நற்றிணை

நற்றிணை

நற்றிணை


81 முல்லை - அகம்பன்மாலாதனார்

இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று 
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் 
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி 
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப 
பூண்கதில் பாக நின் தேரே பூண் தாழ் 
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப 
அழுதனள் உறையும் அம் மா அரிவை 
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய 
முறுவல் இன் நகை காண்கம் 
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே

வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது

82 குறிஞ்சி - அம்மூவனார்

நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த 
வேய் வனப்புற்ற தோளை நீயே 
என் உயவு அறிதியோ நல் நடைக் கொடிச்சி 
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் 
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே 
போகிய நாகப் போக்கு அருங் கவலை 
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் 
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண 
வெள் வசிப் படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ 
கோள் நாய் கொண்ட கொள்ளைக் 
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே

தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது

83 குறிஞ்சி - பெருந்தேவனார்

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய 
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய 
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் 
வாய்ப் பறை அசாஅம் வலி முந்து கூகை 
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் 
எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும் 
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் 
துஞ்சாது அலமரு பொழுதின் 
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே

இரவுக்குறி வந்த தலைவன் 
சிறைப்புறத்தானாக தோழி சொல்லியது

84 பாலை

கண்ணும் தோளும் தண் நறுங்கதுப்பும் 
திதலை அல்குலும் பல பாராட்டி 
நெருநலும் இவணர் மன்னே இன்றே 
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர் 
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம் 
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற 
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன 
உவர் எழு களரி ஓமை அம் காட்டு 
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம் 
ஏகுவர் என்ப தாமே தம்வயின் 
இரந்தோர் மாற்றல் ஆற்றா 
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே

பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது

85 குறிஞ்சி - நல்விளக்கனார்

ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும் 
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும் 
அம்பல் மூதூர் அரவம் ஆயினும் 
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் 
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும் 
ஆர் இருள் கடுகிய அஞ்சு வரு சிறு நெறி 
வாரற்கதில்ல தோழி சாரல் 
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை 
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு 
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் 
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே

தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது

86 பாலை - நக்கீரர்

அறவர் வாழி தோழி மறவர் 
வேல் என விரிந்த கதுப்பின் தோல 
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் 
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்தகக் 
கை வல் வினைவன் தையுபு சொரிந்த 
சுரிதக உருவின ஆகிப் பெரிய 
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை 
நல் தளிர் நயவர நுடங்கும் 
முற்றா வேனில் முன்னி வந்தோரே

குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை 
கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது

87 நெய்தல் - நக்கண்ணையார்

உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் 
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் 
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு 
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு 
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப் 
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை 
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் 
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் 
பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே

வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி 
கனாக் கண்டு தோழிக்கு உரைத்தது

88 குறிஞ்சி - நல்லந்துவனார்

யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை 
வருந்தல் வாழி தோழி யாம் சென்று 
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக் 
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு 
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண் 
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி 
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது 
கண்ணீர் அருவியாக 
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது

89 முல்லை - இளம் புல்லூர்க் காவிதி

கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர் 
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி 
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை 
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள் 
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 
அகல் இலை அகல வீசி அகலாது 
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை 
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு 
இன்னும் வருமே தோழி வாரா 
வன்கணாளரோடு இயைந்த 
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே

பொருள் முற்றி மறுத்தந்தான் எனக் 
கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது

90 மருதம் - அஞ்சில் அஞ்சியார்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் 
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா 
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த 
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு 
வாடா மாலை துயல்வர ஓடி 
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் 
பூங் கண் ஆயம் ஊக்க ஊங்காள் 
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி 
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள் 
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா 
நயன் இல் மாக்களடு கெழீஇ 
பயன் இன்று அம்ம இவ் வேந்துடை அவையே

தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய் 
பாணனை நெருங்கி வாயில்மறுத்தது

