குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


301. குறிஞ்சி - தலைவி கூற்று 

முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக் 
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக் 
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல் 
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல் 
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் 
வாரா தாயினும் வருவது போலச் 
செவிமுத லிசைக்கு மரவமொடு 
துயில்துறந் தனவால் தோழியென் கண்ணே. 
-குன்றியனார்.

302. குறிஞ்சி - தலைவி கூற்று 

உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே 
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் இதன்றலைப் 
பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும் 
அன்னோ இன்னும் நன்மலை நாடன் 
பிரியா நண்பினர் இருவரும் என்னும் 
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன் 
துஞ்சூர் யாமத் தானுமென் 
நெஞ்சத் தல்லது வரவறி யானே. 
-மாங்குடிகிழார்.

303. நெய்தல் - தோழி கூற்று 

கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு 
கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல் 
உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ 
தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப் 
பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும் 
இன்னிணர்ப் புன்னையம் புகர்நிழற் 
பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே. 
-அம்மூவனார்.

304. நெய்தல் - தலைவி கூற்று 

கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி 
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் 
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக் 
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய 
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து 
வெண்டோ டிரியும் வீததை கானற் 
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு 
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே. 
-கணக்காயர் தத்தனார்.

305. மருதம் - தலைவி கூற்று 

கண்தர வந்த காம ஒள்ளெரி 
என்புற நலியினும் அவரொடு பேணிச் 
சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமே 
வந்தஞர் களைதலை அவராற் றலரே 
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார் 
குப்பைக் கோழித் தனிப்போர் போல 
விளிவாங்கு விளியி னல்லது 
களைவோர் இலையா முற்ற நோயே. 
-குப்பைக்கோழியார்.

306. நெய்தல் - தலைவி கூற்று 

மெல்லிய இனிய மேவரு தகுந 
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ 
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன் 
காமர் மாஅத்துத் தாதமர் பூவின் 
வண்டுவீழ் பயருங் கானல் 
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே. 
-அம்மூவனார்.

307. பாலை - தலைவி கூற்று 

வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச் 
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி 
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ 
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன் 
உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது 
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி 
வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந் 
தழுங்க னெஞ்சமொடு முழங்கும் 
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.
-கடம்பனூர்ச் சாண்டிலியனார்.

308. குறிஞ்சி - தோழி கூற்று 

சோலை வாழைச் சுரிநுகும் பினைய 
அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து 
மயங்குதுயர் உற்ற மையல் வேழம் 
உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர 
ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் 
மாமலை நாடன் கேண்மை 
காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே. 
-பெருந்தோட் குறுஞ்சாத்தனார்.

309. மருதம் - தோழி கூற்று 

கைவினை மாக்கடம் செய்வினை முடிமார் 
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட 
நீடின வரம்பின் வாடிய விடினும் 
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது 
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் 
நின்னூர் நெய்த லனையேம் பெரும 
நீயெமக், கின்னா தனபல செய்யினும் 
நின்னின் றமைதல் வல்லா மாறே. 
-உறையூர்ச் சல்லியன் குமாரனார்.

310. நெய்தல் - தலைவி கூற்று 

புள்ளும் புலம்பின பூவிங் கூம்பின 
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும் 
நம்மே போலும் மம்மர்த் தாகி 
எல்லைகழியப் புல்லென் றன்றே 
இன்னும் உளெனே தோழி இந்நிலை 
தண்ணிய கமழுஞாழல் 
தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே. 
-பெருங்கண்ணனார்.

311. நெய்தல் - தலைவி கூற்று 

அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற் 
புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும் 
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் 
யான்கண் டனனோ இலனோ பானாள் 
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் 
தாதுசேர் நிகர்மலர் கொய்யும் 
ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே. 
-சேந்தன் கீரனார்.

312. குறிஞ்சி - தலைவன் கூற்று 

இரண்டறி கள்விநங் காத லோளே 
முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன் 
முள்ளூர்க் கான நாற வந்து 
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் 
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் 
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி 
அமரா முகத்த ளாகித் 
தமரோ ரன்னள் வைகறை யானே. 
-கபிலர்.

