அகநானூறு

அகநானூறு

களிற்றியாணை நிரை


61
பாடியவர்: மாமூலனார், 
திணை:  பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் எனத்
தாள் வலம் படுப்பச் சேண் புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி நோய் உழந்து
ஆழல் வாழி தோழி தாழாது  5
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்  10
கழல் புனை திருந்து அடிக் கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி  15
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.

62
பாடியவர்: பரணர், 
திணை:  குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
ஆகத்து அரும்பிய முலையள் பணைத்தோள்
மாத்தாள் குவளை மலர் பிணைத்தன்ன
மாஇதழ் மழைக்கண் மாஅயோளொடு  5
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்பக்
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல  10
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடை தந்தோளே வென்வேல்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல் அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்  15
மடவது மாண்ட மாஅயோளே.


63
பாடியவர்: கருவூர்க் கண்ணம்புல்லனார், 
திணை:  பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் தன் மகளான தோழியிடம் சொன்னது

கேளாய் வாழியோ மகளை நின் தோழி
திரு நகர் வரைப்பு அகம் புலம்ப அவனொடு
பெருமலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலங்கெழு பூழி  5
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பக்
கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்
கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து  10
மன்று நிறை பைதல் கூரப் பல உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை
மட மயில் அன்ன என் நடைமெலி பேதை  15
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல் எனக் கலுழும் என் நெஞ்சே.

64
பாடியவர்: ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்னத்தனார், 
திணை:  முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

களையும் இடனால் பாக உளை அணி
உலகு கடப்பன்ன புள் இயல் கலி மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரியத்
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்  5
வென் வேல் இளையர் வீங்கு பரி முடுகச்
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல
கடு நீர் வரித்த செந்நில மருங்கின்
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதரப்
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி  10
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ
ஊர் வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன்னிசை  15
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.

65
பாடியவர்: மாமூலனார், 
திணை:  பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரி அம் பெண்டிர் கெளவையும் ஒழிகம்
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்  5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
மால் கழை பிசைந்த கால்வாய் கூர் எரி  10
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
வான் தோய் புணரி மிசைக் கண்டாங்கு
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறிக்  15
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்
நாறு ஐங்கூந்தல் கொம்மை வரி முலை
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே.  20

66
பாடியவர்: செல்லூர் கோசிகன் கண்ணனார், 
திணை:  மருதத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்  5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து  10
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவ என்று இழிந்தனன் தாங்காது
மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும செல் இனி அகத்து எனக்  15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக்கிழவனும் போன்ம் என மகனொடு
தானே புகுதந்தோனே யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று  20
அலைக்கும் கோலொடு குறுகத் தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழம் கண்ணோட்டமும் நலிய  25
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே.


67
பாடியவர்: நோய் பாடியார், 
திணை:  பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

யான் எவன் செய்கோ தோழி பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை
அரம் போழ் நுதிய வாளி அம்பின்  5
நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்  10
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர்
கழிப்பிணிக் கறைத் தோல் நிரை கண்டன்ன
உவல் இடி பதுக்கை ஆள் உகு பறந்தலை
உருஇல் பேஎய் ஊராத் தேரோடு  15
நிலம் படு மின்மினி போலப் பல உடன்
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே.

68
பாடியவர்: ஊட்டியார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய
இன்னிசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை  5
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல் பாம்பு என
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள்
அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன் தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்  10
வருவர் ஆயின் பருவம் இது எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம் வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக
வந்தனர் வாழி தோழி அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத்  15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்
கன்று கால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
அகல் வாய்ப் பாந்தள் படாஅர்ப்  20
பகலும் அஞ்சும் பனிக்கடு சுரனே.

69
பாடியவர்: உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்,
திணை:   பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி மேவரச்  5
செய் பொருள் திறவர் ஆகிப் புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கண நிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று
விண் பொரு நெடு வரை இயல் தேர் மோரியர்  10
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம்
சிலை மாண் வல் வில் சுற்றிப் பல மாண்  15
அம்புடைக் கையர் அரண் பல நூறி
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலை நாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.  20

70
பாடியவர்: மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார், 
திணை:  நெய்தற் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

கொடுந் திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரு புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ் வலைப் பயம் பாராட்டி
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே  5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே இனியே
வதுவை கூடிய பின்றைப் புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெருந்துறைக் கழனி மா நீர்ப்  10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேல் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த  15
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே.

71
பாடியவர்: அந்தி இளங்கீரனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம்சொன்னது

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல வண்டினம்
சுனைப்பூ நீத்துச் சினைப் பூப் படர
மை இல் மான் இனம் மருளப் பையென  5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈனப்
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக  10
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிச்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து  15
இது கொல் வாழி தோழி என் உயிர்
விலங்கு வெங்கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

72
பாடியவர்: எருமை வெளியனார் மகனார் கடலானார்,
திணை:   குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக்
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை  5
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்
ஆறே அரு மரபினவே யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய
கல் பொருது இரங்க
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து  10
ஆடு கழை நரலும் அணங்குடைக் கவாஅன்
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல் அராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்  15
வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீ தவறு உடையையும் அல்லை நின்வயின்  20
ஆனா அரும் படர் செய்த
யானே தோழி தவறு உடையேனே.