நற்றிணை
நற்றிணை
61 குறிஞ்சி - சிறுமோலிகனார்
கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினெனாக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறுமகள் என்றலின்
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ என்றிசின் யானே
தலைவன் வரவு உணர்ந்து தலைவிக்குச்
சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது
62 பாலை - இளங்கீரனார்
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதிநாட் திங்கள்
உரறு குரல் வெவ் வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பர·து எனவே
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து
வந்த தலைவன் பின்னும் பொருள்வலிக்கப்பட்ட
நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது
63 நெய்தல் - உலோச்சனார்
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப
பசலை ஆகி விளிவதுகொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச்
செறிப்பு அறிவுறீஇயது
64 குறிஞ்சி - உலோச்சனார்
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்னவாக இனையல் தோழி யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக்
கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது
65 குறிஞ்சி - கபிலர்
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து
புலியடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது
66 பாலை
மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ
கோதை மயங்கினும் குறுந் தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்
மாண் நலம் கையறக் கலுழும் என்
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே
மனை மருட்சி இனிசந்த நாகனார்
67 நெய்தல் - பேரி சாத்தனார்
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய் கரைய
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே
கணைக் கால் மா மலர் கரப்ப மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல் இமிழ் பனிக் கடல் மல்கு சுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கின் எவனோதெய்ய பொங்கு பிசிர்
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது
68 குறிஞ்சி - பிரான் சாத்தனார்
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே
செல்க என விடுநள்மன்கொல்லோ எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு
உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது
69 முல்லை - சேகம்பூதனார்
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரைச் சென்று அவண் மறைய
பறவை பார்ப்புவயின் அடைய புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனையவாகித் தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது
70 மருதம்
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கௌ ற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே
காமம் மிக்க கழிபடர்கிளவி வெள்ளி வீதியார்
71 பாலை - வண்ணப்புறக் கந்தரத்தனார்
மன்னாப் பொருட் பிணி முன்னி இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து எனப்
பல் மாண் இரத்திர்ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே
தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது
72 நெய்தல் - இளம்போதியார்
பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது மிகப் பெரிது
அழிதக்கன்றால் தானே கொண்கன்
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் எற்
பிரிதல் சூழான்மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்றுகொல் என்னும் அதனால்
புலர்வதுகொல் அவன் நட்பு எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே
தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது
73 பாலை - மூலங்கீரனார்
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே செவ் அரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
நுதற் கவின் அழிக்கும் பசலையும்
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது
74 நெய்தல் - உலோச்சனார்
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்
நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறை அருங் களிற்றின் பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை
ஏதிலாளனும் என்ப போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது
75 குறிஞ்சி - மாமூலனார்
நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன் பை
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது
உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன்
தோழி கேட்பச்சொல்லியது
76 பாலை
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சுவழி அஞ்சாது அசைவழி அசைஇ
வருந்தாது ஏகுமதி வால் இழைக் குறுமகள்
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத்
தலைவிக்கு உரைத்தது அம்மூவனார்
77 குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர்
அருங் குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே நெஞ்சே செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒள் நுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே
பின்னின்ற தலைவன் நெஞ்சிற்கு உரைத்தது கபிலர்
78 நெய்தல்
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா
உரவு நீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரலே
வரைவு மலிந்தது கீரங்கீரனார்
79 பாலை - கண்ணகனார்
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று
அம்ம வாழி தோழி
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது
80 மருதம் - பூதன்தேவனார்
மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார் கன்று விட்டு
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன்
தோழி கேட்ப தன் நெஞ்சிற்கு உரைத்தது