91 நெய்தல் - பிசிராந்தையார்

நீ உணர்ந்தனையே தோழி வீ உகப் 
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் 
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ பெடையோடு 
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை 
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன் 
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை 
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் 
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் 
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய 
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் 
கடு மாப் பூண்ட நெடுந் தேர் 
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே

தோழி தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது

92 பாலை

உள்ளார்கொல்லோ தோழி துணையடு 
வேனில் ஓதி பாடு நடை வழலை 
வரி மரல் நுகும்பின் வாடி அவண 
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் 
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் 
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர் 
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர 
வில் கடிந்து ஊட்டின பெயரும் 
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே

பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது

93 குறிஞ்சி - மலையனார்

பிரசம் தூங்க பெரும் பழம் துணர 
வரை வெள் அருவி மாலையின் இழிதர 
கூலம் எல்லாம் புலம்புஉக நாளும் 
மல்லற்று அம்ம இம் மலை கெழு வெற்பு எனப் 
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட 
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி 
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள் 
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள் 
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய 
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் 
மயிர்க் கண் முரசினோரும் முன் 
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே

வரைவு கடாயது

94 நெய்தல் - இளந்திரையனார்

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில் 
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் 
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி 
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ 
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப குவி இணர்ப் 
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் 
என்ன மகன்கொல் தோழி தன்வயின் 
ஆர்வம் உடையர் ஆகி 
மார்பு அணங்குறுநரை அறியாதோனே

தலைமகன்சிறைப்புறமாக தலைவி 
தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது

95 குறிஞ்சி - கோட்டம்பலவனார்

கழை பாடு இரங்க பல் இயம் கறங்க 
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று 
அதவத் தீம் கனி அன்ன செம் முகத் 
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க 
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து 
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் 
குன்றகத்ததுவே குழு மிளைச் சீறூர் 
சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி 
கொடிச்சி கையகத்ததுவே பிறர் 
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே

தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து 
இத்தன்மைத்து என உரைத்தது

96 நெய்தல் - கோக்குளமுற்றனார்

இதுவே நறு வீ ஞாழல் மா மலர்தாஅய் 
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை 
புதுவது புணர்ந்த பொழிலே உதுவே 
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி 
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 
துவரினர் அருளிய துறையே அதுவே 
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல் 
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ 
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு 
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி 
பைஇப் பையப் பசந்தனை பசப்பே

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு 
உரைப்பாளாய் வரைவு கடாயது

97 முல்லை - மாறன் வழுதி

அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா 
எவ்வ நெஞ்சத்து எ·கு எறிந்தாங்கு 
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும் 
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே 
அதனினும் கொடியள் தானே மதனின் 
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியடு 
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என 
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் 
தண்டலை உழவர் தனி மட மகளே

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது

98 குறிஞ்சி - உக்கிரப் பெருவழுதி

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் 
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி 
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி 
நூழை நுழையும் பொழுதில் தாழாது 
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென 
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன் 
கல் அளைப் பள்ளி வதியும் நாடன் 
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த் 
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி 
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே 
வைகலும் பொருந்தல் ஒல்லாக் 
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே

இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் 
தோழி வரைவு கடாயது

99 முல்லை - இளந்திரையனார்

நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை 
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் 
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் 
தாம் வரத் தௌ த்த பருவம் காண்வர 
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று 
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை 
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் 
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல 
பிடவமும் கொன்றையும் கோடலும் 
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் 
தோழி பருவம் அன்று என்று வற்புறுத்தியது

100 மருதம் - பரணர்

உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர் 
மாரிக் கொக்கின் கூரல் அன்ன 
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் 
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின் 
வான் கோல் எல் வளை வெளவிய பூசல் 
சினவிய முகத்து சினவாது சென்று நின் 
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்ப் 
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் 
தேர் வண் மலையன் முந்தை பேர் இசைப் 
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் 
மண் ஆர் கண்ணின் அதிரும் 
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே

பரத்தை தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப 
விறலிக்கு உடம்படச்சொல்லியது