நற்றிணை

நற்றிணை

நற்றிணை


21 முல்லை - மருதன் இளநாகனார்

விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர் 
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ 
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக 
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு 
ஏமதி வலவ தேரே உதுக் காண் 
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன 
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் 
காமரு தகைய கான வாரணம் 
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் 
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி 
நாள் இரை கவர மாட்டி தன் 
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே

வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது

22 குறிஞ்சி

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை 
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி 
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி 
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன் 
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி 
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் 
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் 
வந்தனன் வாழி தோழி உலகம் 
கயம் கண் அற்ற பைது அறு காலை 
பீளடு திரங்கிய நெல்லிற்கு 
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே

வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது

23 குறிஞ்சி - கணக்காயனார்

தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே 
வடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின் 
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடிக் கொள 
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய 
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் 
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச் 
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் 
தெண் நீர் மலரின் தொலைந்த 
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே

தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது

24 பாலை - கணக்காயனார்

பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு 
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின் 
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு 
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம் 
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் 
சேறும் நாம் எனச் சொல்ல சேயிழை 
நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனையே 
செயல்படு மனத்தர் செய்பொருட்கு 
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே

பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது

25 குறிஞ்சி - பேரி சாத்தனார்

அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன 
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் 
நறுந் தாது ஆடிய தும்பி பசுங் கேழ்ப் 
பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம் 
வள மலை நாடன் நெருநல் நம்மொடு 
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ 
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது 
அல்லல் அன்று அது காதல் அம் தோழி 
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா 
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி 
கண்டும் கழல் தொடி வலித்த என் 
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே

தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது

26 பாலை - சாத்தந்தையார்

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே 
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை 
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப் 
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய 
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் 
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு 
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று 
பொன் பொதிந்தன்ன சுணங்கின் 
இருஞ் சூழ் ஓதி பெருந் தோளாட்கே

தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை 
சொல்லி தோழி செலவு அழுங்குவித்தது

27 நெய்தல் - குடவாயிற் கீரத்தனார்

நீயும் யானும் நெருநல் பூவின் 
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி 
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் 
கழி சூழ் கானல் ஆடியது அன்றி 
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் 
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் 
எவன் குறித்தனள் கொல் அன்னை கயந்தோறு 
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம் 
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி 
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல 
சிறு பாசடைய நெய்தல் 
குறுமோ சென்று எனக் கூறா தோளே

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது

28 பாலை - முதுகூற்றனார்

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும் 
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும் 
அன்னை போல இனிய கூறியும் 
கள்வர் போலக் கொடியன் மாதோ 
மணி என இழிதரும் அருவி பொன் என 
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து 
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் 
ஓடு மழை கிழிக்கும் சென்னி 
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் 
தோழி சொல்லியது - குறை நயப்பும் ஆம்

29 பாலை - பூதனார்

நின்ற வேனில் உலந்த காந்தள் 
அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது 
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென 
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய 
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி 
யாங்கு வல்லுநள்கொல்தானே யான் தன் 
வனைந்து ஏந்து இள முலை நோவகொல் என 
நினைந்து கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் 
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ 
வெய்ய உயிர்க்கும் சாயல் 
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே

மகள் போக்கிய தாய் சொல்லியது

30 மருதம் - கொற்றனார்

கண்டனென் மகிழ்ந கண்டு எவன்செய்கோ 
பாணன் கையது பண்புடைச் சீறியாழ் 
யாணர் வண்டின் இம்மென இமிரும் 
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் 
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் 
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி 
கால் ஏமுற்ற பைதரு காலை 
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு 
பலர் கொள் பலகை போல 
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும் 
அறியேன் என்றார்க்குத் தோழி சொல்லியது

31 நெய்தல் - நக்கிரனார்

மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கி 
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை 
பாய் இரும் பனிக் கழி துழைஇ பைங் கால் 
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ சுரக்கும் 
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே 5 
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து 
யானும் இனையேன் ஆயின் ஆனாது 
வேறு பல் நாட்டில் கால் தர வந்த 
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் 
நெடுஞ் சினை புன்னை கடுஞ் சூல் வெண் குருகு 10 
உலவுத் திரை ஓதம் வெரூஉம் 
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே

