயிற் 
கனவோ மற்றிது வினவுவல் யானே. 
-இளங் கீரந்தையார்.

149. பாலை - தலைவி கூற்று 

அளிதோ தானே நாணே நம்மொடு 
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே 
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை 
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத் 
தாங்கு மளவைத் தாங்கிக் 
காம நெரிதரக் கைந்நில் லாவே. 
-வெள்ளி வீதியார்.

150. குறிஞ்சி - தலைவி கூற்று 

சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி 
வான மீனின் வயின்வயின் இமைக்கும் 
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம் 
உள்ளின் உண்ணோய் மல்கும் 
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய் 
-மாடலூர் கிழார்.