நற்றிணை

நற்றிணை

நற்றிணை


41 - பாலை - இளந்தேவனார்

பைங் கண் யானை பரூஉ தாள் உதைத்த 
வெண் புறக் களரி விடு நீறு ஆடி 
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய 
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் 
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ 5 
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு 
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட 
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி 
சிறு நுண் பல் வியர் பொறித்த 
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே 10

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் 
தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது

42 - முல்லை - கீரத்தனார்

மறத்தற்கு அரிது ஆல் பாக பல் நாள் 
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய 
பழ மழை பொழிந்த புது நீர் அவல 
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை 
மணி ஒலி கேளாள் வாணுதல் அதனால் 5 
ஏகுமின் என்ற இளையர் வல்லே 
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென 
மண்ணாக் கூந்தல் மாசு அற கழீஇ 
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய 
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ 10 
அவிழ் பூ முடியினள் கவைஇய 
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே

வினை முற்றி மீள்வான் தேர்பாகற்குச் சொல்லியது

43 - பாலை - எயினந்தையார்

துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் 
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் 
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி 
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு 
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் 5 
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே 
மெய் மலி உவகை ஆகின்று இவட்கே 
அஞ்சல் என்ற இறை கைவிட்டென 
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் 
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் 10 
ஓர் எயில் மன்னன் போல 
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி 
தலைவனைச் செலவு அழுங்குவித்தது

44 - குறிஞ்சி - பெருங் கௌசிகனார்

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி 
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் 
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி 
மனை வயின் பெயர்ந்த காலை நினைஇய 
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த 5 
நீடு இலை விளை தினை கொடுங் கால் நிமிரக் 
கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல 
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில் 
குடம் காய் ஆசினிப் படப்பை நீடிய 
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து 10 
செல் மழை இயக்கம் காணும் 
நல் மலை நாடன் காதல் மகளே

இச்செறிப்பின் பிற்றை ஞான்று தலைமகன் 
குறியிடத்து வந்து சொல்லியது

45 - நெய்தல்

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி 
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு 
மீன் எறி பரதவர் மகளே நீயே 
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் 
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே 5 
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி 
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ 
புலவு நாறுதும் செல நின்றீமோ 
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை 
நும்மொடு புரைவதோ அன்றே 10 
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது

46 - பாலை

வைகல் தோறும் இன்பமும் இளமையும் 
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்து 
காணீர் என்றலோ அரிதே அது நனி 
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி 
பூண் அணி ஆகம் புலம்ப பாணர் 5 
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி 
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர 
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து 
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து 
நல் வாய் அல்லா வாழ்க்கை 10 
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே

பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது

47 - குறிஞ்சி - நல்வெள்ளியார்

பெருங் களிறு உழுவை அட்டென இரும் பிடி 
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது 
நெய்தல் பாசடை புரையும் அம் செவிப் 
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென 
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் 5 
கானக நாடற்கு இது என யான் அது 
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து 
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி 
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து 
அன்னை அயரும் முருகு நின் 10 
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே

சிறைப்புறமாகத் தோழி தலைமகட்கு உரைப்பாளாய்ச் சொல்லியது

48 - பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அன்றை அனைய ஆகி இன்று உம் எம் 
கண் உள போலச் சுழலும் மாதோ 
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ 
வைகுறு மீனின் நினையத் தோன்றி 
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை 5 
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் 
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது 
அமர் இடை உறுதர நீக்கி நீர் 
எமர் இடை உறுதர ஒளித்த காடே

பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது

49 - நெய்தல் - நெய்தல் தத்தனார்

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் 
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே 
முடி வலை முகந்த முடங்கு இறா பரவைப் 
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே 
கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து 5 
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என 
சென்று நாம் அறியின் எவனோ தோழி 
மன்றப் புன்னை மா சினை நறு வீ 
முன்றில் தாழையடு கமழும் 
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே 10

தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது 
சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்தூஉம் ஆம்

50 - மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ

அறியாமையின் அன்னை அஞ்சி 
குழையன் கோதையன் குறும் பைத் தொடியன் 
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல 
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை 
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின் 5 
கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்று என 
யாணது பசலை என்றனன் அதன் எதிர் 
நாண் இலை எலுவ என்று வந்திசினே 
செறுநரும் விழையும் செம்மலோன் என 
நறு நுதல் அரிவை போற்றேன் 10 
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே

தோழி பாணர்க்கு வாயில் மறுத்தது

51 குறிஞ்சி - பேராலவாயர்

யாங்குச் செய்வாம்கொல் தோழி ஓங்கு கழைக் 
காம்புடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று 
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் 
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் 
பெயல் ஆனாதே வானம் பெயலொடு 
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென 
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே 
பெருந் தண் குளவி குழைத்த பா அடி 
இருஞ் சேறு ஆடிய நுதல கொல்களிறு 
பேதை ஆசினி ஒசித்த 
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே

ஆற்றது ஏதம் அஞ்சி வேறுபட்டாள் வெறியாடலுற்ற 
இடத்து சிறைப்புறமாகச் சொல்லியது

52 பாலை - பாலத்தனார்

மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் 
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் 
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் 
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி 
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம் 
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் 
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே 
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர் 
மழவர் பெரு மகன் மா வள் ஓரி 
கை வளம் இயைவது ஆயினும் 
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே

தலைமகன் செலவு அழுங்கியது

53 குறிஞ்சி - நல்வேட்டனார்

யான் அ·து அஞ்சினென் கரப்பவும் தான் அ·து 
அறிந்தனள்கொல்லோ அருளினள்கொல்லோ 
எவன்கொல் தோழி அன்னை கண்ணியது 
வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன் 
ஆர் கலி வானம் தலைஇ நடு நாள் 
கனை பெயல் பொழிந்தென கானக் கல் யாற்று 
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் 
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் 
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி 
முனியாது ஆடப் பெறின் இவள் 
பனியும் தீர்குவள் செல்க என்றோளே

வரைவு நீட்டிப்ப தோழி சிறைப்புறமாகச் சொல்லியது

54 நெய்தல் - சேந்தங் கண்ணனார்

வளை நீர் மேய்ந்து கிளை முதல்செலீஇ 
வாப் பறை விரும்பினைஆயினும் தூச் சிறை 
இரும் புலா அருந்தும் நின் கிளையடு சிறிது இருந்து 
கருங் கால் வெண் குருகு எனவ கேண்மதி 
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை 
அது நீ அறியின் அன்புமார் உடையை 
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை 
இற்றாங்கு உணர உரைமதி தழையோர் 
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் 
தெண் திரை மணிப் புறம் தைவரும் 
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே

காமம் மிக்க கழிபடர்கிளவி

55 குறிஞ்சி - பெருவழுதி

ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை 
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி 
உறு பகை பேணாது இரவின் வந்து இவள் 
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு 
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின் 
கண் கோள் ஆக நோக்கி பண்டும் 
இனையையோ என வினவினள் யாயே 
அதன் எதிர் சொல்லாளாகி அல்லாந்து 
என் முகம் நோக்கியோளே அன்னாய் 
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல் என மடுத்த 
சாந்த ஞெகிழி காட்டி 
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் 
தோழி தலைவற்குச் சொல்லியது

56 பாலை - பெருவழுதி

குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ 
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய 
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை 
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் 
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா 
ஒருங்கு வரல் நசையடு வருந்தும்கொல்லோ 
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து 
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி 
ஏதிலாட்டி இவள் எனப் 
போயின்று கொல்லோ நோய் தலைமணந்த

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் 
தோழிக்குத் தலைவி சொல்லியது

57 குறிஞ்சி - பொதும்பில் கிழார்

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக் 
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென 
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி 
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி 
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் 
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் 
மா மலை நாட மருட்கை உடைத்தே 
செங் கோல் கொடுங் குரல் சிறு தினை வியன் புனம் 
கொய் பதம் குறுகும்காலை எம் 
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

58 நெய்தல் - முதுகூற்றனார்

பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர் 
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் 
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல 
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ 
வீரை வேண்மான் வெளியன் தித்தன் 
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் 
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப 
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து 
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை 
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் 
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே

பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு 
நோக்கி தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது

59 முல்லை - கபிலர்

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து 
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி 
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல 
பல் வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து 
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் 
வன் புலக் காட்டு நாட்டதுவேஅன்பு கலந்து 
நம்வயின் புரிந்த கொள்கையடு நெஞ்சத்து 
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை 
நுண் முகை அவிழ்ந்த புறவின் 
பொறை தலை மணந்தன்று உயவுமார் இனியே

வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது

60 மருதம் - தூங்கலோரியார்

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் 
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ 
கண்படை பெறாஅது தண் புலர் விடியல் 
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையடு 
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு 
கவர் படு கையை கழும மாந்தி 
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் 
நடுநரொடு சேறிஆயின் அவண் 
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில் 
மா இருங் கூந்தல் மடந்தை 
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே

சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் 
தோழி செறிப்பு அறிவுறீஇயது