அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


121
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி நாள்
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணிச் 5
சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வால் இணர் தயங்கத் தீண்டிச்
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மராஅத்து
அல்குறு வரி நிழல் அசைஇ நம்மொடு
தான் வரும் என்ப தட மென் தோளி  10
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடைக்
கணை விசைக் கடு வளி எடுத்தலின் துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானே.  15

122
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்
வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள்
பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்  5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின்  10
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே
திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்
வளைக் கண் சேவல் வாளாது மடியின்  15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா  20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டன்ன
பல் முட்டின்றால் தோழி நம் களவே.

123
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்து காரிக் கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த  5
சில் ஐங்கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின் வறுமை அஞ்சுதி அழிதகவு
உடைமதி வாழிய நெஞ்சே நிலவு என
நெய்கனி நெடு வேல் எஃகிலை இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்  10
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல
ஒன்றிற் கொள்ளாய் சென்று தரு பொருட்கே.

124
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழி மொழிந்து
சென்றீக என்ப ஆயின் வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது நன்றே  5
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுறப்
பாசறை வருத்தம் வீட நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயல் புனை படைக்
கொய் சுவல் புரவிக் கை கவர் வயங்கு பரி  10
வண் பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய
காலை எய்தக் கடவுமதி மாலை
அந்திக் காவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியலகத்து இயம்பும்  15
நிரை நிலை ஞாயில் நெடுமதில் ஊரே.

125
பாடியவர்: பரணர், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, வாடைக் காற்றிடம் கூறுவதைப் போல் –  தலைவனின் வரவை அறிவிக்க

அரம் போழ் அவ்வளை தோள் நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங்காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலியன்ன வால் வீ தாஅய்
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்பத்  5
தாது உறு குவளைப் போது பிணி அவிழப்
படாஅப் பைங்கண் பாவடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழி தரப்  10
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரண் இல் காலை
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய் வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்  15
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த  20
பீடு இல் மன்னர் போல
ஓடுவை மன்னால் வாடை நீ எமக்கே.

126
பாடியவர்: நக்கீரர், 
திணை: மருதத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

நினவாய் செத்து நீ பல உள்ளிப்
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று  5
அறல் வார் நெடுங்கயத்து அரு நிலை கலங்க
மால் இருள் நடுநாள் போகித் தன் ஐயர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு
அவ் வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள்
நெடுங்கொடி நுடங்கு நறவு மலி மறுகில்   10
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம்
பயங் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகித்  15
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே கிளியெனச்
சிறிய மிழற்றும் செவ்வாய்ப் பெரிய
கயல் என அமர்த்த உண்கண் புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்  20
மின் நேர் மருங்குல் குறுமகள்
பின்னிலை விடாஅ மடங் கெழு நெஞ்சே.

127
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

இலங்கு வளை நெகிழச் சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து  5
நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவண்
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன  10
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செங்கோற்
கருங்கால் மராஅத்து வாஅல் மெல் இணர்ச்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடிக்
கல்லா மழவர் வில் இடம் தழீஇ  15
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.

128
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொளவரின் கனைஇக் காமம்
கடலினும் உரைஇக் கரை பொழியும்மே
எவன் கொல் வாழி தோழி மயங்கி  5
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ்சிலம்பில்
குறுஞ்சுனைக் குவளை வண்டு படச் சூடிக்
கான நாடன் வரூஉம் யானைக்  10
கயிற்றுப் புறத்தன்ன கல் மிசைச் சிறு நெறி
மாரி வானந்தலைஇ நீர் வார்பு
இட்டு அருங்கண்ண படுகுழி இயவின்
இருள் இடை மிதிப்புழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே?  15

129
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணையாயவர்
நின் மறந்து உறைதல் யாவது புல் மறந்து
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கிக்
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்  5
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழி முதல் கலித்த கோழ் இலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங்காய் பேடை ஊட்டிப்
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்குல் கூட்டும்  10
கலங்கு முனைச் சீறூர் கை தலை வைப்பக்
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்
செருப்புடை அடியர் தெண் சுனை மண்டும்
அருஞ்சுரம் அரியவல்ல வார் கோல்
திருந்திழைப் பணைத்தோள் தேன் நாறு கதுப்பின்  15
குவளை உண்கண் இவளொடு செலற்கு என
நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆயிழை நமக்கே.


130
பாடியவர்: வெண்கண்ணனார், 
திணை: நெய்தற் திணை 
தலைவன் தன் நண்பனிடம் சொன்னது

அம்ம வாழி கேளிர் முன் நின்று
கண்டனிர் ஆயின் கழறலிர் மன்னோ
நுண் தாது பொதிந்த செங்கால் கொழுமுகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரைப்
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை  5
எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும்  10
நற்தேர் வழுதி கொற்கை முன் துறை
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாண் முகம் மதைஇய நோக்கே.

131
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

விசும்புற நிவந்த மாத்தாள் இகணைப்
பசுங்கேழ் மெல்லிலை அருகு நெறித்தன்ன
வண்டுபடுபு இருளிய தாழ் இருங்கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெருந்தம் கோதை
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என  5
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ்சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடைமணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்  10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே.  15

132
பாடியவர்: தாயங்கண்ணனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இவ்வூரும் ஆகலின்
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி
வால் நிணப் புகவின் கானவர் தங்கை  5
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப
துளி தலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை  10
வேங்கை விரி இணர் ஊதிக் காந்தள்
தேனுடைக் குவி குலைத் துஞ்சி யானை
இருங்கவுள் கடாஅம் கனவும்
பெருங்கல் வேலி நும் உறைவின் ஊர்க்கே.