நற்றிணை

நற்றிணை

நற்றிணை


101 நெய்தல் - வெள்ளியந்தின்னனார்

முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் 
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் 
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி 
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் 
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி 
இனிதுமன் அளிதோ தானே துனி தீர்ந்து 
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் 
மீன் எறி பரதவர் மட மகள் 
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

பின்னின்ற தலைமகன் தோழி கேட்பச் சொல்லியது

102 குறிஞ்சி - செம்பியனார்

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி 
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு 
நின் குறை முடித்த பின்றை என் குறை 
செய்தல்வேண்டுமால் கை தொழுது இரப்பல் 
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு 
நின் கிளை மருங்கின் சேறிஆயின் 
அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக் 
கானக் குறவர் மட மகள் 
ஏனல் காவல் ஆயினள் எனவே

காமம் மிக்க கழிபடர்கிளவி

103 பாலை - மருதன் இள நாகனார்

ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் 
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று 
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் 
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து 
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் 
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் 
மாயா வேட்டம் போகிய கணவன் 
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் 
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே 
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் 
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே

பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து 
ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது

104 குறிஞ்சி - பேரி சாத்தனார்

பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை 
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே 
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக் 
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த 
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது 
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் 
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் 
யானே அன்றியும் உளர்கொல் பானாள் 
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர 
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர் 
போக்கு அற விலங்கிய சாரல் 
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே

தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது

105 பாலை - முடத்திருமாறன்

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து 
ஒளிர் சினை அதிர வீசி விளிபட 
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் 
கடு நடை யானை கன்றொடு வருந்த 
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் 
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண் 
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன் 
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை 
வண்டு படு வான் போது கமழும் 
அம் சில் ஓதி அரும் படர் உறவே

இடைச் சுரத்து மீளலுற்ற 
நெஞ்சினைத் தலைமகன் கழறியது

106 நெய்தல் - தொண்டைமான் இளந்திரையன்

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல் 
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள 
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது 
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு 
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப 
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் 
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி 
முறி திமிர்ந்து உதிர்த்த கையள் 
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே

பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு 
உணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் 
மீள்கின்றான் தேர்ப்பாகற்குச்சொல்லியது

107 பாலை

உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்ப் 
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் 
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை 
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் 
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் 
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் 
சென்ற காதலர்வழி வழிப்பட்ட 
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து 
ஆனாக் கௌவை மலைந்த 
யானே தோழி நோய்ப்பாலேனே

பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது

108 குறிஞ்சி

மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் 
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை 
அணையக் கண்ட அம் குடிக் குறவர் 
கணையர் கிணையர் கை புனை கவணர் 
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட 
பழகிய பகையும் பிரிவு இன்னாதே 
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை 
சுடர் புரை திரு நுதல் பசப்ப 
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே

வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி 
தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது

109 பாலை - மீளிப் பெரும்பதுமனார்

ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின் 
காதலர் அகன்றென கலங்கிப் பேதுற்று 
அன்னவோ இந் நன்னுதல் நிலை என 
வினவல் ஆனாப் புனையிழை கேள் இனி 
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென 
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் 
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து 
உச்சிக் கட்டிய கூழை ஆவின் 
நிலை என ஒருவேன் ஆகி 
உலமர கழியும் இப் பகல் மடி பொழுதே

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளது நிலைகண்ட 
தோழிக்குத் தலைமகள் சொல்லியது

110 பாலை - போதனார்

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால் 
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி 
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல் 
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் 
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று 
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர் 
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி 
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி 
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல் 
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென 
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள் 
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல 
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

மனைமருட்சி மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்

111 நெய்தல்

அத்த இருப்பைப் பூவின் அன்ன 
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் 
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர் 
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் 
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு 
திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி 
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி 
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் 
பெருங் கழிப் பாக்கம் கல்லென 
வருமே தோழி கொண்கன் தேரே

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது

112 குறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார்

விருந்து எவன்செய்கோ தோழி சாரல் 
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் 
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு 
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் 
பெருங் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி 
மாக் கடல் முகந்து மணி நிறத்து அருவித் 
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய் 
மலை இமைப்பது போல் மின்னி 
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே

பருவ வரவின்கண்ஆற்றாளாய 
தலைவியைத் தோழி வற்புறுத்தியது

113 பாலை - இளங்கீரனார்

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் 
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் 
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் 
பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால் 
அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமே 
சேறும் மடந்தை என்றலின் தான் தன் 
நெய்தல் உண்கண் பைதல் கூர 
பின் இருங் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து 
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் 
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் 
ஆம்பல்அம் குழலின் ஏங்கி 
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே

இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது

114 குறிஞ்சி - தொல்கபிலர்

வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் 
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் 
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம் 
வைகிக் கேட்டுப் பையாந்திசினே 
அளிதோ தானே தோழி அல்கல் 
வந்தோன்மன்ற குன்ற நாடன் 
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை 
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் 
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு 
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி 
மையல் மடப் பிடி இனைய 
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு 
உரைப்பாளாய் சிறைப்புறமாகச் சொல்லியது

115 முல்லை

மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க 
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் 
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த் 
தடங் கடல் வாயில் உண்டு சில் நீர் என 
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி 
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ 
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர் 
தவச் சேய் நாட்டர்ஆயினும் மிகப் பேர் 
அன்பினர் வாழி தோழி நன் புகழ் 
உலப்பு இன்று பெறினும் தவிரலர் 
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி 
பருவம் காட்டி வற்புறுத்தியது

116 குறிஞ்சி - கந்தரத்தனார்

தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் 
தாம் அறிந்து உணர்க என்பமாதோ 
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று 
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை 
சூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும் 
மலை கெழு நாடன் கேண்மை பலவின் 
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் 
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு தொடர்பு அறச் 
சேணும் சென்று உக்கன்றே அறியாது 
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த 
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் 
இன்னும் ஓவார் என் திறத்து அலரே

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு 
வன்புறை எதிரழிந்து சொல்லியது

117 நெய்தல் - குன்றியனார்

பெருங் கடல் முழங்க கானல் மலர 
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர 
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் 
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர 
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் 
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க 
புலம்பொடு வந்த புன்கண் மாலை 
அன்னர் உன்னார் கழியின் பல் நாள் 
வாழலென் வாழி தோழி என்கண் 
பிணி பிறிதாகக் கூறுவர் 
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே

வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை 
எதிரழிந்து சொல்லியது சிறைப்புறமும்ஆம்

118 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் 
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில் 
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் 
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும் 
அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர் என 
இணர் உறுபு உடைவதன்தலையும் புணர்வினை 
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய 
துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி 
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி 
புது மலர் தெருவுதொறு நுவலும் 
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது

119 குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார்

தினை உண் கேழல் இரிய புனவன் 
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர் 
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் 
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை 
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் 
பல் மலர்க் கான் யாற்று உம்பர் கருங் கலை 
கடும்பு ஆட்டு வருடையடு தாவன உகளும் 
பெரு வரை நீழல் வருகுவன் குளவியடு 
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும் 
முயங்கல் பெறுகுவன் அல்லன் 
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே

சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது

120 மருதம் - மாங்குடி கிழார்

தட மருப்பு எருமை மட நடைக் குழவி 
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல் 
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை 
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப 
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ 
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகை பெறப் 
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் 
அம் துகில் தலையில் துடையினள் நப் புலந்து 
அட்டிலோளே அம் மா அரிவை 
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாள் அன்று 
சிறு முள் எயிறு தோன்ற 
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே

விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது