கலித்தொகை

கலித்தொகை

மருதக்கலி


76    
புனை இழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும், 
அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும், 
நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் 
'இனையள்' என்று எடுத்து ஓதற்கு அனையையோ, நீ? என    
வினவுதி ஆயின், விளங்கு இழாய்! கேள், இனி;    

'செவ் விரல் சிவப்பு ஊரச், சேண் சென்றாய்' என்று, அவன் 
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கே - 
'கௌவை நோய் உற்றவர், காணாது கடுத்த சொல் 
ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?    

ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு,    
நெடும் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ - 
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆகக் 
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?    

'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றித்,    
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ -
புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்    
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை?    

என ஆங்கு,    
அரிது இனி, ஆய் இழாய்! அது தேற்றல், புரிபு ஒருங்கு,    
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, 
தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின், எவன் கொலோ -    
நாம் செயற்பாலது இனி?    

77    
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும் 
துணை இன்றித் தளை விட்ட, தாமரை தனி மலர்,    
திரு முகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்    
அரி மதர் மழைக் கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல், 
தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி,    
மிக நனி சேர்ந்த அம் முகை மிசை அம் மலர்    
அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:    

தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக் 
கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் - 
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின் 
பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்? 

பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செலத், 
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் - 
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் 
என் உழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்?; 

மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங் கூந்தல்    
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் - 
நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம்மனை    
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்?    

ஆங்க,    
'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும்,    
இடையும், நிறையும் எளிதோ - நின் காணின்    
கடவுபு, கை தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு    
உடன் வாழ் பகை உடையார்க்கு?    

78    
பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை    
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்ப, 
உண் துறை உடைந்த பூப் புனல் சாய்ப்பப், புலந்து ஊடிப் 
பண்பு உடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,    
அது கைவிட்டு அகன்று ஒரீஇக், காக்கிற்பான் குடை நீழல் 
பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போலப் - பிறிதும் ஒரு 
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப    
இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு, 
நிறை புனல் நீங்க வந்து, அத்தும்பி அம் மலர்ப்    
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர!    

'நீக்கும்கால் நிறம் சாய்ந்து, புணரும்கால் புகழ் பூத்து    
நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோ தான் - 
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை    
கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை?    

'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் 
தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோ தான் - 
அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிகப், பிறர் கூந்தல்    
மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை?    

'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல் யான் 
செலின் நந்திச், செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோ தான்-    
முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்    
தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை? 

ஆங்க,    
ஐய! அமைந்தன்று; அனைத்து ஆகப் புக்கீமோ,    
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆகக், கையின்    
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,    
தண் பனி வைகல் எமக்கு?    

79    
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த 
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்    
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,    
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் 
வகை பெற செரீஇய வயந்தகம் போல், தோன்றும் 
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:    

அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; 
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்,    
'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' எனக், கமழும் நின்    
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ? 

புல்லல் எம் புதல்வனைப்; புகல் அகல் நின் மார்பில் 
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால், 
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் 
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ? 

கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி 
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால், 
'நண்ணியார்க் காட்டுவது இது' எனக் கமழும் நின் 
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ? 

என ஆங்கு,    
பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,    
நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி;    
ஆங்கே அவர் வயின் சென்றீ - அணி சிதைப்பான் - 
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.    

80    
நயம் தலை மாறுவார் மாறுக; மாறாக்,    
கயம் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்ப்,    
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கித் -    
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆகத் தைஇப்    
பவழம் புனைந்த பருதி சுமப்பக்    
கவழம் அறியா நின் கை புனை வேழம்    
புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,    
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே    
வருக! - எம் பாக மகன்!    

கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்    
தளர் நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே,    
'உளம்' என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்    
வளை நெகிழ்பு யாம் காணும் கால்;    

ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா, என்னும் நின் 
தே மொழி கேட்டல் இனிது; மற்று இன்னாதே,    
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் 
எவ்வ நோய் யாம் காணும் கால்;    

ஐய! 'திங்கள் குழவி! வருக!' என, யான் நின்னை    
அம்புலி காட்டல் இனிது; மற்று இன்னாதே,    
நல்காது, நுந்தை புறம் மாறப்பட்டவர்    
அல்குல் வரி யாம் காணும் கால்;    

ஐய! எம் காதில் கனம் குழை வாங்கிப், பெயர்தொறும்,    
போது இல் வறும் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் -    
ஏதிலார் கண் சாய - நுந்தை வியல் மார்பில்    
தாது தேர் வண்டின் கிளை பாடத், தைஇய    
கோதை பரிபு ஆடக், காண்கும்.    

81    
மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்    
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தரப், 
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், 
நலம்பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,    
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில், 
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்பப், 
பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்    
கால் வல் தேர் கையின் இயக்க, நடை பயிற்றா,    
ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்    
போல, வரும் என் உயிர்!    

பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்; 
பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத்,    
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,    
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றாப் 
பெருந்தகாய்! கூறு சில.    

எல் இழாய்! சேய் நின்று, நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே 
வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா,    
'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட,    
ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண 
வேய் மென் தோள் வேய்த் திறம் சேர்த்தலும், மற்று இவன்    
வாய் உள்ளின் போகான் அரோ!    

உள்ளி, உழையே ஒருங்கு படை விடக்    
கள்ளர் படர்தந்தது போலத், தாம் எம்மை    
எள்ளுமார் வந்தாரே, ஈங்கு!    

ஏதப்பாடு எண்ணிப், புரிசை வியல் உள்ளோர்    
கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போலச் 
சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின்    
ஆணை கடக்கிற்பார் யார்?    

அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன் மேல், 
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி    
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப,    
எதிர் வளி நின்றாய், நீ செல்;    

இனி! 'எல்லா! யாம், தீது இலேம்' என்று தெளிப்பவும், கைந் நீவி 
யாது ஒன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்,    
மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்,    
தாவா விருப்பொடு கன்று யாத்த உழிச் செல்லும்    
ஆ போல் படர் தக நாம்!    

82    
ஞாலம் வறம் தீரப் பெய்யக், குணக்கு ஏர்பு    
காலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலை 
பாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை,    
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு    
புக்க வழி எல்லாம் கூறு;    

கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்    
காயாமை வேண்டுவல் யான்;    

காயேம்;    
மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்    
அடக்கம் இல் போழ்தின் கண், தந்தை காமுற்ற    
தொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு, அவளும்    
மருப்புப் பூண் கையுறை ஆக அணிந்து -    
'பெருமான்! நகை முகம் காட்டு' என்பாள், கண்ணீர் 
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,    
வழிமுறைத் தாய் உழைப் புக்காற்கு, அவளும்    
மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,    
முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,    
'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,    
வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,    
ஆங்கே, 'அரி மதர் உண் கண் பசப்ப நோய் செய்யும் 
பெருமான் பரத்தைமை ஒவ்வாத' என்றாள்;    
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகித்    
தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்    
புலத் தகை புத்தேள் இல் புக்கான்- அலைக்கு ஒரு 
கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? - எல்லா! 
வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்    
பருந்து எறிந்தற்று ஆகக் கொள்ளும்; கொண்டாங்கே 
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை    
கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,    
வடுவும் குறித்தாங்கே செய்யும்; விடு, இனி;    
அன்ன பிறவும், பெருமான் அவள் வயின்    
துன்னுதல் ஓம்பித், திறவது இல் முன்னி, நீ    
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்    
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;    
அமைந்தது; இனி நின் தொழில்.    

83    
பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப், 
பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி, யாம் உலமர    
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் 
விளையாட்டிக் கொண்டு வரற்கு எனச் சென்றாய்,    
உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் 
நீட்டித்த காரணம் என்?    

கேட்டீ -    
பெரு மடல் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்    
குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கித், தளரும்    
பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண்,    
அகல் நகர் மீள்தருவான் ஆகப், புரி ஞெகிழ்பு    
நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல், 
சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி    
ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்    
கால்கோள்' என்று ஊக்கிக், கதுமென நோக்கித், 
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால் 
'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு,    
ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்    
செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா    
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்!    
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த    
புலம்பு எலாம் தீர்க்குவேம்மன், என்று இரங்குபு,    
வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத    
கள்வனால் தங்கியது, அல்லால், கதியாதி,    
ஒள் இழாய்! யான் தீது இலேன்;    

எள்ளலான், அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு 
எம் இல் வருதியோ? எல்லா! நீ; தன் மெய்க் கண்    
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,    
முந்தை இருந்து மகன் செய்த நோய்த் தலை,    
'வெந்த புண் வேல் எறிந்தற்றால்' வடுவொடு    
தந்தையும் வந்து நிலை.    

84    
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்    
நறு வடி ஆர் இற்றவை போல் அழியக்,    
கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்,    
சுரந்த என் மெல் முலைப் பால் பழுது ஆக - நீ    
நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா!    
கடவுள் கடி நகர் தோறும் இவனை    
வலம் கொளீஇ வா' எனச், சென்றாய், விலங்கினை 
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்    
யார் இல் தவிர்ந்தனை? கூறு;    

நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போது போல் கொண்ட 
குடை நிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ 
'இவன் மன்ற, யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா 
மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல் நகர்    
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்    
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர்    
தம் தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,    
ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார்; 'பிறன் பெண்டிர் 
ஈத்தவை கொள்வான் ஆம், இ·து ஒத்தன்; சீத்தை! 
செறு தக்கான் மன்ற பெரிது';    

சிறு பட்டி! ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட    
மோதிரம் யாவோ? யாம் காண்கு;    
அவற்றுள், நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச் 
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்;    
குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்    
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்    
பொறி ஒற்றிக் கொண்டு ஆள்வல்' என்பது தன்னை 
அறீஇய செய்த வினை;    

அன்னையோ? இ·து ஒன்று;    
முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்    
வெந்த புண் வேல் எறிந்தற்றா, இ·து ஒன்று;    
தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக் கண் 
தந்தார் யார், எல்லாஅ! இது?    

இ·து ஒன்று, என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு என்னும்    
தன் நலம் பாடுவி, தந்தாளா? நின்னை,    
இது தொடுக என்றவர் யார்?    

அஞ்சாதி; நீயும் தவறு இலை; நின் கை இது தந்த 
பூ எழில் உண் கண் அவளும் தவறு இலள்!    
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?    
மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள் - 
தான் யாரோ? என்று வினவிய, நோய்ப்பாலேன்    
யானே தவறு உடையேன்!    

85    
காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு 
பொடி அழல் புறம் தந்த செய்வுறு கிண்கிணி;    
உடுத்தவை கைவினைப் பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் 
மை இல் செந் துகிர்க் கோவை அவற்றின் மேல்    
தைஇய பூந் துகில் ஐது கழல் ஒரு திரை    
கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய    
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி;    

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்    
செறியக் கட்டி ஈர் இடைத் தாழ்ந்த    
பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்    
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்;    

சூடின, இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு 
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மூக் காழ் மேல் 
சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூல் ஆக    
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாணச்    
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை;    

ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் 
செல்வு உறு திண் தேர் கொடும் சினை கைப் பற்றிப் 
பைபயத் தூங்கும் நின் மெல் விரல் சீறடி    
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ    
செம்மால் நின் பால் உண்ணிய;    

பொய் போர்த்துப், பாண் தலை இட்ட பல வல் புலையனைத்    
தூண்டிலா விட்டுத் துடக்கித் தான் வேண்டியார்    
நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்    
நுந்தை பால் உண்டி சில;    

நுந்தை வாய், மாயச் சூள் தேறி மயங்கு நோய் கைமிகப்    
பூ எழில் உண் கண் பனி பரப்பக் கண் படா    
ஞாயர் பால் உண்டி சில;    

அன்னையோ, யாம் எம் மகனைப் பாராட்ட கதுமெனத் 
தாம் வந்தார் தம் பால் அவரொடு தம்மை    
வருக என்றார் யார் கொல்லோ ஈங்கு;    

என் பாலல், பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் 
பாராட்டைப் பாலோ சில;    

செரு குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்    
வரிசைப் பெரு பாட்டொடு எல்லாம் பருகீத்தை    
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.