நற்றிணை

நற்றிணை

நற்றிணை


161 முல்லை

இறையும் அருந் தொழில் முடித்தென பொறைய 
கண் போல் நீலம் சுனைதொறும் மலர 
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின் 
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய 
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி 
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை எனக் 
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப 
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப் 
புள் அறிவுறீஇயினகொல்லோ தௌ ளிதின் 
காதல் கெழுமிய நலத்தள் ஏதில் 
புதல்வற் காட்டிப் பொய்க்கும் 
திதலை அல்குல் தேம் மொழியாட்கே

வினை முற்றிப் பெயரும்தலைவன் 
தேர்ப்பாகன் கேட்ப சொல்லியது
162 பாலை

மனை உறை புறவின் செங் காற் பேடைக் 
காமர் துணையடு சேவல் சேர 
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் 
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் 
பனி வார் உண்கண் பைதல கலுழ 
நும்மொடு வருவல் என்றி எம்மொடு 
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் 
யாயடு நனி மிக மடவை முனாஅது 
வேனில் இற்றித் தோயா நெடு வீழ் 
வழி நார் ஊசலின் கோடை தூக்குதொறும் 
துஞ்சு பிடி வருடும் அத்தம் 
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே

உடன் போதுவல் என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது
163 நெய்தல்

உயிர்த்தனவாகுக அளிய நாளும் 
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையடு 
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக் 
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப 
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர 
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி 
வருந்துமன் அளிய தாமே பெருங் கடல் 
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை 
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் 
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று 
வைகுறு வனப்பின் தோன்றும் 
கைதைஅம் கானல் துறைவன் மாவே

வரைவு மலிந்து சொல்லியது
164 பாலை

உறை துறந்திருந்த புறவில் தனாது 
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பக 
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச் 
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் எனச் 
சொல்லின் தௌ ப்பவும் தௌ தல் செல்லாய் 
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் 
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென 
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ 
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது 
மாறு புறக்கொடுக்கும் அத்தம் 
ஊறு இலராகுதல் உள்ளாமாறே

பொருள் முடித்து வந்தான் என்பது வாயில்கள்வாய்க் 
கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது
165 குறிஞ்சி

அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது 
பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன் 
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக் 
கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்து 
கிளையடு மகிழும் குன்ற நாடன் 
அடைதரும்தோறும் அருமை தனக்கு உரைப்ப 
நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு 
அன்ன ஆகுக என்னான் 
ஒல்காது ஒழி மிகப் பல்கின தூதே

நொதுமலர் வரையும் பருவத்து தோழி 
தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் 
சொல்லியது வரைவு மலிந்ததூஉம் ஆம்
166 பாலை

பொன்னும் மணியும் போலும் யாழ நின் 
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும் 
போதும் பணையும் போலும் யாழ நின் 
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் 
இவை காண்தோறும் அகம் மலிந்து யானும் 
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்தலை 
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் 
வினையும் வேறு புலத்து இலெனே நினையின் 
யாதனின் பிரிகோ மடந்தை 
காதல் தானும் கடலினும் பெரிதே

செலவுக் குறிப்பினால் வேறுபட்ட 
கிழத்திக்குத் தலைவன் சொல்லியது
167 நெய்தல்

கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை 
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய் 
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற 
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின் ஒலிக்கும் 
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த 
பயன் தெரி பனுவற் பை தீர் பாண 
நின் வாய்ப் பணி மொழி களையா பல் மாண் 
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் 
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த 
இறை ஏர் எல் வளைக் குறுமகள் 
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே

தோழி பாணற்கு வாயில் மறுத்தது தூதொடு 
வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்
168 குறிஞ்சி

சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் 
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல் 
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் 
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் 
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் 
நன் மலை நாட பண்பு எனப் படுமோ 
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் 
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள் 
மை படு சிறு நெறி எ·கு துணை ஆக 
ஆரம் கமழும் மார்பினை 
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே

தோழி இரவுக்குறி மறுத்தது
169 முல்லை

முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல் 
வருவம் என்னும் பருவரல் தீர 
படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லி 
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி 
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை 
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் 
வன் கை இடையன் எல்லிப் பரீஇ 
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை 
மறுகுடன் கமழும் மாலை 
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே

வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது
170 மருதம்

மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள் 
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் 
பிணையல் அம் தழை தைஇ துணையிலள் 
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே 
எழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம் 
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் 
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது 
ஒரு வேற்கு ஓடியாங்கு நம் 
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே

தோழி விறலிக்கு வாயில் மறுத்தது
171 பாலை

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை 
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் 
நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவி 
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய 
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் 
பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டு 
யாங்கு வல்லுந மற்றே ஞாங்க 
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் 
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் 
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ 
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது
172 நெய்தல்

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி 
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய 
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப 
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று 
அன்னை கூறினள் புன்னையது நலனே 
அம்ம நாணுதும் நும்மொடு நகையே 
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப 
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் 
துறை கெழு கொண்க நீ நல்கின் 
இறைபடு நீழல் பிறவுமார் உளவே

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி 
வரைவு கடாயது குறிபெயர்த்தீடும் ஆம்
173 குறிஞ்சி

சுனைப் பூக் குற்றும் தொடலை தைஇயும் 
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும் 
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி 
வெறி என உணர்ந்த அரிய அன்னையை 
கண்ணினும் கனவினும் காட்டி இந் நோய் 
என்னினும் வாராது மணியின் தோன்றும் 
அம் மலை கிழவோன் செய்தனன் இது எனின் 
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின் 
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ 
தொடியோய் கூறுமதி வினவுவல் யானே

தோழி தலைவிக்கு உரைப்பாளாய் சிறைப்புறமாகச் 
சொல்லியது வெறி அச்சுறீஇத் தோழி 
அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்
174 பாலை

கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன 
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் 
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின் 
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் 
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி 
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து 
உயங்கினை மடந்தை என்றி தோழி 
அற்றும் ஆகும் அ·து அறியாதோர்க்கே 
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி 
மல்லல் மார்பு மடுத்தனன் 
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே

வினை முற்றி வந்து எய்திய காலத்து ஆற்றாளாய 
தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது
175 நெய்தல்

நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர் 
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ 
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய 
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்ப் 
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை 
தான் அறிந்தன்றோ இலளே பானாள் 
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி 
சுடுவான் போல நோக்கும் 
அடு பால் அன்ன என் பசலை மெய்யே

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது
176 குறிஞ்சி

எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து 
நல்கினம் விட்டது என் நலத்தோன் அவ் வயின் 
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் 
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி 
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் 
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் 
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ 
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு 
அருவி முழவின் பாடொடு ஒராங்கு 
மென்மெல இசைக்கும் சாரல் 
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே

பரத்தை தலைவியின் பாங்கிக்குப் 
பாங்காயினார் கேட்ப விறலிக்குச் சொல்லியது
177 பாலை

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப 
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு 
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர் 
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப் பட 
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும் 
பீலி சூட்டி மணி அணிபவ்வே 
பண்டினும் நனி பல அளிப்ப இனியே 
வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து 
எழுது எழில் உண்கண் பாவை 
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே

செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது
178 நெய்தல்

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன 
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை 
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை 
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது 
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் 
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் 
காணவும் இயைந்தன்று மன்னே நாணி 
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன் 
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப 
விளிந்தன்றுமாது அவர்த் தௌ ந்த என் நெஞ்சே

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது
179 பாலை

இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென 
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி 
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள் 
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு 
யானும் தாயும் மடுப்ப தேனொடு 
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி 
நெருநலும் அனையள்மன்னே இன்றே 
மை அணற் காளை பொய் புகலாக 
அருஞ் சுரம் இறந்தனள் என்ப தன் 
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே

மனை மருட்சி
180 மருதம்

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை 
கழனி நாரை உரைத்தலின் செந்நெல் 
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் 
பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனே 
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே 
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய 
இரு பெரு வேந்தர் பொரு களத்து ஒழித்த 
புன்னை விழுமம் போல 
என்னொடு கழியும் இவ் இருவரது இகலே

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி 
தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது