குறுந்தொகை
குறுந்தொகை
326. நெய்தல் - தலைவி கூற்று
துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்
கடலாடு மகளிர் கான லிழைத்த
சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒருநாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே.
327. குறிஞ்சி - தலைவி கூற்று
நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின்
நயனில ராகுதல் நன்றென உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்
நின்னிலை கொடிதால் தீய கலுழி
நம்மனை மடமகள் இன்ன மென்மைச்
சாயலள் அளியள் என்னாய்
வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே.
-அம்மூவனார்.
328. நெய்தல் - தோழி கூற்று
சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி
அலவன் சிறுமனை சிதையப் புணரி
குணில்வாய் முரசின் இயங்குந் துறைவன்
நல்கிய நாள்தவச் சிலவே அலரே
வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
புலிநோக் குறழ்நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.
-பரணர்.
329. பாலை - தலைவி கூற்று
கான விருப்பை வேனல் வெண்பூ
வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயிலிருள் நடுநாள் துயிலரி தாகித்
தெண்ணீர் நிகர்மலர் புரையும்
நன்மலர் மழைக்கணிற் கௌியவாற் பனியே.
-ஓதலாந்தையார்.
330. மருதம் - தலைவி கூற்று
நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட
நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.
-கழார்க் கீரனெயிற்றியனார்.
331. பாலை - தோழி கூற்று
நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை
ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று
கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும்
கடுங்கண் யானைக் கான நீந்தி
இரப்பர்கொல் வாழி தோழி நறுவடிப்
பைங்கால் மாஅத் தந்தளி ரன்ன
நன்மா மேனி பசப்ப
நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்கே.
-வாடாப் பிரபந்தனார்.
332. பாலை - தோழி கூற்று
வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்
நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறுயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி யிழிதரு
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே.
-மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்.
333. குறிஞ்சி - தோழி கூற்று
குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன்
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை
நறுந்தழை மகளிர் ஓப்புங் கிள்ளையொடு
குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம் வீடத்
துணியின் எவனோ தோழிநம் மறையே.
-உழுந்தினைம்புலவனார்.
334. நெய்தல் - தலைவி கூற்று
சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்
றெவனோ தோழி நாமிழப் பதுவே.
-இளம்பூதனார்.
335. குறிஞ்சி - தோழி கூற்று
நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல்
வல்விற் கானவர் தங்கைப்
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே.
-இருந்தையூர்க் கொற்றன் புலவனார்.
336. குறிஞ்சி - தோழி கூற்று
செறுவர்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே.
-குன்றியனார்.
337. குறிஞ்சி - தலைவன் கூற்று
முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே.
-பொதுக்கயத்துக் கீரந்தையார்.
338. பாலை - தோழி கூற்று
திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு
அரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ
வீததை வியலரில் துஞ்சிப் பொழுதுசெலச்
செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப்
பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம்
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள்
விளங்குநக ரடங்கிய கற்பின்
நலங்கே ழரிவை புலம்பசா விடவே.
-பெருங்குன்றூர்கிழார்.
339. குறிஞ்சி - தோழி கூற்று
நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை
உறையறு மையிற் போகிச் சாரற்
குறவர் பாக்கத் திழிதரு நாடன்
மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க்
குவளை யுண்கண் கலுழப்
பசலை யாகா வூங்கலங் கடையே.
-பேயார்.
340. நெய்தல் - தலைவி கூற்று
காமங் கடையிற் காதலர்ப் படர்ந்து
நாமவர்ப் புலம்பி னம்மோ டாகி
ஒருபாற் படுதல் செல்லா தாயிடை
அழுவ நின்ற அலர்வேய் கண்டல்
கழிபெயர் மருங்கி னொல்கி யோதம்
பெயர்தரப் பெயர்தந் தாங்கு
வருந்துந் தோழியவ ரிருந்தவென் நெஞ்சே.
-அம்மூவனார்.
341. நெய்தல் - தலைவி கூற்று
பல்வீ பட்ட பசுநனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச்
சினையினி தாகிய காலையுங் காதலர்
பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவ தன்றென
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழியென் வன்க ணானே.
-மிளைகிழார் நல்வேட்டனார்.
342. குறிஞ்சி - தோழி கூற்று
கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.
-காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்.
343. பாலை - தோழி கூற்று
நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புலிப் பகுவா யேற்றை
வெண்கொடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே.
-ஈழத்துப் பூதன்றேவனார்.
344. முல்லை - தலைவி கூற்று
நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைப் பனிக்கடுந் திங்கட்
புலம்பயி ரருந்த அண்ண லேற்றொடு
நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்
பால்வார்பு குழவி யுள்ளி நிரையிறந்
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை
அரும்பெறற் பொருட்பிணிப் போகிப்
பிரிந்துறை காதலர் வரக்காண் போரே.
-குறுங்குடி மருதனார்.
345. நெய்தல் - தோழி கூற்று
இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர்
வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇத்
தங்கினி ராயின் தவறோ தெய்ய
தழைதாழ் அல்குல் இவள்புலம் பகலத்
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலியெம் சிறுநல் லூரே.
-அண்டர்மகன் குறுவழுதியார்.
346. குறிஞ்சி - தோழி கூற்று
நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப
மன்றம் போழு நாடன் தோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும்
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவும் ஆகா தஃகி யோனே.
-வாயிலிளங் கண்ணனார்.
347. பாலை - தலைவன் கூற்று
மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்
குமரி வாகைக் கோலுடை நறுவீ
மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்
கான நீளிடைத் தானு நம்மொடு
ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.
-காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார்.
348. பாலை - தோழி கூற்று
தாமே செல்ப வாயிற் கானத்துப்
புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிந்த
சிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய்
இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற்
பூணக வனமுலை நனைத்தலும்
காணார் கொல்லோ மாணிழை நமரே.
-மாவளத்தனார்.
349. நெய்தல் - தலைவி கூற்று
அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும்
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம்
கொள்வாம் என்றி தோழி கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்தவை தாவென் சொல்லினும்
இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.
-சாத்தனார்.
350. பாலை - தோழி கூற்று
அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடைக் கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.
-ஆலத்தூர் கிழார்.