அகநானூறு

அகநானூறு

களிற்றியாணை நிரை


109
பாடியவர்: கடுந்தொடைக் காவினார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால் யாத்த நீடு மரச் சோலை  5
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை
வெண் நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பாற் பட்டென
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்  10
கைப் பொருள் இல்லை ஆயினும் மெய்க்கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன் உறு குன்றம் பல விலங்கினவே.  15

110
பாடியவர்: போந்தைப் பசலையார், 
திணை: நெய்தற் திணை 
தோழி செவிலித்தாயிடம் சொன்னது

அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறிக்
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவன் நினக்கே கானல்  5
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனமாக எய்த வந்து
தட மென் பணைத்தோள் மட நல்லீரே  10
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி  15
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ எனக் காலின் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோர் உள்ளும்  20
என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால்
ஒழிகோ யான் என அழிதகக் கூறி
யான் பெயர்க என்ன நோக்கித் தான் தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும் என் கட்கே.  25

111
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர் வாழி தோழி அரச
யானை கொண்ட துகிற்கொடி போல
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி  5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல் வர
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய் களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள்  10
செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்
குருதி ஆரும் எருவைச் செஞ்செவி
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின் தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.  15

112
பாடியவர்: நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
மண் புனை நெடுங்கோடு உடைய வாங்கி
இரை நசைப் பரிக்கும் அரை நாள் கங்குல்
ஈன்று அணி வயவுப்பிணப் பசித்தென மறப் புலி  5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ்சோலை எமியம் என்னாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே
நாள் இடைப் படின் என் தோழி வாழாள்
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை  10
கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ வான்தோய் வெற்ப
கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அருங்காமம் புணர்ந்தமை அறியார்  15
தொன்று இயல் மரபின் மன்றல் அயரப்
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள் நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே.

113
பாடியவர்: கல்லாடனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

நன்று அல் காலையும் நட்பின் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
அமர் வீசு வண் மகிழ் அஃதைப் போற்றிக்
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்  5
இளங்கள் கமழும் நெய்தலஞ் செறுவின்
வளங் கெழு நன்னாடு அன்ன என் தோள் மணந்து
அழுங்கன் மூதூர் அலர் எடுத்து அரற்ற
நல்காது துறந்த காதலர் என்றும்
கல் பொரூஉ மெலியாப் பாடு இன் நோன் அடியன்  10
அல்கு வன் சுரைப் பெய்த வல்சியன்
இகந்தன ஆயினும் இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இருஞ்சுருணைக் கனி காழ் நெடு வேல்  15
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர்
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேயரிச் சின்னீர்
அறு துறை அயிர் மணல் படு கரைப் போகிச்  20
சேயர் என்றலின் சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு  25
மெய் இவண் ஒழியப் போகி அவர்
செய் வினை மருங்கிற் செலீஇயர் என் உயிரே.

114
பாடியவர்: பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்  5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவுமதி உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்  10
வானக மீனின் விளங்கித் தோன்றும்
அருங்கடிக் காப்பின் அஞ்சுவரு மூதூர்த்
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழைக் கண் அமை புரை பணைத்தோள்
அணங்கு சால் அரிவையைக் காண்குவம்  15
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.

115
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெஞ்சொல்
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்  5
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்
நோய் இலராக நம் காதலர் வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்ச்  10
சுடர்ப் பூங்கொன்றை ஊழுறு விளை நெற்று
அறை மிசைத் தாஅம் அத்த நீளிடைப்
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை
சினம் மிகு முன்பின் வாமான் அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை  15
நன்னர் ஆய் கவின் தொலையச் சேய் நாட்டு
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடா மையின் நீடியோரே.

116
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம்சொன்னது

எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர
பெரிய நாண் இலை மன்ற பொரி எனப்  5
புன்கு அவிழ் அகன் துறைப் பொலிய ஒண்ணுதல்
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்
மாழை நோக்கின் காழ் இயன் வன முலை
எஃகுடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே  10
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கை இகந்து
அலர் ஆகின்றால் தானே மலர் தார்
மை அணி யானை மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடல் பறந்தலை
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்  15
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி
இரங்கு இசை முரசம் ஒழியப் பரந்து அவர்
ஓடு புறம் கண்ட ஞான்றை
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.

117
பாடியவர்: பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய்  சொன்னது

மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்
அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி ஏர் வினை
வளங் கெழு திருநகர் புலம்பப் போகி
வெருவரு கவலை ஆங்கண் அருள் வரக்  5
கருங்கால் ஓமை ஏறி வெண்தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்
பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து  10
யான் போது துணைப்பத் தகரம் மண்ணாள்
தன் ஓரன்ன தகை வெங்காதலன்
வெறி கமழ் பன்மலர் புனையப் பின்னு விடச்
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல்
நெடுங்கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் 15
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான் யாற்று அவிர் அறல் போன்றே?

118
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்
தேம் கமழ் இணர வேங்கை சூடித்
தொண்டகப் பறைச் சீர்ப் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட  5
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங்கை யானைக் கோள் பிழைத்து இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்  10
என் ஆகுவள் கொல் தானே பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்
அளியள் தான் நின் அளி அலது இலளே.

119
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது, தோழி தலைவியிடம் சொன்னது

நுதலும் தோளும் திதலை அல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட
வருந்துவள் இவள் எனத் திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை 5
ஏறு பெறு பாம்பின் பைந்துணி கடுப்ப
நெறியயல் திரங்கும் அத்தம் வெறிகொள
உமண் சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது உரஞ்சிறந்து 10
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலைத்
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை
மடை அமை திண்சுரை மரக்காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்பத்
துணிகுவர் கொல்லோ தாமே துணிகொள 15
மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டிப்
படி முழம் ஊன்றிய நெடுநல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை
மை தோய் சிமைய மலைமுதல் ஆறே! 20

120
பாடியவர்: நக்கீரனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப
எல்லை பைப்பய கழிப்பிக் குடவயின்
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு  5
மதர் எழில் மழைக் கண் கலுழ இவளே
பெரு நாண் அணிந்த நறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே பெரும அதனால்
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி  10
நெடு நீர் இருங்கழி பரி மெலிந்து அசைஇ
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்  15
சிறு குரல் நெய்தல் எம் பெருங்கழி நாட்டே.