தலைவன் சிறைப்புறத்தானாக தலைவி வன்புறை எதிர் அழிந்தது

32 - குறிஞ்சி - கபிலர்

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் 
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி 
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் 
வருந்தினன் எனபது ஓர் வாய்ச் சொல் தேறாய் 
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி 5 
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு 
அரிய வாழி தோழி பெரியோர் 
நாடி நட்பின் அல்லது 
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே

தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது

33 - பாலை - இளவேட்டனார்

படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை 
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை 
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து 
கல்லுடை படுவில் கலுழி தந்து 
நிறை பெயல் அறியாக் குன்றத்து ஊண் அல்லில் 
துவர் செய் ஆடை செந் தொடை மறவர் 
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை 
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் 
வல்லுவம்கொல்லோ மெல்லியல் நாம் என 
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி 
நல் அக வன முலைக் கரை சேர்பு 
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே 33

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு 
அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது

34 - குறிஞ்சி - பிரமசாரி

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த 
பறியாக் குவளை மலரொடு காந்தள் 
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி 
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் 
அருவி இன் இயத்து ஆடும் நாடன் 5 
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் 
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து 
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி 
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் 
கடவுள் ஆயினும் ஆக 10 
மடவை மன்ற வாழிய முருகே

தோழி தெய்வத்திற்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது

35 - நெய்தல் - அம்மூவனார்

பொங்கு திரை பொருத வார் மணல் அடை கரைப் 
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி 
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப் 
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து 
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 5 
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் 
துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம் 
பண்டும் இற்றே கண்டிசின்தெய்ய 
உழையின் போகாது அளிப்பினும் சிறிய 
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ மகிழ்ந்தோர் 10 
கட்களி செருக்கத்து அன்ன 
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே

மணமகனைப் பிற்றை ஞான்று புக்க தோழி நன்கு 
ஆற்றுவித்தாய் என்ற தலைமகற்குச் சொல்லியது

36 - குறிஞ்சி - சீத்தலை சாத்தனார்

குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை 
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி 
தாழ் நீர் நனந் தலை பெருங் களிறு அடூஉம் 
கல்லக வெற்பன் சொல்லின் தேறி 
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து 5 
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி 
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து 
ஆனா கௌவைத்து ஆக 
தான் என் இழந்தது இல் அழுங்கல் ஊரே

இரவுக்குறிச் சிறைப் புறமாகத் தோழி சொல்லியது

37 - பாலை - பேரி சாத்தனார்

பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனந் தலை 
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி 
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று 
இவளடும் செலினோ நன்றே குவளை 
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ 5 
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி 
அன்பிலிர் அகறிர் ஆயின் என் பரம் 
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து 
அணங்குடை அருந் தலை உடலி வலன் ஏர்பு 
ஆர் கலி நல் ஏறு திரிதரும் 10 
கார் செய் மாலை வரூஉம் போழ்தே

வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி சொல்லியது

38 - நெய்தல் - உலோச்சனார்

வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப 
பாட்டம் பொய்யாது பரதவர் பகர 
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் 
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு 
மெல்லம் புலம்பன் பிரியின் புல்லென 5 
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர் 
கழி சூழ் படப்பை காண்டவாயில் 
ஒலி கா ஓலை முள் மிடை வேலி 
பெண்ணை இவரும் ஆங்கண் 
வெள் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே 10

தலைவி வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

39 - குறிஞ்சி - மருதன் இளநாகனார்

சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் 
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென 
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ 
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்தி 
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் 5 
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் 
கண்ணே கதவ அல்ல நண்ணார் 
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு 
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் 
பெரு பெயர் கூடல் அன்ன நின் 10 
கரும்புடைத் தோளும் உடைய வால் அணங்கே

இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது

40 - மருதம்

நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட 
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர் 
பெரும் பாண் காவல் பூண்டென ஒரு சார் 
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப 
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் 5 
புனிறு நாறு செவிலியடு புதல்வன் துஞ்ச 
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் 
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் 
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த 
நள்ளென் கங்குல் கள்வன் போல 10 
அகல் துறை ஊரனும் வந்தனன் 
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே

தலைமகட்குச் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது