புறநானூறு

புறநானூறு

பாடல்கள்


341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!
பாடியவர்: பரணர் 
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 

வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்,
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
.. .. .. . .. .. ... .. .. .. ..
புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
‘பூக்கோள்’ என ஏஎய்க், கயம்புக் கனனே;
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்,
சுணங்கணி வனமுலை, அவளடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ-
ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்,
நீள்இலை எ·கம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று- எனப்
படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக்
களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்,
பெருங்கவின் இழப்பது கொல்லோ,
மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே!

342. வாள்தக உழக்கும் மாட்சியர்!
பாடியவர்: அரிசில் கிழார் 
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 

‘கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள்,
ஏனோர் மகள்கொல் இவள்?’ என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை;
திருநயத் தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;
பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம்,
தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅ மையின் பேரமர் செய்தலின்,
கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா,
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சி யவர் இவள் தன்னை மாரே.

343. ஏணி வருந்தின்று!
பாடியவர்: பரணர் 
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 

‘மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை யம்பியின் மனைமறுக் குந்து!
மனைக் கவைஇய கறிமூ டையால்.
கலிச் சும்மைய கரைகலக் குறுந்து
கலந் தந்த பொற் பரிசம்
கழித் தொணியான் கரைசேர்க் குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன,
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்’ எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் _ வந்தோர்,
வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே_பருந்துஉயிர்த்து
இடைமதில் சேக்கும் புரிசைப் 
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே?

344. இரண்டினுள் ஒன்று! 
பாடியவர்: அடைநெடுங் கல்வியார் 
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) 

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,
செறிவளை மகளிர், பறந்தெழுந்து,
துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;
புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து,
பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;
இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .-
கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.

345. பன்னல் வேலிப் பணை நல்லூர்! 
பாடியவர்: அடைநெடுங் கல்வியார்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) 

களிறு அணைப்பக் கலங்கின, காஅ;
தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலங் கழாஅலின், துறை கலக்குற்றன;
தெறல் மறவர் இறை கூர்தலின்,
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்,
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை,
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி,
‘நிரல்அல் லோர்க்குத் தரலோ இல்’ எனக்;
கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினும், அன்னோ !
என்னா வதுகொல் தானே-
பன்னல் வேலிஇப் பணைநல் லூரே!

346. பாழ் செய்யும் இவள் நலினே! 
பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதி 
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 

பிற .. .. .. ள பால் என மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்;
ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்_
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல்
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.

347. வேர் துளங்கின மரனே! 
பாடியவர்: கபிலர் 
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 

உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் ப·றேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.
மணநாறு மார்பின், மறப்போர் அகுதை
குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,
. . . . . . . . . . . . . .
என்னா வதுகொல் தானே? . .. . .
விளங்குறு பராரைய வாயினும், வேந்தர்
வினைநவில் யானை பிணிப்ப,
வேர்துளங் கினநம் ஊருள் மரனே.

348. பெருந்துறை மரனே! 
பாடியவர்: பரணர் 
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,
கள்ளரிக்கும் குயம், சிறுசின்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,
குவளை உண்கண் இவளைத், தாயே
ஈனா ளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே.

349. ஊர்க்கு அணங்காயினள்! 
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார் 
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 

நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,
நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே;
இ·துஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று,
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை,
மரம்படு சிறுதீப் போல,
அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே.

350. வாயிற் கொட்குவர் மாதோ! 
பாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் 
திணை: காஞ்சி 
துறை: மகட்பாற் காஞ்சி 

தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,
சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே, தாங்காது?
படுமழை உருமின் இறங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்து, எம்
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எ·கின் சிவந்த உண்கண்,
தொடியுறழ் முன்கை, இளையோள்
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.