நற்றிணை
நற்றிணை
121 முல்லை - ஒரு சிறைப்பெரியனார்
விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை
அரலை அம் காட்டு இரலையடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே
எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு
பரியல் வாழ்க நின் கண்ணி காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ தண் பெயற்
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே
வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குத்
தேர்ப்பாகன் சொல்லியது
122 குறிஞ்சி - செங்கண்ணனார்
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள் இருள்
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்
பூ வேய் கண்ணி அது பொருந்துமாறே
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு
உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது
123 நெய்தல் - காஞ்சிப் புலவனார்
உரையாய் வாழி தோழி இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே
தலைவன்சிறைப்புறத்தானாக தோழி
தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது
124 நெய்தல் - மோசி கண்ணத்தனார்
ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது
125.குறிஞ்சி
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி
நல் அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் என
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை
நல் நாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர்மன் தோழி மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது
126 பாலை
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி
துனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம்
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே அதனால்
நில்லாப் பொருட் பிணிச் சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன்
நெருங்கிச் செலவு அழுங்கியது
127 நெய்தல் - சீத்தலைச் சாத்தனார்
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ பாண பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
128 குறிஞ்சி - நற்சேந்தனார்
பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி
அழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக அதற்கொண்டு
அ·தே நினைந்த நெஞ்சமொடு
இ·து ஆகின்று யான் உற்ற நோயே
குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்
129 குறிஞ்சி - ஒளவையார்
பெரு நகை கேளாய் தோழி காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே சென்று
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை
வாழ்தும் என்ப நாமே அதன்தலை
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது
130 நெய்தல் - நெய்தல் தத்தனார்
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ
எனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இப் பேர் அஞர் உறுவி என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே விரிநீர்
வையக வரையளவு இறந்த
எவ்வ நோய் பிறிது உயவுத் துணை இன்றே
பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது
131 நெய்தல் - உலோச்சனார்
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்ப
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத்
தலைவன் வேறுபடாமை ஆற்றுவித்தாய் பெரியை
காண் என்றாற்குத் தோழி சொல்லியது
132 நெய்தல்
பேர் ஊர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே அதன்தலை
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்
இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளே
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய
தலைவிக்குத் தோழி சொல்லியது
133 குறிஞ்சி - நற்றமனார்
தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே
நுதலும் பசலை பாயின்று திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதல்அம் கிளவி
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தௌ த்த
தோய் மடற் சில் நீர் போல
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே
வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய
தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது
134 குறிஞ்சி
இனிதின் இனிது தலைப்படும் என்பது
இதுகொல் வாழி தோழி காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர் கொடிச்சி
அவ் வாய்த் தட்டையடு அவணை ஆக என
ஏயள்மன் யாயும் நுந்தை வாழியர்
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்
செல்லாயோ நின் முள் எயிறு உண்கு என
மெல்லிய இனிய கூறலின் யான் அ·து
ஒல்லேன் போல உரையாடுவலே
இற்செறிப்பார் என ஆற்றாளாய தலைவியை
அ·து இலர் என்பது பட தோழி சொல்லியது
135 நெய்தல் - கதப்பிள்ளையார்
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன்றம்ம தானே பனி படு
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்
வால் உளைப் பொலிந்த புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே
வரைவு நீட்டிப்ப அலர்ஆம் எனக் கவன்ற
தோழி சிறைப்புறமாகச்சொல்லியது
136 குறிஞ்சி - நற்றங் கொற்றனார்
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே
சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது
137 பாலை - பெருங்கண்ணனார்
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்
தட மென் பணைத் தோள் மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று
எய்தினை வாழிய நெஞ்சே செவ் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே
தலைவன் செலவு அழுங்கியது
138 நெய்தல் - அம்மூவனார்
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன் நாள் நம்மொடு
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே
அலர் ஆயிற்று என ஆற்றாளாய தலைமகட்குத்
தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
139 முல்லை - பெருங்கௌசிகனார்
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை உரைஇயரோ பெருங் கலி எழிலி
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை முழவின்
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்
விரவு மலர் உதிர வீசி
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே
தலைவன் வினைமுற்றி வந்து பள்ளி
இடத்தானாக பெய்த மழையை வாழ்த்தியது
140 குறிஞ்சி - பூதங்கண்ணனார்
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப தந்தை
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே
குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது