குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


26. குறிஞ்சி - தோழி கூற்று 

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை 
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை 
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் 
தகாஅன் போலத் தான்றீது மொழியினும் 
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே 
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய் 
வரையாடு வன்பறழ்த் தந்தைக் 
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே. 
-கொல்லனழிசி.

27. பாலை - தலைவி கூற்று 

கன்று முண்ணாது கலத்தினும் படாது 
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங் 
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது 
பசலை உணீஇயர் வேண்டும் 
திதலை அல்குலென் மாமைக் கவினே. 
-வெள்ளிவீதியார்.

28. பாலை - தலைவி கூற்று 

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல் 
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு 
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல் 
அலமரல் அசைவளி அலைப்பவென் 
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. 
-ஔவையார்.

29. குறிஞ்சி - தலைன் கூற்று 

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப் 
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல 
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி 
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும் 
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு 
மகவுடை மந்தி போல 
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. 
-ஔவையார்.

30. பாலை - தலைவி கூற்று 

கேட்டிசின் வாழி தோழி அல்கற் 
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய 
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து 
அமளி தைவந் தனனே குவளை 
வண்டுபடு மலரிற் சாஅய்த் 
தமியேன் மன்ற அளியேன் யானே. 
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.

31. மருதம் - தலைவி கூற்று 

மள்ளர் குழீஇய விழவி னானும் 
மகளிர் தழீஇய துணங்கை யானும் 
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை 
யானுமோர் ஆடுகள மகளே என்கைக் 
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த 
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. 
-ஆதிமந்தியார்.

32. குறிஞ்சி - தலைவன் கூற்று 

காலையும் பகலும் கையறு மாலையும் 
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் 
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் 
மாவென மடலோடு மறுகில் தோன்றித் 
தெற்றெனத் தூற்றலும் பழியே 
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

33. மருதம் - தலைவி கூற்று 

அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் 
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ 
இரந்தூ ணிரம்பா மேனியொடு 
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே. 
-படுமரத்து மோசிகீரனார்.

34. மருதம் - தோழி கூற்று 

ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர் 
தமியர் உறங்கும் கௌவை யின்றாய் 
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே 
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு 
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் 
குட்டுவன் மாந்தை யன்னவெம் 
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே. 
-கொல்லிக் கண்ணனார்.

35. மருதம் - தலைவி கூற்று 

நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு 
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன 
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ 
நுண்ணுறை யழிதுளி தலைஇய 
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. 
-கழார்க்கீரனெயிற்றி.

36. குறிஞ்சி - தலைவி கூற்று 

துறுக லயலது மாணை மாக்கொடி 
துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன் 
நெஞ்சுகள னாக நீயலென் யானென 
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன் 
தாவா வஞ்சின முரைத்தது 
நோயோ தோழி நின்வயி னானே. 
-பரணர்.

37. பாலை - தோழி கூற்று 

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் 
பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 
மென்சினை யாஅம் பொளிக்கும் 
அன்பின தோழியவர் சென்ற வாறே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.

38. குறிஞ்சி - தலைவி கூற்று 

கான மஞ்ஞை யறையீன் முட்டை 
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும் 
குன்ற நாடன் கேண்மை என்றும் 
நன்றுமன் வாழி தோழி உண்கண் 
நீரொ டொராங்குத் தணப்ப 
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. 
-கபிலர்.

39. பாலை - தலைவி கூற்று 

வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென 
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் 
மலையுடை அருஞ்சுரம் என்பநம் 
முலையிடை முனிநர் சென்ற ஆறே. 
-ஔவையார்.

40. குறிஞ்சி - தலைவன் கூற்று 

யாயும் ஞாயும் யாரா கியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி யறிதும் 
செம்புலப் பெயனீர் போல 
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. 
-செம்புலப் பெயனீரார்.

41. பாலை - தலைவி கூற்று 

காதலர் உழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற 
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் 
மக்கள் போகிய அணிலாடு முன்றிற் 
புலம்பில் போலப் புல்லென்று 
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. 
-அணிலாடு முன்றிலார்.

42. குறிஞ்சி - தோழி கூற்று 

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக் 
கருவி மாமழை வீழ்ந்தென அருவி 
விடரகத் தியம்பு நாடவெம் 
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. 
-கபிலர்.

43. பாலை - தலைவி கூற்று 

செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே 
ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே 
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல் 
நல்லராக் கதுவி யாங்கென் 
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. 
-ஔவையார்.

44. பாலை - செவிலித்தாய் கூற்று 

காலே பரிதப் பினவே கண்ணே 
நோக்கி நோக்கி வாளிழந் தனவே 
அகலிரு விசும்பின் மீனினும் 
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. 
-வெள்ளிவீதியார்.

45. மருதம் - தோழி கூற்று 

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி 
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற 
மல்ல லூரன் எல்லினன் பெரிதென 
மறுவருஞ் சிறுவன் தாயே 
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. 
-ஆலங்குடி வங்கனார்.

46. மருதம் - தலைவி கூற்று 

ஆம்பற் பூவின் சாம்ப லன்ன 
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ 
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து 
எருவினுண் தாது குடைவன ஆடி 
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் 
புன்கண் மாலையும் புலம்பும் 
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. 
-மாமலாடனார்.

47. குறிஞ்சி - தோழி கூற்று 

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை 
எல்லி வருநர் களவிற்கு 
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 
-நெடுவெண்ணிலவினார்.

48. பாலை - தோழி கூற்று 

தாதிற் செய்த தண்பனிப் பாவை 
காலை வருந்துங் கையா றோம்பென 
ஓரை யாயங் கூறக் கேட்டும் 
இன்ன பண்பி னினைபெரி துழக்கும் 
நன்னுதல் பசலை நீங்க வன்ன 
நசையாகு பண்பின் ஒருசொல் 
இசையாது கொல்லோ காதலர் தமக்கே. 
-பூங்கணுத்திரையார்.

49. நெய்தல் - தலைவி கூற்று 

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து 
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப 
இம்மை மாறி மறுமை யாயினும் 
நீயா கியரென் கணவனை 
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 
-அம்மூவனார்.

50. மருதம் - தலைவி கூற்று 

ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் 
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் 
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந் 
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப் 
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. 
-குன்றியனார்.