313. நெய்தல் - தலைவி கூற்று 

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை 
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு 
பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு 
யாத்தேம் யாத்தன்று நட்பே 
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. 
 

314. முல்லை - தலைவி கூற்று 

சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல் 
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப் 
பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும் 
வாரார் வாழி தோழி வரூஉம் 
இன்னுறழ் இளமுலை ஞெமுங்க 
இன்னா வைப்பின் சுரனிறந் தோரே. 
-பேரிசாத்தனார்.

315. குறிஞ்சி - தலைவி கூற்று 

எழுதரு மதியங் கடற்கண் டாஅங் 
கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன் 
ஞாயி றனையன் தோழி 
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே. 
-மதுரை வேள்ஆதத்தனார்.

316. நெய்தல் - தலைவி கூற்று 

ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும் 
நோய்மலி வருத்தம் அன்னை யறியின் 
உளெனோ வாழி தோழி விளியா 
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை 
ஓரை மகளி ரோராங் காட்ட 
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி 
ஓங்குவரல் விரிதிரை களையும் 
துறைவன் கொல்லோ பிறவா யினவே. 
-தும்பிசேர் கீரனார்.

317. குறிஞ்சி - தோழி கூற்று 

புரிமட மரையான் கருநரை நல்லேறு 
தீம்புளி நெல்லி மாந்தி யயலது 
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த் 
தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன் 
நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக 
வடபுல வாடைக் கழிமழை 
தென்புலம் படருந் தண்பனி நாளே. 
-மதுரைக் கண்டரதத்தனார்.

318. நெய்தல் - தலைவி கூற்று 

எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின் 
நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய் 
வெறியயர் களத்தினில் தோன்றுந் துறைவன் 
குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன் 
றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவிப் 
பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட் 
பிழையா வஞ்சினஞ் செய்த 
கள்வனும் கடவனும் புனைவனுந் தானே. 
-அம்மூவனார்.

319. முல்லை - தலைவி கூற்று 

மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து 
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும் 
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி 
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும் 
மாலைவந் தன்று மாரி மாமழை 
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர் 
இன்னும் வாரார் ஆயின் 
என்னாந் தோழிநம் இன்னுயிர் நிலையே. 
-தாயங் கண்ணனார்.

320. நெய்தல் - தலைவி கூற்று 

பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல் 
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு 
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன் 
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள் 
நக்கதோர் பழியு மிலமே போதவிழ் 
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப் 
புன்னையஞ் சேரி யிவ்வூர் 
கொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே. 
-தும்பிசேர் கீரனார்.

321. குறிஞ்சி - தோழி கூற்று 

மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன் 
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன் 
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும் 
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை 
மன்ற மரையா இரிய ஏறட்டுச் 
செங்கண் இரும்புலி குழுமும் அதனால் 
மறைத்தற் காலையோ அன்றே 
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே. 
 

322. குறிஞ்சி - தலைவி கூற்று 

அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவி 
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து 
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென 
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து 
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு 
மருவின் இனியவு முளவோ 
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே. 
-ஐயூர் முடவனார்.

323. முல்லை - தலைவன் கூற்று 

எல்லாம் எவனோ பதடி வைகல் 
பாணர் படுமலை பண்ணிய எழாலின் 
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப் 
பெய்த புலத்துப் பூத்த முல்லைப் 
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் 
அரிவை தோளிணைத் துஞ்சிக் 
கழிந்த நாளிவண் வாழு நாளே. 
-பதடி வைகலார்.

324. நெய்தல் - தோழி கூற்று 

கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை 
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை 
இனமீன் இருங்கழி நீந்தி நீநின் 
நயனுடை மையின் வருதி யிவடன் 
மடனுடை மையின் உயங்கும் யானது 
கவைமக நஞ்சுண் டாஅங் 
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே. 
-கவை மகனார்.

325. நெய்தல் - தலைவி கூற்று 

சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன் 
மாயச் செலவாச் செத்து மருங்கற்று 
மன்னிக் கழிகென் றேனே அன்னோ 
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ 
கருங்கால் வெண்குருகு மேயும் 
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே. 
-நன்னாகையார்.