கலித்தொகை

கலித்தொகை

நெய்தல்கலி


128    
'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,    
வாடை தூக்க, வணங்கிய தாழை    
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,    
நளி இரும் கங்குல், நம் துயர் அறியாது,    
அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும்    
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போலப்    
புதுவது கவினினை' என்றி ஆயின்,    
நனவின் வாரா நயன் இலாளனைக்    
கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:    

'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என் 
நலம் தாராயோ?' எனத், தொடுப்பேன் போலவும்,    
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கிப்    
'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும் -    
'முலை இடைத் துயிலும் மறந்தீத்தோய்' என,    
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்,    
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' எனத்    
தலையுற முன் அடிப் பணிவான் போலவும் -    
கோதை கோலா இறைஞ்சி நின்ற    
ஊதை அம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,    
'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே,    
'பேதையை பெரிது' எனத் தெளிப்பான் போலவும்    

ஆங்கு;    
கனவினால் கண்டேன் - தோழி! - 'காண்தகக்    
கனவின் வந்த கானலம் சேர்ப்பன்    
நனவின் வருதலும் உண்டு' என,    
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே.    

129    
தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்,    
பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல், 
எல் உறு தெறு கதிர் மடங்கித் தன் கதிர் மாய,    
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,    
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா    
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர: 
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை - 

பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் பனிக் கடல்! -    
'தூ அற துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம் 
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் 
காதல் செய்து அகன்றாரை உடையையோ? - நீ.    

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! -    
'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய 
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல    
இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? - நீ.    

பனி இருள் சூழ்தரப் பைதல் அம் சிறு குழல்! -    
'இனி வரின், உயரும் மன் பழி' எனக் கலங்கிய    
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல 
இனிய செய்து அகன்றாரை உடையையோ? - நீ    

என ஆங்கு;    
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்படப்    
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!    
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்    
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்    
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே.    

130    
'நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்    
இவனின் தோன்றிய இவை' என இரங்கப்,    
புரை தவ நாடிப் பொய் தபுத்து, இனிது ஆண்ட    
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,    
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செலக்    
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல், 
புல் இருள் பரத்தரூஉம் - புலம்பு கொள் மருள் மாலை. 

இம் மாலை;    
ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என்    
கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்!    
இம் மாலை;    
இரும் கழி மா மலர் கூம்ப, அரோ, என்    
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்!    
இம் மாலை;    
கோவலர் தீம் குழல் இனைய, அரோ என்    
பூ எழில் உண் கண் புலம்பு கொண்டு இனையும்!    

என ஆங்கு;    
படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக், 
குடி புறங்காத்து ஓம்பும் செம் கோலான் வியன் தானை 
விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்    
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.    

131    
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என்     
திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த    
அரும் துயர் நீக்குவேன் போல்மன் - பொருந்துபு    
பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண் கண்,    
நோக்கும்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி 
இன மீன் இகல் மாற வென்ற சின மீன்    
எறி சுறா வான் மருப்பு கோத்து, நெறி செய்த     
நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்துக் கை உளர்வின்     
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்பத் 
தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை     
வீழ் ஊசல் தூங்க பெறின்.    

மாழை, மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல்     
கடைஇ யான் இகுப்ப, நீடு ஊங்காய் தட மென் தோள் 
நீத்தான் திறங்கள் பகர்ந்து.    
நாணின கொல் தோழி? நாணின கொல் தோழி?     
இரவு எலாம் நல்தோழி நாணின - என்பவை    6
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்,    
ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்...     
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்பத் தோழி! என்    
மேனி சிதைத்தான் துறை.    

மாரி வீழ் இரும் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண்     
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்!    
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் 
சேய் உயர் ஊசல்சீர் நீ ஒன்று பாடித்தை. 
பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி!     
இரவு எலாம், நல்தோழி! பார்த்து உற்றன - என்பவை, 
'தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல்?' என,     
இன் துணை அன்றில் இரவின் அகவாவே - 
அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என்    
மென்தோள் ஞெகிழ்த்தான் துறை.     

கரை கவர் கொடும் கழிக் கண்கவர் புள் இனம்     
திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை,     
இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும் 
அசை வரல் ஊசல்சீர் அழித்து ஒன்று பாடித்தை.     
அருளின கொல் தோழி? அருளின கொல் தோழி? 
இரவு எலாம், தோழி! அருளின - என்பவை,    
கணம் கொள் இடு மணல் காவி வருந்தப்    
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் -     
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே     
வணங்கி உணர்ப்பான் துறை.    

என, நாம்    
பாட, மறை நின்று கேட்டனன், நீடிய    
வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை     
யான் என உணர்ந்து, நீ நனி மருளத்    
தேன் இமிர் புன்னை பொருந்தித்,    
தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே.     

132    
உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்,     
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணை ஆக,     
இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள் இனம் இறைகொள - 
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,     
நிரை களிறு இடைபட, நெறி யாத்த இருக்கை போல்    
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்துத் 
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப! 

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால் 
'நல் நுதால் அஞ்சல் ஓம்பு' என்றதன் பயன் அன்றோ - 
பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள்,     
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?     

பல்மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால் 
'சின் மொழி! தெளி' எனத் தேற்றிய சிறப்பு அன்றோ - 
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள் 
நீடு இறை நெடு மென்தோள் நிரை வளை நெகிழ்ந்தந்தை? 

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ, மணந்தக்கால்     
'கொடும் குழாய்! தெளி' எனக் கொண்டதன் கொளை அன்றோ - 
பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள் 8
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை? 

என ஆங்கு -    
வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண் 
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போலப், 
பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி    
அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே!    

133    
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்     
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல், 
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த     
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்     
பூ மலர்ந்தவை போலப், புள் அல்கும் துறைவ! கேள்: 

'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 
'போற்றுதல்' என்பது, புணர்ந்தாரை பிரியாமை;     
'பண்பு' எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்;    
'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை;    
'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்; 
'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை; 
'நிறை' எனப்படுவது, மறை பிறர் அறியாமை;     
'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்; 
'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல். 

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி     
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் - கொண்க! - 
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்; 
நின்தலை வருந்தியாள் துயரம்    
சென்றனை களைமோ, பூண்க, நின் தேரே!    

134    
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் 
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின், 
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல், 
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,     
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப், 5
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேரப்,    
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப்     
பாயல் கொள்பவை போலக் கய மலர் வாய் கூம்ப, 
ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற, 
இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை;     

தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின், 1
இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே, 
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தரக், கடல் நோக்கி,     
அவலம் மெய்க் கொண்டது போலும் - அ·து எவன் கொலோ? 

நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின், 
கடும் பனி கைம்மிகக் கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே, 
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி,     
இடும்பை நோய்க்கு இகுவன போலும் - அ·து எவன் கொலோ? 

வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின், 
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே, 
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி, 
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன் கொலோ? 

என ஆங்கு;    
கரை காணாப் பௌவத்துக் கலம் சிதைந்து ஆழ்பவன் 
திரை தரப் புணை பெற்றுத், தீது இன்றி உய்ந்தாங்கு 
விரைவனர் காதலர் புகுதர,    
நிரை தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே.     

135    
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி    
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா -    
அயில் திணி நெடும் கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட 
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடு கோட்டைப்    
பயில் திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்: 

கடி மலர்ப் புன்னைக் கீழ் காரிகை தோற்றாளைத்     
தொடி நெகிழ்த்த தோளளாத் துறப்பாயால், மற்று நின்     
குடிமைக் கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ? 

ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை 
நோய் மலி நிலையளாத் துறப்பாயால், மற்று நின் 
வாய்மைக் கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ?     

திகழ் மலர்ப் புன்னைக் கீழ் திரு நலம் தோற்றாளை 
இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால், மற்று நின் 
புகழ்மைக் கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ?     

என ஆங்கு;    
சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே,     
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து, 
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர    
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு     
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவுமதி விரைந்தே! 

136    
இவர் திமில், எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால்,     
உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரித், 
தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக்,     
கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடல் சேர்ப்ப! 

முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் 
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் - 
அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம்     
வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?     

முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம் 
இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள் - 
கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி 
உடைப் பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ?    

நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால்,     
மறு வித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள் -     
அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள் 
சிறு வித்தம் இட்டான் போல், செறி துயர் உழப்பவோ?     

ஆங்கு,    
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்    
தீண்டற்கு அருளித் திறன் அறிந்து, எழீஇப்    
பாண்டியம் செய்வான் பொருளினும்    
ஈண்டுக, இவள் நலம்; ஏறுக, தேரே!    

137    
அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;    
பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே;    
பலவே யாமம்; பையுளும் உடைய;    
சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்;    
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து,     
எழில் எஞ்சு மயிலின் நடுங்கிச், சேக்கையின்    
அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே.    

மெல்லிய நெஞ்சு பையுள் கூரத், தம்    
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை    
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை     
வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆய் இழை! 
வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய். 

நகை முதல் ஆக, நட்பினுள் எழுந்த     
தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை    
வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆகப்,     
பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆய் இழை!     
பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய். 

'நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்துத், தம் 
சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப்     
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர்த் 
தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆய் இழை! 
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்.    

ஆங்கு -    
அன்னர் காதலர் ஆக, அவர் நமக்கு    
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்,    
யாங்கு ஆவது கொல்? - தோழி! எனையதூஉம்.    
தாங்குதல் வலித்தன்று ஆயின்,    
நீங்க அரிது உற்றஅன்று, அவர் உறீஇய நோயே.